கரூரில் 2வது நாளாக நீடிக்கும் ஐடி ரெய்டு… அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு தொடர்புடைய இடங்களில் தொடரும் சோதனை..!!

Author: Babu Lakshmanan
24 June 2023, 10:54 am
Quick Share

கரூரில் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு தொடர்புடைய இடங்களில் இரண்டாவது நாளாக வருமான வரித்துறை சோதனை நடந்து வருகிறது.

கரூரில் அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்புடைய 25க்கு மேற்ப்பட்ட இடங்களில் கடந்த மாதம் 26ஆம் தேதி தொடங்கிய வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையை தொடர்ந்து 8 நாட்கள் நடைபெற்றது. இதையடுத்து, அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்டார். கைதின் போது ஏற்பட்ட உடல்நலக்குறைவால் அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த நிலையில், மீண்டும் கரூரில் நேற்று திடீர் சோதனையை தொடங்கிய அதிகாரிகள் அடுத்தடுத்து 7 இடங்களில் சோதனை நடத்தி பரபரப்பை ஏற்படுத்தினர்.

கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட கோதை நகர் பகுதியில் அமைந்துள்ள சக்தி மெஸ் உணவக உரிமையாளர்கள் கார்த்திக் மற்றும் அதிபர் ரமேஷ் ஆகிய இருவரது சீல் வைக்கப்பட்ட வீடுகளில், சீலை அகற்றிவிட்டு சோதனை தொடங்கினர். மூன்று மணி நேரம் சோதனை நடத்தினர்.

அங்கு சோதனையை முடித்துக் கொண்டு புறப்பட்ட அதிகாரிகள், காந்திபுரம் பகுதியில் அமைந்துள்ள அடுக்குமாடி குடியிருப்பில் அமைச்சர் செந்தில் பாலாஜியின் நண்பர் அரசு ஒப்பந்ததாரர் சங்கர் ஆனந்த் என்பவரின் அடுக்குமாடி குடியிருப்பில் இருக்கும் வீடு மற்றும் காமராஜபுரம் பகுதியில் அமைந்துள்ள பி.எஸ்.கே பில்டர்ஸ் பொறியாளர் பாஸ்கர் அலுவலகம், வையாபுரி நகர் பகுதியில் அமைந்துள்ள ஆடிட்டர் அலுவலகம், காளிபாளையம் பெரியசாமி வீடு மற்றும் ஜவகர் பஜார் பகுதியில் அமைந்துள்ள பழனி முருகன் நகை கடையில், அடுத்தடுத்து சோதனையை நடத்தி பரபரப்பை ஏற்படுத்தினர்.

மற்ற இடங்களில் சோதனை நிறைவடைந்த நிலையில், கரூர் ஜவகர் பஜார் பகுதியில் உள்ள பழனிமுருகன் நகைக்கடையில் மட்டும் தொடர் சோதனை நடைபெற்றது. இரவு 11:30 வரை நடைபெற்ற சோதனைக்கு பிறகு, மீண்டும் இரண்டாவது நாளாக கரூர் ஜவஹர் பஜார் பகுதியில் உள்ள அதே பழனி முருகன் நகை கடையில் தற்போது வருமானவரி துறை அதிகாரிகள் சோதனை ஈடுபட்டு வருகின்றனர்.

அப்பகுதிகளில் துப்பாக்கி ஏந்திய மத்திய துணை ராணுவ படை வீரர்கள் பாதுகாப்பு வழங்கப்பட்டு வருகிறது.

Views: - 345

0

0