பகல் கனவு காண்கிறார் பிரதமர் மோடி ; காங்கிரஸ் கட்சியின் ரூ.285 கோடியை திருடிய பாஜக… செல்வப்பெருந்தகை குற்றச்சாட்டு…!!

Author: Babu Lakshmanan
25 March 2024, 12:13 pm

இண்டியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து தமிழ்நாட்டில் விரைவில் ராகுல் காந்தி சூறாவளி பிரச்சாரம் செய்ய இருப்பதாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப் பெருந்தகை தெரிவித்துள்ளார்.

சென்னை ராயப்பேட்டையில் உள்ள சத்தியமூர்த்தி பவனில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப் பெருந்தகை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது :- நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு ஏ மற்றும் பி படிவம் வழங்கப்பட்டது. இன்று முதல் காங்கிரஸ் வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல் செய்ய உள்ளனர்.

விளவங்கோடு இடைத்தேர்தல் வேட்பாளர் இன்று மாலைக்குள் அறிவிக்க இருக்கிறோம். மீதமுள்ள இரண்டு தொகுதி வேட்பாளர்களையும் இன்று அறிவிக்க உள்ளோம். பாஜக அரசால் காங்கிரஸ் கட்சியின் நிதி ஏறக்குறைய 285 கோடி திருடப்பட்டுள்ளது. மோடி காங்கிரஸ் மற்றும் ஜனநாயகத்திற்காக குரல் கொடுக்கும் கட்சிகளை தொடர்ந்து ஒடுக்கி வருகிறார்.
2017-18 நிதி ஆண்டில் நாங்கள் தாமதமாக தாக்கல் செய்தோம் என்பதற்காகவும், இன்னொரு வழக்கு தாக்கல் செய்யவில்லை என்பதற்காகவும் 11 கணக்குகள் மோடி அரசால் முடக்கப்பட்டுள்ளது.

காங்கிரஸ் கட்சியிலிருந்து ரூபாய் 115.32 கோடியை பாஜக எடுத்து உள்ளது, இதனை காங்கிரட் கட்சி வன்மையாக கண்டிக்கிறது.
காங்கிரசை முடக்க வேண்டும், தலைவர்கள் மக்களை சந்திக்கக் கூடாது, போக்குவரத்திற்கு இடையூறு செய்ய வேண்டும், நிதி ஆதாரத்தை முடக்கினால் அரசியல் இயக்கம் முடங்கிவிடும், காங்கிரஸையும் முடக்கி விடலாம் என்று மோடி பகல் கனவு கண்டு கொண்டிருக்கிறார், மக்களுக்கான இயக்கம் காங்கிரஸ் கட்சி. பணம் ஒரு பொருட்டே கிடையாது, மக்களை நம்பி காங்கிரஸ் கட்சி உள்ளது, மக்களுக்கான கட்சி காங்கிரஸ் கட்சி.

கூகுளின் ஏ.ஐ யான ஜெமினி ஏஐ தலைவர்களின் ரகசியங்கள் மற்றும் நாட்டின் நடப்புகளை சேகரித்து வைத்துள்ளது. அது நரேந்திர மோடி என்று கேட்டவுடன் பாசிஸ்ட் என்று சொல்கிறது. அப்படி பாசிஸ்ட் என்று ஒரு இயந்திரம் சொல்வதை தடை செய்ய வேண்டும் என்று அரசியல் கட்சிக்கு தடை செய்த மோடி, மக்களுடைய வளர்ச்சிக்கு தடை செய்த மோடி, மக்களின் பாதுகாப்பிற்கு தடை செய்த மோடி தற்போது கம்ப்யூட்டருக்கும் தடை செய்கிறார். இதையெல்லாம் காங்கிரஸ் கட்சி கண்டிக்கிறது.

ஏற்கனவே தேர்தல் ஆணையம் மற்றும் உச்ச நீதிமன்றத்திடம் வி. பேட் 100% எண்ணப்பட வேண்டும் என்று கோரிக்கை வைத்து உள்ளோம். தோழமைக் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து ராகுல் காந்தி சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார், எனக் கூறினார்.

இதில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிடும் திருவள்ளூர் வேட்பாளர் சசிகாந்த் செந்தில், கரூர் வேட்பாளர் ஜோதிமணி, கடலூர் வேட்பாளர் விஷ்ணு பிரசாத், கன்னியாகுமரி வேட்பாளர் விஜய் வசந்த் ஆகியோர் உடன் இருந்தனர்.

  • G.V. Prakash understood Sainthavi at the time of separation.. Affection blossomed during the divorce case பிரியும் நேரத்தில் சைந்தவியை புரிந்து கொண்ட ஜி.வி பிரகாஷ்.. விவாகரத்து வழக்கில் மலர்ந்த பாசம்!