கோவையில் ஒருங்கிணைந்த பேருந்து நிலைய கட்டுமான பணிகளில் தொய்வு : ‘மினி’ கோயம்பேட்டை முடக்குகிறதா திமுக அரசு..!!

Author: Rajesh
9 February 2022, 12:11 pm
Quick Share

கோவை: கோவை வெள்ளலூரில் ரூ.163 கோடி மதிப்பில் அமைக்கப்பட்டு வரும் ஒருங்கிணைந்த பேருந்து நிலைய கட்டுமான பணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ளது. அரசியல் காரணங்களுக்காக இந்த திட்டத்தை திமுக அரசு திட்டமிட்டு முடக்கி வைத்திருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

கோவை மாநகரில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் கடந்த அதிமுக ஆட்சியில் பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டன. குளக்கரைகளைப் பலப்படுத்தி பூங்காக்கள் அமைத்தல், கழிவு நீர் பண்ணை, எல்.இ.டி தெரு விளக்குகள், வெள்ளலூரில் ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் என பல்வேறு திட்டங்கள் தொடங்கப்பட்டன.

இதில், பெரும்பாலான திட்டங்களில் 70 சதவீத பணிகள் முடிவுற்றுள்ளன. இதனிடையே தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு திமுக தலைவர் முக.ஸ்டாலின் தலைமையிலான ஆட்சி அமைந்துள்ளது. சட்டமன்ற தேர்தலில் கோவை மாவட்டத்தில் உள்ள 10 தொகுதிகளில் ஒன்றில் கூட திமுக வெற்றி பெறவில்லை. இதனை மனதில் வைத்து கோவை பல்வேறு வகையில் வஞ்சிக்கப்படுவதாக அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள் எழுந்தன.

இதனிடையே கோவை எந்த வகையிலும் வஞ்சிக்கப்பட மாட்டாது அங்கு மக்களின் ஆதரவைப் பெறுவோம் என்று முதலமைச்சர் முக.ஸ்டாலின் அறிவித்திருந்தார். ஆனால், ஸ்மார்ட் சிட்டி திட்டப்பணிகள், சாலை பராமரிப்பு மற்றும் புதிய சாலைகள் அமைத்தல், மேம்பாலம் அமைத்தல் என அதிமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட பல திட்டங்களை முழுமையாக செயல்படுத்தாமல் திமுக அரசு முடக்கி வைத்திருக்கிறது.

இதில் குறிப்பிடத்தக்க ஒன்றாக வெள்ளலூர் ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் அமைக்கும் பணிகளில் ஏற்பட்ட மந்த நிலையைக் கூறுகின்றனர் சமூக ஆர்வலர்கள். வெள்ளலூர் பகுதியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ரூ.168 கோடி செலவில் ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் கட்டும் பணி கடந்த ஆட்சியில் தொடங்கப்பட்டது.

சென்னை கோயம்பேடு பேருந்து நிலையம் போல் மிகப்பிரமாண்டமாக அமையும் இந்த புதிய பேருந்து நிலையத்தில் 2 லட்சம் சதுரடி பரப்பளவில், 300 பேருந்துகள் நிறுத்தும் வகையில், புறநகர் மற்றும் மாநகர பேருந்துகளை தனித்தனியாக நிறுத்தும் வசதியுடன் இந்த பேருந்து நிலையத்திற்கான கட்டுமான பணிகள் கடந்த 2020ம் ஆண்டு ஜனவரி மாதம் துவங்கியது.

ஒருங்கிணைக்கப்பட்ட பேருந்து நிலையமாக செயல்படத் திட்டமிடப்பட்டுள்ள இந்த பேருந்து நிலையத்தில் வெளியூர் செல்லும் பேருந்துகளும், உள்ளூர் செல்லும் பேருந்துகளும் இயக்கப்பட உள்ளன. தவிர, கோவை நகரில் திட்டமிடப்பட்டிருக்கும் மெட்ரோ ரயில் சேவையும், இந்த பேருந்து நிலையத்துடன் இணைக்கப்படவுள்ளது.


இதனால் நகரில் போக்குவரத்து நெரிசல் வெகுவாக குறையும் என்றும், வெவ்வேறு ஊர்களுக்கும் செல்ல பேருந்துகளுக்காக அலைய வேண்டியது இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டது. ஆனால், ஆட்சி மாறியதும் காட்சியும் மாறியுள்ளது. கடந்த 2020ம் ஆண்டு அக்டோபர் மாதம் இந்த பேருந்து நிலையத்தின் கட்டுமானப்பணிகள் கிட்டத்தட்ட 30 சதவீதம் நிறைவந்திருந்தன.

அதாவது கட்டுமான பணிகள் துவங்கிய 9 மாதங்களில் இந்த பணிகள் நிறைவடைந்திருந்தன. அவ்வளவு வேகமெடுத்திருந்த இந்த பணிகள் தற்போது முற்றிலுமாக முடக்கப்பட்டுள்ளதாக சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டுகின்றனர். அதிமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட திட்டம் உள்ளாட்சித் தேர்தலுக்கு முன்பாக பயன்பாட்டிற்கு வந்தால், அதனால் திமுக வாக்குகள் பெறுவது கடினம் என்பதால் இத்திட்டத்தை வேண்டுமென்றே முடக்கி வைத்திருப்பதாகவும், இதனால் சாமானியர்கள் தான் பாதிக்கப்படுவார்கள் என்றும் சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.

பல கோடி ரூபாய் திட்ட மதிப்பில் தொடங்கப்படும் மக்களுக்கான நலத்திட்டங்கள் குறிப்பிட்ட சிலரின் அரசியல் ஆதாயத்திற்காக நிறுத்தி வைப்பது நியாயமா என்றும் மக்கள் கேள்வியெழுப்பியுள்ளனர்.

Views: - 1580

1

0