தமிழகம், கேரளாவில் ஆட்சியை கலைக்க பாஜக திட்டம்…. இது வெறும் பகல் கனவு தான் ; அலறும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்!

Author: Babu Lakshmanan
4 September 2023, 1:34 pm
Quick Share

எதிர்கட்சிகள் ஒன்றிணைந்த நிலையில், பாஜகவின் தோல்வி மேலும் உறுதியாகியுள்ளதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற தேர்தலுக்கு இன்னும் 6 மாதம் காலமே உள்ள நிலையில், சிறப்பு நாடாளுமன்ற கூட்டத் தொடரை கூட்டி, ஒரே நாடு ஒரே தேர்தல் என்ற புதிய சட்டத்தை கொண்டு வர மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இந்த சட்டத்தை ஆய்வு செய்வதற்காக முன்னாள் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில் குழுவும் அமைக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, ஒரே நாடு ஒரே தேர்தல் என்ற சட்டத்திற்கு தமிழகத்தை ஆளும் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

அந்த வகையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தனது எதிர்ப்பை பதிவு செய்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட டுவிட்டர் பதிவில், ஒரே நாடு, ஒரே தேர்தல் சட்டத்தை கொண்டுவரலாமா என்று மோடி அரசு யோசிக்கிறது. தமிழ்நாடு, கேரளம் உள்ளிட்ட பல மாநிலங்களில் ஆட்சியை கலைத்து, மாநில உரிமைகளுக்கு எதிராக, நாடாளுமன்றத் தேர்தலுடன் சட்டமன்றத் தேர்தலை நடத்த திட்டமிடுகிறார்கள்.

பொதுசிவில் சட்டத்திற்கும் முயற்சிக்கிறார்கள். வரக் கூடிய நாடாளுமன்ற சிறப்புக்கூட்டத்தொடர், இந்தி யாவிற்கு சோகமான, துயரமான வரலாற்றை நிறுவுகிற கூட்டமாக அமையப் போகிறது என்பதை பார்க்கிறோம். இப்படியான முயற்சிகளால் பாஜக அரசு தங்களை தக்க வைத்துக்கொள்வதோ, மூன்றாவது முறையாக ஆட்சிக்கு வரப்போவதோ நடைபெறப் போவதில்லை.

அது பகல் கனவு என்பதை இந்திய நாட்டு மக்கள் நிரூபிப்பார்கள். ஏற்கெனவே பல மாநிலங்களில் நடைபெற்ற தேர்தல் களில் பாஜக தோல்வியடைந்துள்ளது. எதிர்க்கட்சிகள் ஒன்றுசேர்ந்துள்ள நிலையில் பாஜகவின் தோல்வி மேலும் உறுதியாகியுள்ளது, என தெரிவித்துள்ளார்.

Views: - 274

0

0