‘கலைஞர் டிவியில் எனக்கு பங்கா..?’ அண்ணாமலைக்கு 48 மணிநேரம் கெடு விதித்த கனிமொழி… அடுத்தடுத்து திமுக பிரமுகர்கள் நோட்டீஸ்..!!

Author: Babu Lakshmanan
29 April 2023, 2:07 pm
annamalai Vs Kanimozhi - Updatenews360
Quick Share

தன் மீது அவதூறு பரப்பியதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கு நஷ்ட ஈடு கேட்டு திமுக எம்பி கனிமொழி நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

கடந்த ஏப்ரல் 14ம் தேதி அமைச்சர்கள், எம்பிக்கள் உள்ளிட்ட திமுகவின் முக்கிய புள்ளிகளின் சொத்து மதிப்பை பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்டு தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்தினார். இதனிடையே, இந்த சொத்துப்பட்டியல் குறித்து கருத்து தெரிவித்த திமுக அமைப்பு செயலாளர் ஆர்எஸ் பாரதி, அனைத்தும் ஆதாரமற்ற குற்றச்சாட்டு எனக் கூறினார். மேலும், திமுகவின் பல்வேறு தலைவர்கள் இது குறித்து கருத்துக்களை கூறி வந்த நிலையில், திமுக சார்பில் ரூ.500 கோடி இழப்பீடு கேட்டு பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது.

திமுகவின் இந்த நடவடிக்கைக்கு அண்ணாமலையும் பதிலடி கொடுக்கும் விதமாக, 500 கோடியே ஒரு ரூபாய் கேட்டு பதில் நோட்டீஸ் அனுப்பினார். மேலும், மன்னிப்பு கேட்க முடியாது என்றும், நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தால், அதனை சந்திக்க தயார் என்றும் கூறியிருந்தார்.

இதைத் தொடர்ந்து, அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ரூ.50 கோடி கேட்டும், திமுக எம்பி டிஆர் பாலு ரூ.100 கோடி கேட்டும் அடுத்தடுத்து அண்ணாமலைக்கு நோட்டீஸ் அனுப்பியிருந்தார். மேலும், திமுக எம்பி கனிமொழி நோட்டீ அனுப்பப் போவதாகவும் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், கலைஞர் டிவியில் தனக்கு ரூ. 800 கோடி சொத்து இருப்பதாக அண்ணாமலை கூறிய புகாரை திமுக எம்பி கனிமொழி மறுத்துள்ளார். மேலும், இதுகுறித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைக்கு வக்கீல் நோட்டீஸூம் அனுப்பியுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது :- கலைஞர் டிவியில் எனக்கு பங்கு இல்லை. அவதூறு குற்றச்சாட்டுக்கு 48 மணி நேரத்தில் தன்னிடம் அண்ணாமலை மன்னிப்பு கேட்காவிட்டால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். அத்துடன் அவதூறு வீடியோவை சமூகவலைதளத்தில் இருந்து நீக்க வேண்டும். அவதூறு பரப்பியதற்கு ரூ 1 கோடி இழப்பீடு கொடுக்க வேண்டும், என தெரிவித்துள்ளார்.

Views: - 365

0

1