ஜெயிலருக்கு அப்பறம் தான் இருக்கு மெயின் பிக்சர்… மீண்டும் மீண்டும் அண்ணாமலையுடன் மோதல்… செல்லூர் ராஜு கொடுத்த ரிப்ளை..!!

Author: Babu Lakshmanan
8 August 2023, 1:34 pm

அண்ணாமலை கருத்து குறித்து எனக்கு எந்தவொரு கவலையுமில்லை, குதிரைக்கு கடிவாளம் போட்டது போல நாங்கள் மாநாட்டு பணிகளில் ஈடுபட்டு உள்ளோம் என மதுரையில் அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜு பேட்டி

மதுரையில் ஆகஸ்ட் 20 ஆம் தேதி நடைபெறவுள்ள அதிமுக மாநாட்டு அழைப்பிதழ்லை அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜு அதிமுகவினருடன் இணைந்து மீனாட்சியம்மன் கோவிலில் வைத்து வழிபாடு நடத்தினார். இதனை தொடர்ந்து, இஸ்லாமியர்களின் புனித தளமான கோரிப்பாளையம் தர்கா, கிறிஸ்தவர்களின் புனித தளமான சென் மேரீஸ் தேவாலயம் ஆகிய வழிபாட்டு தளங்களிலும் அழைப்பிதழ்களை வைத்து வழிபாடு நடத்தினார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜு கூறுகையில், “மதுரையில் ஆகஸ்ட் 20 அதிமுகவின் பொன்விழா மாநாடு அரசியல் மாநாடாக நடைபெறுகிறது. மதுரையில் நடைபெறும் அதிமுக மாநாடு தமிழகத்தில் மாற்றத்தை கொண்டு வரும். மதுரை மக்கள் மாநாட்டில் பங்கேற்க வீடு வீடாக சென்று அழைப்பிதழ் கொடுக்க உள்ளோம், அதிமுக மாநாட்டுக்கு பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. மாநாட்டுக்கு வரும் அதிமுக தொண்டர்களுக்கு உணவு தயாரிக்க 10,000 சமையல் கலைஞர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர்.

3 இடங்களில் 300 கவுண்டர்கள் அமைத்து உணவு வழங்கப்படுகின்றது. இசையமைப்பாளர் தேவா கச்சேரி, மதுரை முத்து, ராஜலெட்சுமி – கணேஷ் ஆகியோர் நிகழ்ச்சிகள் உள்ளன. செந்தில் பாலாஜியால் அனைத்து அமைச்சர்களுக்கும் தூக்கம் இல்லாமல் பதற்றதுடன் தவித்து வருகிறார்கள், வெண்ணெய் தின்ற கண்ணன் வாயை திறந்த போது உலகமே தெரிவது போல, செந்தில் பாலாஜி வாயை திறந்தால் யார் யார் உள்ளே போக போகிறார்கள் என தெரியவில்லை.

அண்ணாமலை கருத்து குறித்து எனக்கு எந்தவொரு கவலையுமில்லை. குதிரைக்கு கடிவாளம் போட்டது போல நாங்கள் மாநாட்டு பணிகளில் ஈடுபட்டு உள்ளோம். ரஜினிகாந்த் நடித்த ஜெயிலர் 10 ஆம் தேதி ரிலீஸ், அதிமுக மாநாட்டின் மெயின் பிக்சர் 20 ஆம் தேதி நடைபெறுகிறது. தென் தமிழகத்தில் பிரசித்திபெற்ற சித்திரை திருவிழா போல அதிமுக மாநாடு நடத்தப்படும்,” என கூறினார்

  • tourist family negative review from valaipechu team படம் வர்ரதுக்கு முன்னாடியே நெகட்டிவ் விமர்சனம்; டூரிஸ்ட் ஃபேமிலி குறித்து வாய்விட்ட பிரபலம்!