தோல்வி பயத்தால் கைது நடவடிக்கையில் பாஜக… மக்கள் இதனை ஏற்றுக் கொள்ள மாட்டாங்க ; திமுக வேட்பாளர் கனிமொழி..!!

Author: Babu Lakshmanan
22 March 2024, 12:48 pm
Quick Share

பாஜக-வை விமர்சனம் செய்தால் தோல்வி பயத்தில் கைது நடவடிக்கை எடுப்பதாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது நடவடிக்கை குறித்து தூத்துக்குடி திமுக நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் கனிமொழி குற்றம்சாட்டியுள்ளார்.

தூத்துக்குடி திமுக நாடாளுமன்ற தேர்தல் சார்பில் தலைமை தேர்தல் காரியாலயம் திறக்கப்பட்டது. எட்டயபுரம் ரோட்டில் உள்ள கலைஞர் அரங்கம் அருகே உள்ள காரியாலத்தை தூத்துக்குடி நாடாளுமன்ற திமுக வேட்பாளர் கனிமொழி திறந்து வைத்தார்.

பின்னர், தூத்துக்குடி நாடாளுமன்ற திமுக வேட்பாளர் கனிமொழி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது :- பொதுவாகவே பாஜக தன் மீது விமர்சனங்களை வைக்கக்கூடிய, தன்னை எதிர்க்க கூடிய தலைவர்கள் யாராக இருந்தாலும், அவர்கள் மீது பொய் செய்தியை கட்டம் கட்டி அமலாக்கத்துறையை பயன்படுத்துகிறது.

டெல்லி ஆம் ஆத்மி கட்சியை எடுத்துக் கொண்டால், முதலில் துணை முதலமைச்சரை கைது செய்தார்கள். தற்போது முதலமைச்சரை கைது செய்திருக்கக் கூடிய இன்னொரு நிலை ஏற்பட்டுள்ளது. இவ்வாறு தொடர்ந்து அரசியல் தலைவர்களை கைது செய்வது அவர்களுக்கு நெருக்கடி கொடுப்பது அமலாக்கத்துறை ரெய்டு பயன்படுத்துவது, காங்கிரஸ் பேரியக்கத்தைச் சேர்ந்தவர்களின் பணத்தை முடக்குவது, இப்படி எல்லாரையும் விரட்டியே ஆட்சியை தக்கவைத்துக் கொள்ளலாம் என்று தவறான கருத்தை முன் வைக்கின்றனர். இதனை மக்கள் நிச்சயமாக புரிந்து கொள்வார்கள்.

மேலும், பொதுவாகவே பாஜகவினர் பயந்து தான் இருக்கின்றனர். அதான் யார் என்ன கருத்து சொன்னாலும் ஜெயிலில் வைக்க முற்படுகின்றனர். ஜனநாயகத்தை அவர்கள் நம்பவில்லை. மக்களை பயத்தில் வைத்துக் கொண்டு மக்களை மிரட்டி, அரசியல் தலைவர்களை மிரட்டி, அவர்கள் ஆட்சியில் இருக்கலாம் என்று நினைக்கிறார்கள். இந்திய மக்கள் ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை இருக்கக்கூடியவர்கள், சிந்திக்க கூடியவர்கள் இதனை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.

மேலும், வரும் 26 ஆம் தேதி மாலை சிந்தலக்கரையில் முதலமைச்சர் ஸ்டாலின் பிரச்சாரம் மேற்கொள்ள இருப்பதாகவும் கூறினார். அருகில், சமூக நலத்துறை அமைச்சர் கீதா ஜீவன் மேயர் ஜெகன். ஆகியோர் உடனிருந்தனர்….

Views: - 167

0

0