காங்கிரஸ் கட்சிக்கு மீண்டும் வாய்ப்பு அளித்த திமுக : ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் களமிறங்கும் வேட்பாளர் இவரா?

Author: Udayachandran RadhaKrishnan
19 January 2023, 8:49 pm
By Election Congress - Updatenews360
Quick Share

ஈரோடு கிழக்கு தொகுதியில் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில், அங்கு நேற்று முதல் தேர்தல் கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்தது. அதனைத் தொடர்ந்து அங்குள்ள அரசியல் தலைவர்களின் பெயர்களை மறைக்கும் பணிகளில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டனர்.

இந்த நிலையில் இத்தேர்தலில் வேட்பாளர்களை அறிவிப்பது தொடர்பாக அதிமுக கூட்டணிக் கட்சிகளும் திமுக கூட்டணிக் கட்சிகளும் தீவிரம் காட்டி வருகின்றன.

இந்நிலையில் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ். அழகிரி, ”ஈரோட்டில் காங்கிரஸ்தான் நிற்கும். ஏனென்றால் அது எங்களுடைய தொகுதி. நாங்கள் நின்ற தொகுதி வென்ற தொகுதி. நாங்கள் எங்களது தோழமைக் கட்சியான திராவிட முன்னேற்றக் கழகம் உள்ளிட்ட கட்சி தலைவர்களை சந்திப்பேன்” என தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் இடைத்தேர்தல் தொடர்பாக திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் உடன் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி சந்திப்பு நிகழ்த்தியுள்ளார். சென்னை தேனாம்பேட்டையில் உள்ள திமுக தலைமை அலுவலகத்தில் இந்த சந்திப்பானது நடைபெற்று வருகிறது.

அவருடன் திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசு, ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், கோபண்ணா உள்ளிட்டோர் வந்திருந்தனர்.

இந்த சந்திப்பிற்கு பிறகு ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் திமுக கூட்டணி சார்பில் காங்கிரஸ் போட்டியிடும் என முடிவு செய்யப்பட்டு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இதனிடையே அத்தொகுதி காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டால் ஈவிகேஎஸ் இளங்கோவனின் மருமகளும் மறைந்த சட்டமன்ற உறுப்பினர் திருமகனின் இணையருமான பூர்ணிமா அவர்களை ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டியிட வைப்பதற்கான வாய்ப்பு அதிகம் இருப்பதாக அரசியல் வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது.

Views: - 276

0

0