சாதியை காரணம் காட்டி தண்ணீர் திறந்து விடுவதில் பாகுபாடு… வாய்ஸ் கொடுத்த இபிஎஸ் ; சில மணிநேரங்களில் நடந்த மாற்றம்…!!

Author: Babu Lakshmanan
8 August 2023, 8:09 pm
Quick Share

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் கண்டனத்தை தொடர்ந்து, சில மணி நேரத்தில் தண்ணீர் வந்ததால், பட்டியல் இன மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தென்காசி மாவட்டம் கடையம் அருகே வெங்கடாம்பட்டி 6வது வார்டில் பட்டியல் இன மக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்களின் குடிநீர் தேவைக்காக, கடந்த 21-22ம் நிதியாண்டில், 5.10 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டு, வீடுகளுக்கு குடிநீர் குழாய்கள் அமைக்கப்பட்டன.

ஆனால், இந்தப் பணிகள் நிறைவடையாததால், முறையாக குடிநீர் வழங்கப்படுவதில்லை. இதுகுறித்து அப்பகுதி மக்கள் பலமுறை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் மனுக்கள் கொடுத்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என குற்றம் சாட்டுகின்றனர்.

இந்த நிலையில் அப்பகுதி மக்கள் கடையம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் குடிக்க குடிநீர் வேண்டி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, பட்டியலின மக்கள் என்பதால் தங்கள் பகுதி மக்களுக்கு குடிக்க கூட தண்ணீர் தர மறுப்பதாக வேதனையுடன் தெரிவித்தனர்.

இது தொடர்பாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது கண்டன அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார்.

அவர் விடுத்த அறிக்கையில், இந்த அவலங்களைப் பற்றி தி.மு.க.வின் கூட்டணியில் அங்கம் வகிக்கும், பட்டியலின மக்களின் பாதுகாவலர்கள் என்று கூறிக்கொள்பவர்களும், அனைவரும் சமம் என்று பேசும் பொதுவுடைமைவாதிகளும் வாய்மூடி மவுனமாக இருப்பது விந்தையாக உள்ளது. தமிழ்நாட்டில் பட்டியலின மக்களுக்கு இதுபோன்ற கொடுமைகள் தொடர்ந்தால், அ.தி.மு.க. வேடிக்கைப் பார்த்துக்கொண்டு இருக்காது என்று இந்த விடியா தி.மு.க. அரசை எச்சரிக்கிறேன், என தெரிவித்திருந்தார்.

இதனைத் தொடர்ந்து, சில மணி நேரத்தில் அந்த பகுதிக்கு குடிநீர் வழங்கப்பட்டது. இதனால் அப்பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Views: - 343

0

0