விவசாயிகள் திட்டங்களை செயல்படுத்துவதில் ஆமை வேகம்… தூக்கத்தில் இருந்து விழிக்குமா திமுக அரசு…? இபிஎஸ் பாய்ச்சல்..!!

Author: Babu Lakshmanan
5 August 2022, 7:24 pm

விவசாயிகள் திட்டங்களை ஆமை வேகத்தில் திமுக அரசு செயல்படுத்துவதாக எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

சேலத்தில் தமிழ்நாடு விவசாய சங்கங்களின் கூட்டமைப்பின் சார்பில் நடக்கும் விவசாயிகள் வாழ்வுரிமை மாநாட்டை எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்.

பின்னர், அவர் பேசியதாவது :- வேளாண் மக்கள் இதுபோன்ற மாநாடு மூலம் தான் அடையாளம் காணப்படுகின்றனர். இந்த மாநாட்டில் வைக்கப்பட்டுள்ள கோரிக்கைகளில், வெளிநாடு இறக்குமதிக்கு மானியம் தருவதை நிறுத்தி, சுதேசி பொருட்களுக்கு மானியம் வழங்க வேண்டும், எத்தனால் பயன்பாட்டை அதிகரிக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் முக்கியமானவை.

விவசாயத்தில் எத்தனாலை பயன்படுத்த வேண்டும் என்று அறிவித்த பாரத பிரதமர் மோடி, இதற்கான திட்டத்தையும் தொடங்கி வைத்துள்ளார். இந்த திட்டம் மூலம் கரும்பு விவசாயிகளுக்கு நல்ல லாபம் கிடைக்கும் என்று தெரிவித்தார்.

அதிமுக ஆட்சியில் நீர் மேலாண்மைக்கு முன்னுரிமை வழங்கப்பட்டது. இதற்காக சேலம் மாவட்டத்தில் வறண்ட 100 ஏரிகளை நிரப்பும் திட்டம் தீட்டப்பட்டு, பணிகள் தொடங்கப்பட்டது. ஆட்சி மாற்றம் ஏற்பட்டதால் ஆமை வேதத்தில் இந்த திட்டம்
நடைபெறுகிறது.

நீரேற்று திட்டத்தின் மூலமாக 100 ஏரிகள் நிரப்பி இருந்தால் 25 ஆயிரம் ஏக்கர் நிலம் பாசன வசதி பெற்றிருக்கும். நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்திருக்கும். தற்போதைய திமுக அரசாங்கம் ஆமை வேகத்தில் செயல்பட்டு வருகிறது. இனியாவது தூங்கிக் கொண்டிருக்கும் அரசாங்கம் துரிதமாக செயல்பட்டு வீணாக கடலில் கலக்கும் உபரிநீரை விவசாயிகளுக்கு பயன்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேபோல, அத்திக் கடவு அவினாசி திட்டம், காவிரி குண்டாறு இணைப்பு திட்டம் கிடப்பில் போடப்பட்டுள்ளது, என்று கூறினார்.

  • tourist family negative review from valaipechu team படம் வர்ரதுக்கு முன்னாடியே நெகட்டிவ் விமர்சனம்; டூரிஸ்ட் ஃபேமிலி குறித்து வாய்விட்ட பிரபலம்!