அப்பவே சொன்னேன்… இப்ப 4 பேர் பலி ஆகிட்டாங்க : திமுக அரசு தான் முழு பொறுப்பு : இபிஎஸ் கடும் கண்டனம்!!

Author: Udayachandran RadhaKrishnan
5 February 2023, 3:59 pm
EPS vs Stalin - Updatenews360
Quick Share

வாணியம்பாடியில் தனியார் நிறுவனர் சார்பாக இலவச சேலை வழங்கிய போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 4 பேர் உயிரிழந்துள்ளனர்.

இது தொடர்பாக எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், விடியா திமுக ஆட்சியின் நிர்வாகத் திறமை இன்மையினால் வயது முதிர்ந்த நான்கு அப்பாவி மகளிர் பரிதாபமாக தங்கள் இன்னுயிரை இழந்த துயர நிகழ்ச்சி 4.2.2023 அன்று வாணியம்பாடியில் நிகழ்ந்துள்ளது.

4ஆம் தேதி அன்று பிற்பகல், திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் ஒரு தனியார் இலவச சேலை வழங்கும் நிகழ்ச்சியில், ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கிய வயது முதிர்ந்த 4 மகளிர் தங்கள் இன்னுயிரை இழந்துள்ளனர் என்ற செய்தி அறிந்து மிகுந்த மனவேதனை அடைந்தேன்.

மரணமடைந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்கிறேன். இந்த ஆண்டு தைப் பொங்கல் திருநாளுக்கு அரசின் விலையில்லா வேட்டி, சேலையினை வழங்கி இருந்தால், இந்த தனியார் வழங்கும் இலவச சேலையினை வாங்க ஒரே சமயத்தில் சுமார் 1500 ஏழை மகளிர் குழுமியிருக்கமாட்டார்கள்.

கூட்ட நெரிசல் காரணமாக அப்பாவி ஏழை மகளிர் தங்கள் இன்னுயிரை இழந்திருக்கவும் மாட்டார்கள்.நடந்தேறிய இந்தத் துன்ப நிகழ்வுக்குக் காரணமான அதிகாரிகள் மீதும், நிகழ்ச்சியை நடத்தியவர்கள் மீதும் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று இந்த விடியா அரசை வலியுறுத்துகிறேன்.

நிர்வாகத் திறனற்ற இந்த அரசின் விலையில்லா வேட்டி, சேலை வழங்கும் திட்டத்தின் காலதாமதத்தாலும், அலட்சியத்தாலும் உயிரிழந்தவர்களின் ஒவ்வொரு குடும்பத்தினருக்கும் இந்த அரசு அறிவித்த நிவாரணத்தை 10 லட்சம் ரூபாயாக உயர்த்தி வழங்க வேண்டும் என்றும், காயமடைந்தவர்களுக்கு ஒரு லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.
குறித்த காலத்தில் விலையில்லா வேட்டி, சேலையை வழங்காத இந்த விடியா திமுக அரசுதான் இந்த நிகழ்வுக்கு முழு பொறுப்பேற்க வேண்டும் என்றும், இனியாவது இந்த அரசு விழித்துக்கொண்டு, இதுபோன்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சிகள் நடைபெறும் போது, எந்தவித அசம்பாவிதமும் நடைபெறாத வண்ணம் முன்னெச்சரிக்கையுடன் நடத்துவதற்குத் தேவையான உறுதியான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று இந்த விடியா அரசை வற்புறுத்துகிறேன் என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

Views: - 303

0

0