பேரவையில் எதிரொலித்த தருமபுர ஆதின விவகாரம்.. அதிமுகவின் கவன ஈர்ப்பு தீர்மானமும்… அமைச்சரின் விளக்கமும்…

Author: Babu Lakshmanan
4 May 2022, 12:32 pm

தருமபுர ஆதினத்தை பல்லக்கில் தூக்கி செல்ல தடை விதித்த விவகாரம் தொடர்பாக சட்டப்பேரவையில் காரசாரமான விவாதம் நடைபெற்றது.

மயிலாடுதுறை – தருமபுர ஆதினம் மடத்தில் பாரம்பரியமாக பல நூற்றாண்டுகளுக்கு மேலாக பட்டண பிரேவேச நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக, ஆதினத்தை பல்லக்கில் தூக்கிச் செல்லும் நிகழ்வுக்கு தமிழக அரசு தடை விதித்தது. இதற்கு பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், 4 நாட்களுக்குப் பிறகு இன்று கூடிய சட்டப்பேரவையில், தருமபுர ஆதின விவகாரம் தொடர்பாக எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தார்.

அப்போது, அவர் பேசியதாவது :- தருமபுரம் ஆதினத்தை பல்லக்கில் தூக்குவது பாரம்பரியமாக நடந்து வரும் நிகழ்வு. ஆதினத்தில் வசிக்கும் 72 பேர் விருப்பப்படிதான் தருமபுரம் ஆதினத்தை பல்லக்கில் தூக்கிச் செல்வதில் மரியாதை குறைவு ஏதும் கிடையாது. பாரம்பரியமாக நடந்து வரும் தருமபுர ஆதினத்தை பல்லக்கில் தூக்கும் நிகழ்விற்கான தடையை நீக்க வேண்டும், என வலியுறுத்தினார்.

இந்த தீர்மானத்தின் மீது அமைச்சர் சேகர் பாபு பதிலளித்து பேசியதாவது :- பட்டணப் பிரவேசம் குறித்து ஆதினங்களுடன் 3 மணி நேரத்திற்கு மேல் ஆலோசனை நடத்தப்பட்டது. பல்லக்கில் தூக்கும் நிகழ்வு 22ம் தேதி நடைபெறும் என்பதால், அதற்குள் சுமூக தீர்வு எட்டப்படும். தருமபுர ஆதினத்துடன் முதலமைச்சர் ஸ்டாலின் பேசி, நல்ல முடிவை அறிவிப்பார். சிலர் செய்த தவறுக்காக பல்லக்கில் தூக்கும் நிகழ்வை அரசியலாக்க வேண்டாம், எனக் கூறினார்.

  • vijay is bjp c team explained by vanathi srinivasan விஜய் பாஜகவோட C team? தவெக குறித்து ஓபனாக போட்டுடைத்த பிரபலம்!