கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் 2வது நாளாக பயணிகள் போராட்டம்… பேருந்துகளை சிறைபிடித்து ஆர்ப்பாட்டம் நடத்தியதால் பரபரப்பு..!!

Author: Babu Lakshmanan
11 February 2024, 11:21 am
Quick Share

சென்னை – கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் பேருந்துகளை பொதுமக்கள் சிறைபிடித்து ஆர்ப்பாட்டம் நடத்தியதால் பெரும் பரபரப்பு நிலவியது.

சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில், கிளாம்பாக்கத்தில் புதிய பேருந்து நிலையம் திறக்கப்பட்டு, அங்கிருந்து தென்மாவட்டங்களுக்கு 1000க்கும் மேற்பட்ட பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. ஆம்னி பேருந்துகளும் கிளாம்பாக்கத்தில் இருந்து இயக்கப்பட வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது.

ஆனால், ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்ததுடன், சென்னை உயர்நீதிமன்றத்திலும் வழக்கு தொடர்ந்தனர். இறுதியில், சென்னையில் குறிப்பிட்ட இடங்களில் பேருந்துகளை ஏற்றி, இறக்க தமிழக அரசு அனுமதியளித்திருந்தது.

இதனிடையே, திருச்சிக்கு செல்ல போதிய பேருந்துகள் இல்லை எனக் கூறி, பல மணி நேரம் காத்திருப்பதாக சொல்லி, நேற்று முன்தினம் பயணிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் அமர்ந்து பயணிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பு நிலவியது.

இந்த நிலையில், விழுப்புரம், சேலம் உள்ளிட்ட தென் மாவட்டங்களுக்கு போதிய பேருந்துகள் இயக்கப்படவில்லை எனக் கூறி 2வது நாளாக நேற்றும் பயணிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். கூடுதல் பேருந்துகள் இயக்கப்படும் என்று அதிகாரிகள் கூறிய நிலையிலும், பேருந்துகள் இயக்கப்படவில்லை என அவர்கள் குற்றம்சாட்டினர்,

இதைத் தொடர்ந்து, பயணிகளிடம் அதிகாரிகள் மற்றும் போலீசார் பேச்சுவார்த்த நடத்தி போராட்டத்தை கைவிடச் செய்தனர்.

Views: - 179

0

0