என் நண்பன் ஓபிஎஸ் எனக்காக செய்த தியாகம்… அம்மா இப்போ இல்லை… ஆனால் பிரதமர் இருக்கிறார் ; டிடிவி தினகரன் பேச்சு..!!

Author: Babu Lakshmanan
25 March 2024, 11:35 am
Quick Share

ஒ.பி ரவீந்திரநாத்தின் தேனி தொகுதியை தட்டிப் பறிப்பது தவறு என நினைத்திருந்தேன் என்றும், ஆனால் அவர் என்னிடத்தில் தேனி தொகுதியில் போட்டியிட கூறினார் என பிரச்சாரக் கூட்டத்தில் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற தேர்தலுக்கான தேனி தொகுதியில் போட்டியிடும் டிடிவி தினகரன் போடி மற்றும் கம்பம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் நேற்று பிரச்சாரத்தில் ஈடுபட்டார். போடிநாயக்கனூர், தர்மத்துப்பட்டி, சிலமலை, இராசிங்கபுரம், தேவாரம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள பொதுமக்களிடம் குக்கர் சின்னத்தில் வாக்களிக்கும் படி நின்ற வேனில் பிரச்சாரம் செய்தார்.

தேவாரம் பகுதியில் பிரச்சாரத்தில் தேவாரம் பகுதியில் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த டிடிவி தினகரனுக்கு ஆதரவாக தேனி எம்பி ஓபி ரவீந்திரநாத் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். டிடிவி தினகரனுக்கு மாலை அணிவித்து குக்கர் சின்னத்தை பொதுமக்களிடம் காட்டி டிடிவி தினகரனுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்தார்.

பின்னர் பிரச்சாரத்தில் பேசிய டிடிவி தினகரன், இங்கு என்ன சுற்றி தேசிய கட்சிகளின் கொடிகள் மற்றும் கூட்டணி கட்சிகள் சூழ்ந்து என்னை பாதுகாப்பாக இங்கு அழைத்து வந்து இருக்கின்றது. நான் பாராளுமன்ற உறுப்பினராக இருந்த போது அம்மா முதலமைச்சராக இருந்தார். அப்போது உங்கள் கோரிக்கைகளை எல்லாம் பெற்று வந்தேன்.

இன்று அம்மா நம்மோடு இல்லை. ஆனால், பிரதமர் நம்மோடு இருக்கிறார். அவரிடம் உரிமையோடு தொகுதி கோரிக்கைகளை பெற்று தருவேன். நம் கூட்டணி பிரதமர் வேட்பாளர் மோடி, இந்திய கூட்டணி பிரதமர் வேட்பாளர் யார்?. இந்தியா வளர்ச்சிக்காக ஊழலற்ற ஆட்சியை கொடுத்து வந்தவர் பிரதமர் மோடி. மூன்றாவது முறையாக அவர் தான் பிரதமராக வருவார்.

சுயநலத்திற்காக சேரவில்லை, அமைச்சர் பதவிக்காக அவர்களுடன் சேரவில்லை. மோடி தமிழ்நாட்டுக்கு செய்யும் நலத்திட்டங்கள் பணிகளுக்காக தான். இரட்டை இலை சின்னம் துரோகிகள் கைகளில் உள்ளது. நமது சின்னம் குக்கர் சின்னம். இந்த சின்னம் மூலம் தான் திமுக டெபாசிட் இழந்தது. திமுக ஆட்சியில் போதை கலாச்சாரம் மூலை முடுக்கெல்லாம் பரவி கிடக்கிறது.

ஆளுங்கட்சி சேர்ந்தவர்கள் இதில் சமந்தபட்டுள்ளார்கள் என்று பிரதமர் வேதனை தெரிவித்தார். அம்மா இருந்து இருந்தால் போதை பொருள் விற்கும் கும்பலை என்கவுன்டர் செய்து இருப்பார். நீட் தேர்வு ரத்து என்று கூறி பொதுமக்களிடம் 1 கோடி கையெழுத்து பெற்று தற்போது குப்பை தொட்டியில் உள்ளது. மக்களை ஏமாற்றும் வேலையை தான் திமுக செய்து வருகிறது.

உங்களுக்காக உழைக்க மீண்டும் எனக்கு ஒரு வாய்ப்பு தாருங்கள், உங்களுக்கும் எனக்கும் உள்ள பந்தம் 25 ஆண்டுகளானது. என் அன்பு நண்பனான ஓபிஎஸ், எனக்காக தேனி தொகுதியை விட்டு கொடுத்து ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிடுகிறார். அங்கும் அவரும் வெற்றி பெறுவார். ரவீந்திரநாத் எம்பியாக இருந்த தொகுதியை தான் தட்டி பறிப்பது தவறு என்று நினைத்திருந்தேன். ஆனால் அம்மாவின் பிறந்த நாள் பொதுக்கூட்டத்தில் அவர் என்னிடம் நீங்கள் தான் இந்த தொகுதியில் போட்டியிட வேண்டும் என கூறி என்னை அழைத்தார். என்று கூறினார்.

பின்னர் பிரச்சாரத்தில் பேசிய ஓபி ரவீந்திரநாத், 20 ஆண்டுகளுக்குப் பிறகு தேனி தொகுதியில் டிடிவி தினகரன் போட்டியிடுகிறார். என்னை எப்படி வெற்றி பெற வைத்தீர்களோ, அதே போல் டிடிவி தினகரனை வெற்றி பெற வைக்க வேண்டும், என பொது மக்களிடம் கேட்டுக் கொண்டு பிரச்சாரத்தில் ஈடுபட்டார்

Views: - 92

0

0