கூட்டணியை விட்டு வெளியேறுங்க… மாலை போட்டு வரவேற்கிறேன் : திருமாவுக்கு அழைப்பு விடுத்த அண்ணாமலை!!

Author: Udayachandran RadhaKrishnan
1 March 2023, 10:07 pm
Annamalai - Updatenews360
Quick Share

விசிக தலைவர் திருமாவளவன் எம்.பி, பாஜகவுக்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தியபோது பாமக மற்றும் பாஜக இருக்கும் கூட்டணியில் விசிக இருக்காது எனப் பேசினார்.

இந்த நிலையில் பா.ஜ.க சார்பாக, சென்னையில் `அனைத்து சக்தி கேந்திர’ பொறுப்பாளர்களுடனும், திருவள்ளூர் மேற்கு, திருவள்ளூர் கிழக்கு மாவட்டங்களின் சக்தி கேந்திர பொறுப்பாளர்களுடனும் பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை, கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் வழிகாட்டுதல்படி இன்று ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

இந்தக் கூட்டத்துக்குப் பிறகு செய்தியாளர்களை சந்தித்த அண்ணாமலை, பா.ஜ.க-வுக்கும், வி.சி.க-வுக்கும் இடையிலான யுத்தம் கிடையாது. வி.சி.க-வுக்கும் அண்ணன் தடா பெரியசாமிக்கும் நடக்கும் யுத்தம் இது.

வி.சி.க-வினர் அண்ணன் தடா பெரியசாமியிடம் போட்டியிட்டு, அதன் பிறகு எங்கள் கிளை தலைவரிடம் மோதுங்கள். பா.ஜ.க என்பது இந்தியா முழுவதும் இருக்கக் கூடிய இயக்கம். அதில் எத்தனை உறுப்பினர்கள் இருக்கிறார்கள், எத்தனை மாநிலங்களில் எங்கள் கட்சி ஆட்சியில் இருக்கிறது என்பதைப் பார்க்கவேண்டும்.

திருமாவளவன் அண்ணாவுக்கு துணை முதல்வராக வேண்டும் என்று கொஞ்சம் ஆசை. அதனால் ஸ்டாலின் அவர்களிடம், கூட்டணியைவிட்டு போய்விடுவேன், கூட்டணியைவிட்டு போய்விடுவேன் என்று சொல்லி கொண்டிருக்கிறார்.

அப்படி போவதாக இருந்தால் அண்ணா நீங்க தயவு செய்து வாங்க. நானே மாலையைப் போட்டு வெளியே வாங்கனு கூப்பிடுகிறேன். அதற்காக பா.ஜ.க-வை திட்டிவிட்டு ஒரு காரணத்தை கண்டுபிடிப்பதாக ஏன் ட்ராமா போடுகிறீர்கள். நானும் ஒரு மாதமாகப் பார்த்துக் கொண்டிருக்கேன்.

திருமாவளவன் கூட்டணியைவிட்டு வெளியே வர வேண்டும் என்று முடிவு செய்துவிட்டார். ஆனால், அவர் போகிற கூட்டணியில் இவர்கள் எல்லாம் இருக்கக் கூடாதாம். யார் இருக்கக் கூடாது, ஆப்பில், ஆரஞ்ச், மாதுளை பழம் இல்லை என்றால் வருவாராம்.

உங்களுக்குத்தான் இருக்க மனதில்லை. பிளாஸ்டிக் சேரில் உட்கார வைக்கிறார்கள். உங்களுக்கு மரியாதை கொடுக்கவில்லை. திருமாவளவனை சமூகநீதிக்கு எதிராக தி.மு.க-வினர் நடத்துகிறார்கள் என்றால், திருமாவளவன் அண்ணா வெளியே வர வேண்டுமில்லையா?

பா.ஜ.க-வை திட்டிவிட்டு ஒரு பில்டப் கொடுத்துவிட்டு, அதை வைத்து வெளியே வருவதற்கு எங்களை ஏன் பகடைக்காயாகப் பயன்படுத்த வேண்டும். தமிழ்நாட்டு மக்களை முட்டாள்கள் என்று நினைத்துக் கொண்டிருக்கிறீர்களா.

மக்களிடம் நீங்கள் கூட்டம் போட, போட எங்களுக்கு நீங்களே பிரசாரம் செய்கிறீர்கள். இதனால் நாங்கள் பிரசாரமே செய்ய வேண்டாம். தமிழக மக்கள் எங்கள் பக்கம் வர ஆரம்பித்துவிட்டார்கள் என்று காட்டமாக விமர்சித்தார்.

Views: - 342

0

0