ஒருநாளைக்கு 14 மணிநேரம் வேலையா..? மீண்டும் அடிமை முறையை கொண்டு வர முயற்சி… Infosys நாராயண மூர்த்திக்கு வலுக்கும் எதிர்ப்பு..!!

Author: Babu Lakshmanan
27 October 2023, 5:01 pm
Quick Share

இளைஞர்கள் வாரத்திற்கு 70 மணிநேரம் வேலை செய்ய வேண்டும் என்று இன்ஃபோசிஸ் நிறுவனர் நாராயண மூர்த்தி கூறிய கருத்துக்கு கடும் விமர்சனங்கள் எழுந்து வருகின்றன.

இந்தியாவில் தொழிலாளர் சட்டவிதிகளின்படி ஒரு மனிதன் சராசரியாக 8 மணிநேரம் வேலை செய்ய வேண்டும் என்பதே விதி. இதைத்தான் நாட்டில் உள்ள பெரும்பாலான நிறுவனங்கள் கடைபிடித்து வருகின்றன. இப்படியிருக்கையில், இன்ஃபோசிஸ் நிறுவனர் நாராயண மூர்த்தி கூறிய கருத்து தற்போது பெரும் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளன.

அதாவது, மிகப் பெரிய பொருளாதார வளர்ச்சியை அடைந்த நாடுகளுடன் நாம் போட்டிப் போட வேண்டும் என்றால் நமது இளைஞர்கள் வாரத்திற்கு 70 மணிநேரம் வேலை செய்ய வேண்டும் என்று கூறினார். அதாவது, 5 நாட்கள் பணி நாட்களைக் கொண்டவர்கள் சராசரியாக ஒரு நாளைக்கு 14 மணிநேரமும், 6 நாட்களை வேலை நாட்களாகக் கொண்டவர்கள் ஒரு நாளைக்கு சராசரியாக 12 மணிநேரமும் வேலை செய்ய வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.

அவரது இந்தக் கருத்து குறித்து சமூகவலைதளங்களில் நெட்டிசன்கள் பெரும் விவாதமே நடத்தி வருகின்றனர்.

நெட்டிசன் ஒருவர், “உங்களிடம் வேலை செய்பவர்களை அடிமைகள் என நினைக்கிறார் போல, இந்த நவீன காலத்தில் மீண்டும் அடிமை முறையை கொண்டு வர முயற்சிக்கிறார்,” என விமர்சித்துள்ளார்.

“5 நாட்களுக்கு 14 மணி நேரம் வேலையுடன் சேர்த்து, வேலைக்கு சென்று வருவதற்கு, ஓரிரு மணி நேரம் போய்விடும். பிறகு எப்படி சாப்பிடுவது, தூங்குவது. அதுமட்டுமில்லாமல், குடும்பத்தினருடன் எப்படி நேரம் செலவழிக்க முடியும்,” எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.

மற்றொருவரோ, “12 மணிநேரம் வேலை செய்தால் மனதளவிலும், உடலளவிலும் பலவீனம் அடைந்து விடுவோம். பிறகு சம்பாரிக்கும் பணத்தை மருத்துவமனைகளில் செலவிடச் சொல்கிறீர்களா..?”, என்று கேள்வி எழுப்பியுள்ளார். இதேபோல, நெட்டிசன்கள் பல்வேறு கேள்விகளையும், கருத்துக்களையும் கூறி வருகின்றனர்.

Views: - 1023

0

0