மக்கள் தங்களை பாராட்டுவதாக மணல் கோட்டை… விரைவில் திமுக குடும்ப ஆட்சியை விரட்டியடிப்பார்கள் ; இபிஎஸ் எச்சரிக்கை!!

Author: Babu Lakshmanan
15 December 2022, 12:40 pm
Quick Share

சென்னை ; சட்டம் ஒழுங்கைக் காக்கும் வேலையைப் பார்க்காமல், மக்கள் தன்னை பாராட்டுவதாக கனவு உலகில் மிதந்து மணல் கோட்டை கட்டிக் கொண்டிருப்பதாக அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :- கடந்த 19 மாத திராவக மாடல் ஆட்சியின் வெப்பம் தாங்காமல் மக்கள் துடித்து வருவது கண்கூடு. ஆனால், புதுச்சேரிக்கு சென்று திருமண விழா ஒன்றில் பேசும் பொம்மை முதலமைச்சர் ஸ்டாலின், மக்கள் தொலைபேசியில் தன்னை பாராட்டுவதாக தனக்குத் தானே சுய பெருமை பேசுகிறார்.

இவர் திருவாய் மலர்ந்தருளிய பின், கடந்த ஓரிரு வாரங்களில் அரங்கேறிய, சில முக்கிய சட்டம்-ஒழுங்கு சீர்கேடுகளை இங்கே தோலுரித்துக் காட்டுகிறேன். ஒரு பிரபல நடிகர் நடத்தி வந்த Black Sheep என்ற YouTube சேனலை, ஆளும் கட்சியின் வாரிசு ஒருவர் வாங்கியதாக செய்திகள் தெரிவிக்கின்றன. டிசம்பர் மாதம் 8ந் தேதி அந்த சேனலின் சர்வர் அறையில் விஜயவாடாவைச் சேர்ந்த பாலாஜி என்ற ஊழியர் மர்மமான முறையில் இறந்து கிடந்ததாகவும், காவல்துறை இதனை மர்ம மரணம் என்று வழக்கு பதிவு செய்துள்ளதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.

மர்ம மரணம் என்று வழக்கு பதிவு செய்த காவல்துறை, இதுவரை நேரடியாக கள ஆய்வு செய்யவில்லை என்றும், இக்குற்றம் தொடர்பான அந்த அலுவலகத்தின் CCTV கேமரா பதிவுகள் இந்நிறுவனத்தால் அகற்றப்பட்டதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன. காவல்துறை செயல்படாமல், மவுனமாக இருப்பதற்கான காரணம் புரியவில்லை. இந்நிகழ்வில் தவறு இழைத்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்களை சட்டத்தின்முன் நிறுத்தி, தக்க தண்டனை பெற்றுத்தர வேண்டும் என்று இந்த விடியா திமுக அரசை வலியுறுத்துகிறேன்.

அடுத்த நிகழ்வாக, அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே காசாங்கோட்டை கிராமத்தில் இரு வகுப்பினரிடையே ஏற்பட்ட தகராறு காரணமாக அருண்குமார் என்பவர் உட்பட சிலர் மீது தீண்டாமை மற்றும் வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

25.11.2022 அன்று அருண்குமார் உட்பட வழக்கில் சம்பந்தப்பட்டவர்களை கைது செய்ய அருண்குமார் வீட்டிற்கு காவல் துறையினர் சென்றுள்ளனர். அங்கு அவர் இல்லாததால், 53 வயதான செம்புலிங்கம் என்பவர் உட்பட இருவரைப் பிடித்து கடுமையாக தாக்கியதாகவும், பலத்த காயமடைந்த செம்புலிங்கமும், கடுமையான வயிற்றுவலி ஏற்பட்ட நிலையில், திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பலனின்றி டிசம்பர் 8-ந் தேதி இரவு மரணமடைந்துவிட்டார்.

எனவே தவறு இழைத்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்களை சட்டத்தின் முன் நிறுத்தி தக்க தண்டனை பெற்றுத்தர வேண்டும் என்று இந்த விடியா திமுக அரசை வலியுறுத்துகிறேன். அடுத்து, சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் அருகே உள்ள அல்லிகுளம் பகுதியில் பழைய இரும்பு வியாபாரம் செய்துவரும் திரு. முனுசாமி என்ற வியாபாரி வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளார். இவர் கஞ்சா வியாபாரம் மற்றும் கடத்தல்களைப் பற்றி காவல்துறைக்கு தகவல் கொடுக்கும் இன்பார்மராக செயல்பட்டு வந்துள்ளார் என்று செய்திகள் தெரிவிக்கின்றன. இதனால் ஆத்திரமடைந்த கஞ்சா வியாபாரிகள் இந்தப் படுகொலையை அரங்கேற்றி இருக்கலாம் என்று செய்திகள் தெரிவிக்கின்றன.

கடந்த 2021-ல் தங்களுடைய பகுதிகளில் கஞ்சா வியாபாரம் நடைபெறுகிறது என்று காவலர்களுக்கு செய்திகளை கூறிய திருப்பூரைச் சேர்ந்த வாசிம் அக்ரம் மற்றும் சோழவரத்தைச் சேர்ந்த சிலம்பரசன் என்ற 32 வயதுடைய இளைஞர் ஆகியோரைத் தொடர்ந்து, கடந்த 3.12.2022 அன்று அல்லிக்குளத்தைச் சேர்ந்த முனுசாமி என்ற இன்பார்மர் கொலை செய்யப்பட்டுள்ளது மிகுந்த அதிர்ச்சியை அளிக்கிறது. உண்மையில் கஞ்சா போன்ற போதைப் பொருட்களின் நடமாட்டத்தை இந்த விடியா அரசின் ஏவல் துறை கட்டுப்படுத்த நினைக்கிறதா? அல்லது ஆளும் கட்சியினரின் கண்ணசைவுக்கு ஏற்ப நடக்க நினைக்கிறதா ? என்ற சந்தேகம் எழுகிறது.

இந்நிலையில், கடந்த 12.12.2022 அன்று மீண்டும் ராமநாதபுரம் மாவட்டத்தில், மண்டபம் என்ற இடத்தில் சுமார் 160 கோடி ரூபாய் மதிப்பிலான கஞ்சா ஆயில், கிறிஸ்டல் மெத்தம் பெட்டமைன் என்ற போதைப் பொருட்களை மத்திய வருவாய் புலனாய்வுத் துறை அதிகாரிகள் கைப்பற்றி உள்ளனர். சென்னை முதல் ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் வரை உள்ள அத்தனை சோதனைச் சாவடிகளையும் கடந்து, எந்தவித தடையுமின்றி சுமார் 160 கோடி ரூபாய் மதிப்புள்ள போதைப் பொருட்கள் மண்டபம் வந்தது எப்படி ? என்று மத்திய வருவாய் புலனாய்வுத் துறையினர் ஆச்சரியப்படுகின்றனர். ஒருசில உயர் அதிகாரிகளின் துணை இல்லாமல் இந்தக் கடத்தல் நடந்திருக்க முடியாது என்ற சந்தேகம் இச்செய்தியைப் படிக்கும் அனைவரிடமும் எழுந்துள்ளது.

எனவே, இந்த விடியா அரசின் ஏவல் துறை, “வாய்ச் சொல்லில் வீரரடி” என்று இல்லாமல், போதை மருந்து கடத்தலை தடுக்க கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.காவல் துறையை கையில் வைத்திருக்கும் முதலமைச்சர் திரு. ஸ்டாலின், சட்டம் ஒழுங்கைக் காக்கும் வேலையைப் பார்க்காமல், மக்கள் தன்னை பாராட்டுவதாக கனவு உலகில் மிதந்து மணல் கோட்டை கட்டிக் கொண்டிருக்கிறார்.

தன் குடும்பத்தின் கைகளில் மட்டுமே அரசு அதிகாரம் இருக்க வேண்டும் என்ற சர்வாதிகார மனப்பான்மையுடன் செயல்படுகிறார். தற்போதைய இந்த அவலம், நிர்வாகத் திறனற்ற விடியா திமுக ஆட்சியில் தொடருமேயானால், தி.மு.க. குடும்பத்தின் ஆக்டோபஸ் ஆட்சியால் பாதிக்கப்படும் மக்கள் கொதித்தெழுந்து, ஆட்சியாளர்களை விரட்டி அடிப்பார்கள், என தெரிவித்துள்ளார்.

Views: - 334

0

0