அடிப்படை வசதி கூட இல்லாத காஞ்சி அரசு மருத்துவமனை… கேசுவலாக வெளியே சுற்றித் திரியும் கொரோனா நோயாளிகள்… கொரோனா வார்டில் இருந்து தப்பிய காவலர்..

Author: Babu Lakshmanan
8 June 2022, 5:42 pm
Quick Share

காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் முறையான சிகிச்சை மற்றும் வசதிகள் இல்லை என கூறி, கொரோனா பாஸிட்டிவ் உறுதி செய்யப்பட்ட காவலர் ஒருவர் மருத்துவமனையை விட்டு யாரிடமும் சொல்லாமல் கொள்ளாமல் வெளியேறியதால் பரபரப்பு ஏற்பட்டது.

உலகையே குலுங்க வைத்த கொரோனா வைரஸ் தொற்று பல விதமாக உருமாறி மீண்டும் தமிழகத்தை தாக்கத் தொடங்கி உள்ளது. சமீப நாட்களாக சென்னை, செங்கல்பட்டு உள்ளிட்ட சில மாவட்டங்களில் புதிய கொரோனா வைரஸ் தொற்று அதிகரிக்க தொடங்கி உள்ளது.

இதை கருத்தில் கொண்ட மத்திய அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கையை எடுக்க வேண்டும் என தேசத்தில் உள்ள அனைத்து மருத்துவமனைகளுக்கும், மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் மூலம் அறிவுறுத்தியது.

இந்த நிலையில், காஞ்சிபுரம் மாவட்டத்தில் பணி செய்யும் காவலர் ஒருவருக்கும், கேரளா மாநிலம் திருச்சூர் மாவட்டத்தை சேர்ந்த ஸ்ரீபெரும்புதூர் ராஜீவ்காந்தி நேஷனல் இன்ஸ்டிட்யூட் கல்லூரி மாணவர் ஒருவருக்கும் கொரோனா வைரஸ் தொற்று நேற்று உறுதி செய்யப்பட்டது. அவர்கள் இருவரும் காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் நேற்று உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டிருந்தனர்.

உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டு இருந்த காவலருக்கு மருத்துவமனையில் எந்தவிதமான முறையான சிகிச்சையும், வசதிகளையும் ஏற்படுத்தித் தரவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால் அச்சமுற்ற அந்த காவலர் யாரிடமும் சொல்லாமல் கொள்ளாமல் மருத்துவமனையை விட்டு தப்பி சென்றுவிட்டார்.

கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு அரசு தலைமை மருத்துவமனையில் உள் நோயாளியாக அனுமதிக்கப்பட்டுள்ள அரசாங்க உத்தியோகம் செய்யும் காவலர் , அரசு மருத்துவமனையின் அலட்சியப் போக்கை கண்டு பயந்து யாரிடமும் சொல்லாமல் கொள்ளாமல் வெளியேறிய சம்பவம் மருத்துவமனை வட்டாரத்தில் மிகுந்த பரபரப்பை உண்டாக்கியது.

மருத்துவமனையை விட்டு காவலர் வெளியேறிய விஷயம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்துக்கும், காவல்துறை தலைவர் அவர்களுக்கும் தெரிவிக்கப்பட்டதாக மருத்துவமனை ஊழியர்கள் தெரிவித்தனர்.

அதேபோல், கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட ஸ்ரீபெரும்புதூர் கல்லூரி மாணவருக்கும் முறையான தனிமைப்படுத்தப்பட்ட வார்டில் அனுமதிக்காமல் அங்கும் இங்கும் அலைய விட்டது பரிதாபமாக இருந்தது.

,இது குறித்து கேட்ட போது, “இந்த மருத்துவமனையை விட நான் தங்கியுள்ள விடுதியிலேயே அனைத்து வசதிகளும் உள்ளது. எனவே, என்னை நான் தனிமைப்படுத்திக் கொள்கின்றேன்,” என அந்த கல்லூரி மாணவர் கூறினார்.

அவர் கூறியது போலவே, இன்று காலை பத்து முப்பது மணி வரையில் கொரோனா நோயாளிகளை தங்க வைக்க அரசு மருத்துவமனை போதிய, முறையான நடவடிக்கைகளை எடுக்கவில்லை என்பதை நமது செய்தியாளரிடம் பலர் புலம்பினார்கள் .

இவை அனைத்தும் காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனையின் சமீபகால மோசமான செயல்பாட்டினை வெளிச்சம் போட்டு காட்டுகிறது என சமூக ஆர்வலர்கள் வேதனையுடன் தெரிவித்தனர்.

Views: - 704

0

0