செந்தில் பாலாஜி வாய் திறந்தால் முதலமைச்சர் ஸ்டாலின் இருப்பது கோட்டை அல்ல : எடப்பாடி பழனிசாமி விமர்சனம்!!

Author: Udayachandran RadhaKrishnan
7 July 2023, 8:27 am
Edappadi -Updatenews360
Quick Share

திருச்சி திருவெறும்பூரில் உள்ள பெல் நிறுவன வளாகத்தில் எம்ஜிஆரின் முழு உருவ வெண்கலச் சிலையை அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்.

இதனையடுத்து, பொதுக்கூட்டத்தில் பேசிய அவர்;- தங்களது வாழ்நாள் முழுவதும் மக்களுக்காக உழைத்தவர்கள் புரட்சி தலைவர் எம்ஜிஆர், புரட்சி தலைவி ஜெயலலிதா.

ஓபிஎஸ் நடத்திய மாநாட்டை விட எம்ஜிஆர் சிலை திறப்பு விழா பொதுக்கூட்டத்திற்கு அதிகம் பேர் வந்துள்ளனர். எந்த கொம்பானாலும் அதிமுகவை தொட்டுப்பார்க்க கூட முடியாது. ஸ்டாலினை எத்தனை பி டீம் உருவாக்கினாலும் அதிமுகவை அழிக்க முடியாது.

உங்கள் தலைவரைப் போல, வீட்டில் இருப்பவர்கள், குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் ஆட்சி அதிகாரத்துக்கு வரவேண்டும் என்பதற்காக எம்ஜிஆர் அதிமுகவைத் தோற்றுவிக்கவில்லை.

வருமானவரி, அமலாக்கத்துறை சோதனைகளால் திமுக அமைச்சர்கள் தூக்கமின்றி தவிக்கின்றனர். அமலாக்கத்துறை செந்தில்பாலாஜியை கைது செய்தவுடன் ஒட்டுமொத்த அமைச்சரவையே மருத்துவமனைக்கு சென்ற ஏன்? ஆட்சியை காப்பாற்றவே செந்தில் பாலாஜியை மருத்துவமனைக்கு சென்று ஸ்டாலினும், அமைச்சர்களும் சந்தித்தனர்.

முதல்வர் ஸ்டாலின் அவர்களே, செந்தில் பாலாஜி மட்டும் வாய் திறந்தால் நீங்கள் இருப்பது கோட்டை அல்ல. உதயநிதியும், சபரீசனும் ரூ.30,000 கோடியை வைத்துக்கொண்டு என்ன செய்வதென்று தெரியாமல் தடுமாறுகின்றனர்.

தமிழகத்தில் 31 ஆண்டு காலம் ஆட்சி செய்த ஒரே கட்சி அதிமுக. 31 ஆண்டு கால ஆட்சியில் எண்ணற்ற திட்டங்களைக் கொண்டுவந்து எம்ஜிஆரும், ஜெயலலிதாவும், இந்தியாவிலேயே தமிழகத்தை முதன்மை மாநிலமாக உருவாக்கிச் சென்றுள்ளனர். ஆனால், இன்றைக்கு முதல்வர் ஸ்டாலின், இந்தியாவின் முதன்மை முதல்வர் தான் என்று சொல்லிக் கொள்கிறார்.

2 ஆண்டுகால திமுக ஆட்சி தமிழகத்தின் இருண்ட ஆட்சி என மக்கள் விமர்சனம் செய்கின்றனர். மக்களை பற்றி சிந்திக்காத பொம்மை முதல்வர் தமிழகத்தை ஆட்சி செய்கிறார். என்ன பேசுவது என்று கூட தெரியாமல் தொட்டு பார், சீண்டிப் பார் என்கிறார் முதல்வர் ஸ்டாலின்.
திமுக ஆட்சிக்கு வந்ததும் முதல் கையெழுத்து நீட் தேர்வுக்கு எதிராக என்று கூறி மாணவர்களை ஏமாற்றிவிட்டனர். மின்சாரக் கட்டணம், சொத்து வரி, வீட்டு வரியையும் கடுமையாக உயர்த்திவிட்டது விடியா திமுக அரசு. தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கேட்டால் நாள்தோறும் கொலை, கொள்ளை சம்பவங்கள் அரங்கேறி வருகிறது.

ஜூன் மாதத்திற்கான தண்ணீரை திறக்காமல் தமிழ்நாடு விவசாயிகளுக்கு துரோகம் செய்துள்ளது கர்நாடக அரசு. இந்தியாவை ஒருங்கிணைப்பேன் எனக் கூறும் முதலமைச்சர் கர்நாடக காங்கிரசிடம் ஏன் பேசவில்லை என கேள்வி எழுப்பியுள்ளார். கர்நாடக முதல்வரிடம் பேசி தமிழகத்திற்கான தண்ணீரை முதல்வர் பெறாதது ஏன்? எனவும் இபிஎஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.

Views: - 220

0

0