அண்ணாமலை மீது வழக்கு போடுங்க.. வந்தது கிரீன் சிக்னல் : நீதிமன்றம் போட்ட பரபரப்பு உத்தரவு!!

Author: Udayachandran RadhaKrishnan
27 October 2023, 5:06 pm
an- Updatenews360
Quick Share

அண்ணாமலை மீது வழக்கு போடுங்க.. வந்தது கிரீன் சிக்னல் : நீதிமன்றம் போட்ட பரபரப்பு உத்தரவு!!

இரு மதத்தினர் இடையே மோதலை ஏற்படுத்தும் விதமாக பேசியதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மீது சமூக ஆர்வலர் பியூஸ் மனுஷ் அளித்த புகாரில் நீதிமன்றத்தில் வழக்கு தொடர அரசு அனுமதி வழங்கியுள்ளது. இதுதொடர்பாக சேலம் நீதிமன்றத்தில் சமூக ஆர்வலர் பியூஸ் மனுஷ் வழக்கு தொடர்ந்த நிலையில், அரசின் அனுமதியை பெற உத்தரவிடப்பட்டது. தற்போது அரசு அனுமதி வழங்கியுள்ளது. சேலத்தை சேர்ந்த சமூக ஆர்வலர் பியூஸ் மனுஷ் மாநகர போலீஸ் கமிஷ்னரிடம் அண்ணாமலை மீது புகார் ஒன்றை அளித்திருந்தார்.

அதில், கடந்த தீபாவளி பண்டிகை நேரத்தின்போது யூடியூப் ஒன்றில் பேட்டி கொடுத்த பாஜ மாநில தலைவர் அண்ணாமலை, இந்து கலாச்சாரத்தை அழிப்பதற்காக, தீபாவளியன்று பட்டாசு வெடிக்க கூடாது என கிறிஸ்தவ மிஷனரி தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் வெளிநாட்டில் பணத்தை பெற்று கொண்டு நீதிமன்றத்தில் வழக்கு போட்டுள்ளன என தெரிவித்திருந்தார். இதுதொடர்பாக நான் விசாரித்தபோது, உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தவர் அர்ஜூன் கோபால் என தெரியவந்தது.

அதுமட்டுமில்லாமல், வழக்கு தொடர்ந்தவர் இந்து சமூகத்தை சேர்ந்தவர் என்பதும் தெரியவந்தது. ஆனால், அண்ணாமலை வேண்டுமென இரு மதத்தினரிடையே மோதலை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக ஒரு பொய்யான தகவலை பரப்பியுள்ளார். இதனால், அண்ணாமலை மீது இந்திய தண்டனை சட்டம் பிரிவு 153, 505 உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் சமூக ஆர்வலர் மனுவில் தெரிவித்தாக கூறப்படுகிறது.

இதையடுத்து சேலம் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாகவும், ஆனால் அரசின் அனுமதியை வாங்க வேண்டும் என உத்தரவிட்டது.

இந்த உத்தரவை தொடர்ந்து சேலம் ஆட்சியருக்கு அந்த புகார் மனுவை சமூக ஆர்வலர் அனுப்பியுள்ளார். ஆட்சியர் அந்த புகார் மனுவை அரசுக்கு அனுப்பி வைத்தார். ஆர்வலர் புகார் மனுவை ஆய்வு செய்த அரசு வழக்கறிஞர்கள் வழக்கு பதிவு செய்வதற்கான காரணங்கள் இருக்கிறது என்றுள்ளனர்.

இந்த நிலையில், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மீது நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்ய அரசு அனுமதி வழங்கியுள்ளது. அரசு அனுமதி வழங்கியதை அடுத்து அண்ணாமலை மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தலாம் என உத்தரவிட்டனர். இந்த வழக்கு வரும் 4ம் தேதி சேலம் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Views: - 183

0

0