இரட்டை இலை சின்னம் கிடைப்பது அந்த இரண்டு பேரின் கையில்தான் உள்ளது : காங்கிரஸ் எம்பி திருநாவுக்கரசர் விமர்சனம்!

Author: Udayachandran RadhaKrishnan
28 January 2023, 9:53 pm

நெல்லை சவேரியார் கல்லூரி மாணவர் மன்ற நூற்றாண்டு விழாவில் திருச்சி எம்பி திருநாவுக்கரசர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றிய பின் செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியில், ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் வரும் 3 ம் தேதி வேட்பு மனு தாக்கல் செய்கிறோம்.

ஈரோடு இடைத்தேர்தலில் வேட்பாளர் ஈவிகேஸ் இளங்கோவன் மகத்தான வெற்றி பெறுவார். கடந்த முறையை விட இந்த முறை வரலாற்று சிறப்புமிக்க வெற்றியை அவர் பெறுவார்.

வேட்பு மனு தாக்கல் தொடங்குவதற்கு முன்பே அதிகார துஷ்பிரயோகம் பணம் பலம் என்று பாஜக கூறுவது அவர்கள் படுதோல்வி அடைவோம் என்ற பயத்தில் புலம்ப ஆரம்பித்து விட்டதைபோல் உள்ளது.

திமுக கூட்டணி கடந்த சட்டமன்ற, நாடாளுமன்ற,உள்ளாட்சி தேர்தல்களில் மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ளது. கடந்த ஒன்றரை ஆண்டு காலமாக திமுக தலைவர் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் சிறப்பாக நல்லாட்சி நடத்தி வருகிறார்.

அதிமுக மூன்று நான்கு அணிகளாக பிரிந்துள்ளது. யார் வேட்பாளர் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்க முடியாமால் குழப்பத்தில் சிக்கியிருக்கின்றனர்.அதிமுக கூட்டணியில் உள்ள பாஜக அதிமுகவுக்கு ஆதரவு கொடுக்குமா தனியாக நிற்குமா என்பதே இதுவரை தெரியவில்லை.

பாஜக தனது கைப்பாவையாக அதிமுகவை ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கிறது.பாஜக அதிமுகவில் பிரிந்துள்ளவர்களை ஒன்று சேர்க்க முயற்சி செய்கிறது. ஆனால் ஒன்று சேர முடியுமா என தெரியவில்லை.

அதிமுக கூட்டணியில் பிரிந்தவர்கள் வெகு தொலைவாக சென்று விட்டார்கள். இபிஎஸ் ஓபிஎஸ் இருவரும் இணைவார்களா என்பது தெரியவில்லை. அதிமுகவிற்கு சின்னத்தை கொடுக்கலாம் கொடுக்காமலும் இருக்கலாம். சின்னத்தைப் பொறுத்தவரை மோடியோ அமித்ஷாவோ மேல் இடத்தில் உள்ளவரோ சொல்வது தான் நடக்கும்.

யார் எந்த சின்னத்தில் நிற்பார்கள் என்பதே இதுவரை தெரியவில்லை தாமரை நின்றாலும் இரட்டை இலை நின்றாலும் திமுக கூட்டணி கட்சி வேட்பாளர் மகத்தான வெற்றி பெறுவார் என தெரிவித்தார்.

  • vijay is bjp c team explained by vanathi srinivasan விஜய் பாஜகவோட C team? தவெக குறித்து ஓபனாக போட்டுடைத்த பிரபலம்!