வாக்குறுதிகளை நிறைவேற்றுவது திமுக மட்டுமே.. வெள்ள நிதியாக மத்திய அரசு இதுவரை ஒரு பைசா கூட தரல : கனிமொழி குற்றச்சாட்டு!

Author: Udayachandran RadhaKrishnan
7 February 2024, 5:50 pm
Kanimozhi
Quick Share

வாக்குறுதிகளை நிறைவேற்றுவது திமுக மட்டுமே.. வெள்ள நிதியாக மத்திய அரசு இதுவரை ஒரு பைசா கூட தரல : கனிமொழி குற்றச்சாட்டு!

2024க்கான பாராளுமன்ற தேர்தல் இன்னும் சில மாதங்களில் நடைபெறவுள்ளது. இதன் பொருட்டு திமுகவினர் தங்களது தேர்தல் அறிக்கையை தயாரிக்க திமுக துணைப் பொதுச்செயலாளரும், தூத்துக்குடி தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி எம்.பி தலைமையில் 11 பேர் குழு அமைக்கப்பட்டது முதற்கட்டமாக தூத்துக்குடி சென்று கருத்துக்களை இந்த குழு சேகரித்தது.

இரண்டாம் நாளாக நேற்றும் கன்னியாகுமரியில் இந்த குழுச்சென்று அங்குள்ள பல்வேறு சங்கங்களின் கோரிக்கைகளை கேட்டு அதை மனுக்களாக பெற்றது. இந்நிலையில் மூன்றாவது நாளாக இன்று மதுரையில் கனிமொழி எம்.பி தலைமையிலான இந்த தேர்தல் அறிக்கை குழு கூடி கருத்துகளை சேகரித்தது.

பின்பு செய்தியாளர்களை சந்தித்து கூறியதாவது : இந்த ஆண்டு நடக்க உள்ள நாடாளுமன்ற தேர்தலுக்காக திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் திமுக தலைவர் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களின் அறிவுறுத்தளின் படி நியமிக்கப்பட்டுள்ள தேர்தல் அறிக்கை குழு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு சென்று அங்குள்ள பொதுமக்கள் மற்றும் பல்வேறு துறைகளை சார்ந்த சங்கங்கள், அமைப்புகளை சந்தித்து கோரிக்கை மனுக்களைப் பெற்று தேர்தல் அறிக்கையாக உறுவாக்க வேண்டும் என்று அனுப்பி உள்ளார்.

அதன் அடிப்படையில் திராவிட முன்னேற்ற கழகம் மக்களை சந்தித்து மக்களுக்கான ஒரு தேர்தல் அறிக்கையாக, மக்களால் போற்றப்படும் அறிக்கையாக எப்பொழுதும் இருக்கும்படி தயார் செய்துள்ளோம். இந்தாண்டும் மக்களை சந்தித்து தேர்தல் அறிக்கை உருவாக்க கருத்து கேட்ப்பு கூட்டம் நடத்துகிறோம்.

தூத்துக்குடி, கனியாகுமரி முடித்துவிட்டு இன்று மதுரையில் மக்களை சந்தித்து கருத்துக்களை கேட்டுக் கொண்டிருக்கிறோம். இன்று மதுரை, தேனி, திண்டுக்கல், சிவகங்கை ஆகிய மாவட்டங்களில் இருந்து பல்வேறு அமைப்புகள் எங்களிடம் கோரிக்கைகளை அளித்திருக்கிறார்கள். கோரிக்கைகளைப் படித்து முக்கியமான கோரிக்கைகளை முதலமைச்சரிடம் கொண்டு சென்று அவரின் ஒப்புதலை பெற்று தேர்தல் அறிக்கை வெளியிடுவோம்.

ஜிஎஸ்டியில் இருக்கக்கூடிய பல்வேறு பிரச்சனைகள் வரிகள் குறிப்பாக சிறுகுரு தொழில் செய்யக்கூடியவர்கள் மிகப்பெரிய அளவில் ஜிஎஸ்டி யால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். அவர்கள் பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்திருக்கிறார்கள். ரயில்வேயை பொருத்தவரை தென் மாவட்டங்களுக்கு வழக்கமாக நிதி குறைவாக தான் ஒதுக்கப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் குறைக்கக்கூடிய சூழலை நாம் பார்க்கிறோம். இன்று 100 நாள் வேலையில் பல குழப்பங்கள் உள்ளன. சரியாக சம்பளம் வராத சூழ்நிலை உள்ளது. மக்கள், விவசாயிகளுக்கு இருக்கக்கூடிய பிரச்சனைகளை கோரிக்கையாக வைத்திருக்கிறார்கள்.

முதலமைச்சர் ஆட்சி பொறுப்பேற்றபோது எங்களுக்கு வாக்களிக்காதவர்களுக்கு கூட ஏன் வாக்களிக்கவில்லை என்று நினைக்கக் கூடிய அளவுக்கு நாங்கள் ஆட்சியை நடத்துவோம் என்று சொல்லி இருக்கிறார். அப்படி இருக்கும் பொழுது கூட்டணிக் கட்சி பிரதிநிதிகள் இருக்கும் தொகுதிகளில் எந்தத் திட்டத்தையும் செய்ய மாட்டோம் என்று தவறான புரிதல் வேண்டாம்.

எப்பொழுதுமே தலைவர் கலைஞர், முதலமைச்சர் ஸ்டாலினாக இருக்கட்டும் கூட்டணி கட்சிகளை மதித்து, அந்த பிரதிநிதிகளுக்கு எங்களை விட அதிக முக்கியத்துவம் தந்து அவர்களை அரவணைத்து நடத்தக் கூடிய கூட்டணி தான் இந்த கூட்டணி.

சென்ற முறை இதற்கு முன்னாடி இருந்த தேர்தல் அறிக்கை சட்டமன்றத்திற்கு
தேர்தலுக்கான அறிக்கை அதில் கொடுத்திருக்கக் கூடிய உறுதிமொழிகளையும் நிறைவேற்றி தான் இருக்கிறோம். பெரும்பாலான வாக்குறுதிகளை நிறைவேற்றி விட்டோம்.

அதற்கு முன்னால் பாராளுமன்றத் தேர்தலில் பாஜக அளித்த வாக்குறுதிகளை அவர்கள் நிறைவேற்றவில்லை. 15 லட்சம் தருகிறோம் என்றனர். இரண்டு தேர்தல் முடிந்துவிட்டது. யாருக்கும் வந்து சேரவில்லை. விவசாயிகளுக்கு தருவேன் என்று சொல்லி இருக்கக் கூடிய அந்தத் தொகை குறைந்து கொண்டே வருகிறது.

யாருக்கும் சரியாக போய் சேரவில்லை என்ற ஒரு சூழ்நிலை தான் நாம் பார்த்துக் கொண்டிருக்கிறோம். கல்விக்கான நிதி குறைந்து கொண்டே வருகிறது. பெண்களுக்கான இட ஒதுக்கீடு மசோதாவை கொண்டு வந்து நிறைவேற்றி இருக்கிறார்கள். பெண்களுக்கான இட ஒதுக்கீடு மசோதா நிறைவேற்றப்பட்டிருக்கிறது.

இன்னும் 50 ஆண்டுகளுக்குள்ளாவது இந்த மசோதா நிறைவேற்றப்படுமா? என்ற சூழ்நிலைதான் தற்போது உள்ளது . இப்படிப்பட்ட ஒன்றிய அரசிடம் தான் நம் பயணிக்க வேண்டிய அவலமான சூழ்நிலையில் இருந்து கொண்டிருக்கிறோம். மழையால் சென்னை, தென் மாவட்டங்கள் மிக மோசமாக பதிக்கப்பட்டது ஆனால் இன்றுவரை தரப்பட்டு வரும் நிவாரணங்களை எல்லாம் நம்முடைய முதலமைச்சர் அவர்கள் தான் தந்து கொண்டிருக்கிறார்களே தவிர மத்திய அரசு தரவில்லை.

மத்திய அரசு சார்பில் அமைக்கப்பட்ட கமிட்டி, மூன்று முறை ஆய்வு செய்துள்ளனர். இரண்டு அமைச்சர்கள் மற்றும் மூத்த மத்திய அமைச்சர்கள் சென்னைக்கும் தென் மாவட்டங்களையும் பார்வையிட்டு சென்றார்கள். இன்று வரைக்கும் ஒரு பைசா கூட வரவில்லை. இப்படிப்பட்ட மனநிலையோடு தமிழ்நாட்டுக்கு எதுவும் செய்யக்கூடாது என்று ஒரு மனநிலையில் தான் மத்திய அரசு உள்ளது.

திமுக அரசு கொடுத்த வாக்குறுதிகளை ஒவ்வொன்றாக நிறைவேற்றி கொண்டு இருக்கிறோம். மகளிர்க்கு வழங்கக்கூடிய ஆயிரம் ரூபாய் திட்டத்தை எவ்வளவு நிதிநிலை சிக்கல்கள் இருந்தாலும் கொடுத்த வாக்குறுதிகளை அவர் நிறைவேற்றி தந்திருக்கிறார். கொடுத்த வாக்குறுதிகளை ஒவ்வொன்றாக தான் நிறைவேற்ற முடியும். கண்டிப்பாக திராவிட முன்னேற்றக் கழகம் கொடுத்த வாக்குறுதிகளை நிச்சயமாக நிறைவேற்றும் என்று தெரிவித்தார்.

Views: - 239

0

0