‘இப்படியே பண்ணுனா இந்த அரசாங்கம் நிக்காது’.. வெளிப்படையாகவே சொன்ன அமைச்சர் துரைமுருகன்…!!

Author: Babu Lakshmanan
20 November 2023, 4:30 pm
Quick Share

தள்ளுபடி பண்ணுவாங்க-னு நகை கடன் வாங்கினால் உருப்படுமா..? என்று அமைச்சர் துரைமுருகன் கேள்வி எழுப்பியுள்ளார்.

வேலூர் மாவட்டம் காட்பாடியில் கூட்டுறவுத்துறையின் சார்பில் 70ஆவது அனைத்திந்திய கூட்டுறவு வார விழாவானது வேலூர் மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் தலைமையில் நடந்தது. இதில், தமிழக நீர் வளத்துறை அமைச்சர் துரைமுருகன் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டார்.

இவ்விழாவில் வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் கதிர் ஆனந்த், சட்டமன்ற உறுப்பினர்கள் நந்தகுமார், கார்த்திகேயன், வில்வநாதன் அமுலு, மேயர் சுஜாதா, துணை மேயர் சுனில்,மண்டல குழுதலைவர் புஷ்பலதா, கூட்டுறவுத்துறை இணை பதிவாளர் குண ஐயப்பதுரை உள்ளிட்ட திரளானோரும், பொதுமக்களும் பங்கேற்றனர்.

இவ்விழாவில் கூட்டுறவு உறுதிமொழி எடுக்கப்பட்டு, பின்னர் பயனாளிகளுக்கு ரூ.17. 42 கோடி மதிப்பில் கடனுதவிகளை அமைச்சர் துரைமுருகன் வழங்கினார்.

விழாவில் தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் பேசியதாவது :- கடனை நாங்கள் கொடுக்கிறோம். அதனை திருப்பி கட்ட வேண்டும் என்பதை விட ரத்து செய்ய வேண்டும் என்ற கோஷம் தான் அதிகம் உள்ளது. அப்படி இருந்தால் துறையும் நிக்காது, அரசாங்கமும் நிக்காது. நீங்கள் வாங்கிய கடனை கட்ட வேண்டும். ஆனால் சேட்டிடம் கடன் வாங்கினால் மட்டும் கடனை கட்டுகிறீர்கள். சும்மா நகையை வைத்து பணத்தை சும்மா வாங்கி சென்றுவிட்டீர்கள்.

என்னுடைய தாழ்மையான கோரிக்கை கடனை வாங்கினால் அதனை திருப்பி கட்ட வேண்டும். ஆனால், கடனை வாங்குவோம் தள்ளுபடி செய்வார்கள் என்ற எண்ணத்தில் கூட்டுறவுத்துறையில் கடனை வாங்குகின்றனர். அதிக அளவில் கூட்டுறவுத்துறை, பகுதி நேர நியாய விலைகடைகளை திறந்துள்ளனர் பாராட்டுகிறோம். இன்றைக்கு 2547 பேருக்கு கடனாக ரூ.17.42 கோடி அளிக்கிறோம். அது எள்ளு என்றால், நீங்கள் எள்ளை கேட்டால் எண்ணெய்யாக கொடுப்பார். கூட்டுறவுத்துறை அதை தான் சொன்னேன், வாங்கினால் கடனை சரியாக கட்டுங்கள், என பேசினார்.

Views: - 625

0

0