யாருக்கு யார் எதிரி? மக்கள் கிட்ட போய் கேளுங்க : அண்ணாமலைக்கு எடப்பாடி பழனிசாமி பதிலடி!!

Author: Udayachandran RadhaKrishnan
6 October 2023, 6:07 pm
EPS - Udpatenews360
Quick Share

யாருக்கு யார் எதிரி என மக்களுக்கு தெரியும்… அண்ணாமலை கருத்துக்கு எடப்பாடி பழனிசாமி பதிலடி!!

சென்னை செல்வதற்காக கோவை விமான நிலையம் வந்தடைந்த எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது பேசிய அவர், வரிகள் ஏதேனும் நிலுவையில் இருந்தால் அதற்கு வட்டி வசூல் செய்யும் அரசாங்கமாக இந்த அரசு உள்ளது என குற்றம் சாட்டினார்.

ஆசிரியர்கள் போராட்டம் குறித்தான கேள்விக்கு மு.க.ஸ்டாலின் எதிர்க்கட்சித் தலைவராக இருந்த போது தேர்தல் அறிக்கையாக வெளியிட்டதில் இடம்பெற்றது தான் ஆசிரியர்களின் அந்த கோரிக்கை, என குறிப்பிட்ட அவர் அரசு பரிசீலித்து அவர்கள் அறிவித்த அறிவிப்பை நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்துவதாக தெரிவித்தார்.

இந்த அரசாங்கம் ஒரு சர்வாதிகார போக்கில் உள்ளது என குறிப்பிட்ட அவர் நாட்டில் நிலவுகின்ற பிரச்சினையை சமூக வலைத்தளங்களில் எடுத்துச் சொன்னால் அதனை பொறுத்துக் கொள்ள முடியாமல் குறிப்பாக அதிமுக தகவல் தொழில்நுட்ப நிர்வாகிகள் மீது தொடர்ந்து பொய் வழக்குகள் போடுவது தான் இந்த அரசின் வாடிக்கையாக உள்ளது என தெரிவித்தார்.

மேலும் இதற்கெல்லாம் ஒரு காலத்தில் பதில் சொல்லியாக வேண்டும் என தெரிவித்தார். ஒட்டுமொத்தமாக அரசாங்கமே குளறுபடியாக தான் உள்ளது என சாடிய அவர் அதனால்தான் காவல் துறையும் குளறுபடியாக உள்ளது எனவும் அரசாங்கம் நன்றாக இருந்தால் தான் காவல்துறை சரியான முறையில் செயல்படும் எனவும் தலைமையே சரியில்லையே என்றார்.

தினம்தோறும் கொலை, கொள்ளை, வழிப்பறி, பாலியல் வன்கொடுமை போன்றவை எல்லாம் தான் அன்றாட நிகழ்வாக இருப்பதாக தெரிவித்த அவர் தொலைக்காட்சியிலும் பத்திரிகை செய்தியிலும் இதுபோன்ற செய்திகள் தான் இடம் பெறுவதாக தெரிவித்தார். மேலும் பொம்மை முதலமைச்சர் ஆளுகின்ற நாட்டில் இது போன்ற நிலைமை தான் நிலவும் எனவும் கூறினார்.

நாடாளுமன்ற தேர்தலில் திமுகவிற்கும் பாஜகவிற்கும் தான் போட்டி என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறியது குறித்தான கேள்விக்கு, அது அவர் கூறுகிறார் அதற்கு நான் என்ன செய்ய முடியும் எனவும் மக்களிடத்தில் யார் யாருக்கு எதிரி என்று கேட்டால் மக்கள் தெளிவாக பதில் அளிப்பார்கள் என்றார்.

அதிமுக தான் பிரதான எதிர்க்கட்சி என தெரிவித்த அவர் நீண்ட காலம் தமிழகத்தில் ஆட்சி செய்த கட்சி இது எனவும் மக்களிடத்தில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றிருக்கக் கூடிய இந்த கட்சியை வேண்டும் என்றே திட்டமிட்டு சில பேர் கூறுவதற்கு நாங்கள் என்ன செய்ய முடியும் என்றார்.

மேலும் உதயநிதி ஸ்டாலின் மாய உலகத்தில் மிதந்து கொண்டு இருப்பதாகவும் நாடாளுமன்ற தேர்தல் வரும் பொழுது அதற்கு ஒரு விடிவு காலம் பிறக்கும் எனவும் கூறினார்.

பாஜக மேலிடத்தில் பேச்சுவார்த்தை ஏதேனும் நடைபெறுகிறதா என்ற கேள்விக்கு அது ஒரு பொழுதும் கிடையாது எனவும் அதிமுக ஏற்கனவே தெளிவான முடிவை எடுத்து அறிவிக்கப்பட்டு விட்டது எனவும் பத்திரிக்கை மற்றும் ஊடக நண்பர்கள் தான் ஏதாவது ஒரு ஃ வைத்துப் பேசி வருவதாகவும் கூறினார்.

மேலும் இப்பொழுது ஆசிரியர்கள் போராட்டம் குறித்து ஏதேனும் தொலைக்காட்சிகளில் விவாத மேடைகள் நடைபெறுகிறதா என கேள்வி எழுப்பிய அவர் ஊடகங்களுக்கு இந்த அரசின் மீது பயம் உள்ளதாகவும் சாடினார்.

கூட்டணி குறித்து வி பி துரைசாமி கூறுகின்ற கருத்திற்கு நாங்கள் பொறுப்பாக முடியாது எனவும் எங்களுடைய நிலைப்பாட்டையும் தீர்மானத்தையும் நாங்கள், தெளிவாக அறிவித்து விட்டோம் எனவும் தெரிவித்த அவர் தினம்தோறும் இது குறித்து கேள்வி எழுப்பிக் கொண்டே இருந்தால் நாங்கள் என்ன தான் செய்வது என வினவினார்.

எங்களைப் பொறுத்தவரை தமிழ்நாட்டின் உரிமையை பாதுகாக்க வேண்டும், தமிழ்நாடு வளர்ச்சி பெற புதிய திட்டங்கள் வழங்கப்பட வேண்டும் அதிக நிதி ஒதுக்க வேண்டும் சிறுபான்மை மக்களுக்கு பாதுகாப்பு கிடைக்க வேண்டும் இதுதான் எங்களுடைய பிரதான கோரிக்கை என்று கூறிய அவர் யார் ஆட்சிக்கு வந்தாலும் அதிமுக அதிக இடங்களில் வெற்றி பெறுகின்ற பொழுது இதனை முன் நிறுத்துவோம் என தெரிவித்தார்.

தமிழ்நாடு மக்களின் குரல் நாடாளுமன்றத்தில் ஒலிக்கும் எனவும் பல்வேறு மாநிலங்களை உள்ளடக்கிய தேசிய கட்சிகள் அந்தந்த மாநில பிரச்சனைகளைத் தான் அவர்களும் முன்னெடுக்கிறார்கள் எனவும் கூறிய அவர் உதாரணத்திற்காக கர்நாடக அரசு நமக்கு வழங்க வேண்டிய நீரை வழங்குகிறதா?,

இங்க இருக்கக்கூடிய காங்கிரஸ் கட்சியினர் தண்ணீர் வேண்டும் என கேட்கிறார்கள், ஆனால் அங்கு இருக்கக்கூடிய காங்கிரஸ் அரசாங்கம் தண்ணீர் விடுவதில்லை இங்கு இருக்கக்கூடிய பாஜக தண்ணீர் வேண்டும் என்கிறது அங்கிருக்க கூடிய பாஜக தண்ணீர் திறந்து விடக்கூடாது என்கிறது. இதுதான் தேசிய அரசியல் அதற்காகத்தான் நாங்கள் இந்த நிலைப்பாட்டை எடுத்திருக்கின்றோம் என்றார்.

எங்களைப் பொறுத்தவரை தமிழ்நாட்டின் உரிமைகளை பாதுகாக்க வேண்டும், தமிழ்நாட்டு மக்கள்தான் எங்களுடைய வேட்பாளர்களை வாக்களித்து வெற்றி பெற செய்கிறார்கள் எனவே அவர்களது குரல் நாடாளுமன்றத்தில் ஒலிக்கும்.

தமிழ்நாட்டு மக்கள் என் உரிமைகளை பாதுகாப்பதற்காக தான் நாங்கள் தனித்துப் போட்டியிடுகிறோம் என்பதை இந்நேரத்தில் உணர்த்துகிறேன் என தெரிவித்தார்.

பாஜகவில் இருந்து அதிமுக வெளிவந்தது குறித்து டிடிவி தினகரன் தெரிவித்திருந்த கருத்து குறித்தான கேள்விக்கு பதில் அளித்த அவர், டிடிவி தினகரனை நாங்கள் பொருட்படுத்தவில்லை எனவும் அவரது கட்சியை ஒரு கட்சியாக நாங்கள் பார்ப்பதில்லை எனவும் அவரது அட்ரஸ் காணாமல் போய்விடும் விலாசம் இல்லாத கட்சியாக அவரது கட்சி போய்விடும் என தெரிவித்தார்.

தொடர்ந்து அதிமுகவில் சிறுபான்மையினர் சேர்ந்து வருவதாக தெரிவித்த அவர் பல்வேறு கட்சித் தலைவர்கள் தன்னை சந்தித்து அவர்களது கோரிக்கைகளை முன் வைத்துள்ளதாக தெரிவித்தார்.
எம்ஜிஆர் காலத்தில் இருந்தே சிறுபான்மை மக்களை காக்கின்ற ஒரே கட்சி அதிமுக தான் எனவும் கண்ணிமை போல் சிறுபான்மை மக்களை காப்போம் என தெரிவித்தார்.

ஓபிஎஸ் தொடர்ந்து உள்ள வழக்கு குறித்தான கேள்விக்கு அதன் தீர்ப்பை நீதிமன்றம் தான் சொல்ல வேண்டும் எனவும், பல நீதிமன்றங்களில் எங்களுக்கு சாதகமான உண்மையான தீர்ப்பு கிடைக்கப்பெற்று விட்டது இந்நிலையில் அவர்(ஓபிஎஸ்) மேல் முறையீடு செய்துள்ளார் அந்த மேல்முறையீட்டையும் நாங்கள் சட்டரீதியாக சந்தித்து வெல்வோம் என பதிலளித்தார்.

பல ஆண்டுகளாக சிறையில் உள்ள இஸ்லாமிய மக்களை விடுவிப்பது குறித்து சட்டரீதியாக ஆலோசித்து எந்தெந்த வகையில் அவர்களுக்கு ஆதரவு தர வேண்டுமோ எங்கள் கட்சி அந்த வகையில் அவர்களுக்கு ஆதரவு தரும் என்றார்.

திமுக ஆட்சி வந்த பிறகு மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு விட்டார்கள் எனவும் கொரோனா காலத்தில் மிகவும் பாதிக்கப்பட்டு தொழில் மெல்ல மெல்ல உயர்ந்து வந்த நிலையில் மின் கட்டணம் என்ற மிகப்பெரிய பாரத்தை இவர்கள் சுமத்தி உள்ளதாகவும், இதனால் சிறு குறு நடுத்தர தொழில் செய்பவர்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

இந்தியாவிலேயே சிறு குறு நடுத்தர தொழில்கள் செய்பவர்கள் அதிகமாக உள்ள மாநிலம் தமிழ்நாடு தான் என தெரிவித்த அவர் இவர்கள் அனைவரும் மின் கட்டணத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

இந்நிலையில் அதற்கு சலுகை வழங்கப்படும் என அரசு அறிவித்துள்ள நிலையில் அது குறித்து எதிர்காலத்தில் தான் தெரியும் என கூறினார். அதிமுக கூட்டணி துவங்கப்பட்டு விட்டதா யாரெல்லாம் கூட்டணியில் சேருவார்கள் என்ற கேள்விக்கு அது குறித்து கூட்டணி கட்சிகள் தங்களுடன் இணையும் பொழுது நான் தெரியப்படுத்துவேன் என கூறினார்.

மேலும் அதிமுக தலைமையில் அமைகின்ற கூட்டணி வலிமையான கூட்டணியாகவும் வெற்றி கூட்டணியாகவும் அமையும் தெரிவித்தார்.

Views: - 222

0

0