அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான வழக்கை ரத்து செய்யக் கூடாது… இறுக்கிப் பிடிக்கும் அமலாக்கத்துறை… அதிர்ச்சியில் அறிவாலயம்..!!

Author: Babu Lakshmanan
19 October 2022, 6:27 pm
Senthil Balaji- Updatenews360
Quick Share

வேலை வாங்கி தருவதாக கூறி மோசடி செய்ததாக அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான வழக்கை ரத்து செய்யக்கூடாது என சென்னை உயர்நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.

மின்சாரத்துறை அமைச்சராக இருக்கும் செந்தில் பாலாஜி, கடந்த 2011 முதல் 2015 வரையிலான முந்தைய ஆட்சியின் போது, போக்குவரத்து துறை அமைச்சராக பதவி வகித்து வந்தார். அப்போது, போக்குவரத்து துறையில் வேலை வாங்கி வருவதாக கூறி, பலரிடம் பணம் பெற்று மோசடி செய்ததாக புகார் எழுந்தது.

இது தொடர்பாக பாதிக்கப்பட்டவர்கள் சென்னை காவல் ஆணையரிடம் புகார் அளித்ததன் பேரில், அமைச்சர் செந்தில்பாலாஜி, அவரது நண்பர்கள் பிரபு, சகாயராஜன், தேவசகாயம், அன்னராஜ் உள்ளிட்டோர் மீது நம்பிக்கை மோசடி, ஏமாற்றுதல், கொலை மிரட்டல் உள்ளிட்ட பிரிவுகளில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குகளை பதிவு செய்தனர்.

இந்த வழக்கை சென்னை எம்.பி.- எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை நடந்து வருகிறது.

இதனிடையே, தன் மீதான வழக்குகளை ரத்து செய்யக் கோரி அமைச்சர் செந்தில்பாலாஜி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த வழக்குகள் நீதிபதி வி.சிவஞானம் முன்பு விசாரணைக்கு வந்த போது, அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையாகவே இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக செந்தில் பாலாஜி தரப்பில் வாதிடப்பட்டது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அமலாக்கத் துறை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் என்.ரமேஷ், வேலைக்காக கொடுத்த இரண்டரை லட்சம் ரூபாயை கொடுத்து ஏமாந்தவர்கள், தற்போது அந்த வழக்கையே திரும்பப்பெற லட்சக்கணக்கான ரூபாயை செலவழித்து இந்த வழக்கை நடத்துவது ஆச்சரியமளிப்பதாக தெரிவித்தார்.

மேலும், தற்போதைய தமிழக அரசில் அதிகாரமிக்க நபராக உள்ள செந்தில் பாலாஜி மீதான குற்றச்சாட்டை அடிப்படையாக கொண்டு தான் வழக்குப்பதிவு செய்துள்ளதால், வழக்கை ரத்து செய்யக்கூடாது என வாதிட்டார். இரு தரப்பு வாதங்கள் நிறைவடையாததால் வழக்கின் விசாரணையை அக்டோபர் 28ம் தேதிக்கு நீதிபதி தள்ளிவைத்துள்ளார்.

Views: - 355

0

0