ரஜினியை யாரும் சீரியஸாக எடுத்துக் கொள்ள வேண்டாம்.. அவர் பேசுவது அவருக்கே புரியாது : கிண்டலடித்த வைகோ…!!

Author: Babu Lakshmanan
9 August 2022, 4:04 pm
Quick Share

ஆளுநரை சந்தித்த நடிகர் ரஜினிகாந்த்தை யாரும் சீரியஸாக எடுத்துக் கொள்ள வேண்டாம் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கிண்டலாக கூறியுள்ளார்.

கோவை காந்திபுரம் விகேகே மேனன் சாலையில் உள்ள மதிமுக அலுவலகத்தில் மதிமுக கழக பொதுச் செயலாளர் வைகோ தலைமையில் கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுடன் ஆலோசனைக் கூட்டம் மேற்கொள்ளப்பட்டது. இதில் கலந்து கொண்டு பேசிய வைகோ, அண்ணா பிறந்தநாள் அன்று சென்னையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள மாநாட்டிற்கு அனைவரும் கலந்து கொள்ள வேண்டும் என கேட்டுக்கொண்டார். மேலும், கோவை மாவட்டத்தில் மதிமுக செயல்பாடுகள் குறித்தும் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.

தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த வைகோ பேசியதாவது :- மதிமுக புத்துணர்ச்சி பெற்று மீண்டும் தமிழகத்தின் அரசியல் திசையை தீர்மானிக்கின்ற சக்தியாக வளர்ந்து வருகிறது. ,தற்கு அடையாளமாக தான் இடையிலே கோவிட் காலத்தில் நான் சுற்றுபயணம் செய்யாமல் இருந்தாலும், தற்போது இந்த சுற்றுப்பயணத்தை கொங்கு மண்டலத்தில் தான் துவங்குவது. இது தான் மதிமுகவின் ஜிப்ராண்டல் கோட்டை.

இந்த கொங்கு மண்டலத்தில் தற்பொழுது ஒரு லட்சம் உறுப்பினர்கள் இருக்கிறார்கள். தமிழகம் முழுவதும் அறிஞர் அண்ணாவின் பிறந்தநாள் விழாவினை சென்னையில் மிகச் சிறப்பாக நடத்த உள்ளோம். பொருளாதார பலம் இல்லை என்றாலும் லட்சிய தாகம் உள்ளது. மதிமுக, திமுகவோடு, லட்சிய ரீதியாக உடன்பாடு கொண்டு, சனாதன சக்திகளை வீழ்த்துவதற்கும், ஏகாதிபத்திய சக்திகளை வீழ்த்துவதற்கும் ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே கலாச்சாரம், ஒரே மதம் என்று சொல்லக்கூடிய ஏகாதிபத்திய பாசிச கட்சிகளை வீழ்த்துவதற்கும், அண்ணாவின் வழியில் கலைஞர் எவ்வாறு கொள்கைகளை பாதுகாத்து வந்தாரோ, அது போலவே திராவிட மாடல் ஆட்சி நடக்கிறது.

தமிழகத்தில் உள்ள திட்டங்கள் போல் எங்கும் அறிமுகப்படுத்தவோ, செயல்படுத்தவோ இல்லை. திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான ஆட்சி கொள்கை ரீதியான ஆட்சி. திராவிட இயக்க லட்சிய ரீதியான ஆட்சி என்ற முறையில் அவர்கள் செயல்பட்டு வருவது மகிழ்ச்சி அளிக்கிறது, எனக் கூறினார்.

ஜிஎஸ்டி வரி உயர்வு குறித்த கேள்விக்கு பதில் அளித்த அவர், அதனால் மிகப்பெரிய பாதிப்பிற்கு மக்கள் ஆளாகி இருப்பதாகவும் ஜிஎஸ்டியினால் பொதுமக்கள் மிதிக்கப்படுகிறார்கள் தவிர, அதானியோ, அம்பானியோ அல்ல. பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயர்வினால் அனைத்து பொருட்களும் விலை உயர்கிறது. மோடி அரசின் மீது மக்களுக்கு நாள்தோறும் வெறுப்பு அதிகரித்து வருகிறது, என தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகளுக்கும் பேசுவதற்கு வாய்ப்பளிக்க வேண்டும் என்று வெங்கையா நாடு கூறியது குறித்த கேள்விக்கு, “அது சரிதான். நடுநிலையோடு வெங்கையா நாயுடு அதனை கூறியுள்ளார். அதனை ஆளுகின்ற கட்சி பின்பற்றினால் நல்லது, என்றார்.

மேலும், சுதந்திர தின விழாவை முன்னிட்டு மூன்று நாட்களுக்கு அனைவரது இல்லங்களிலும் கொடியேற்றுவது குறித்து கருத்து கேட்டதற்கு, தேசிய கொடியை ஏற்றுவது நல்ல திட்டம் தான் எனவும் அது வரவேற்கத்தக்கது தான் எனவும் தெரிவித்தார்.

ரஜினிகாந்த் ஆளுநருடன் சந்தித்தது குறித்த கேள்விக்கு பதிலளித்த வைகோ, ரஜினிகாந்த் சொல்வது அவருக்கும் புரியவில்லை. யாருக்கும் புரியவில்லை. ஒரு நாள் அரசியலுக்கு வருகிறேன் என சொல்லுகிறார். மறுநாள் உறுப்பினர்களை சேர்க்க சொல்லிவிட்டேன் எனக் கூறுகிறார். பின்பு அரசியலுக்கு வரவில்லை என சொல்லிவிட்டு சென்று விடுகிறார். எனவே, அவரை சீரியசாக எடுத்துக் கொள்ள வேண்டாம், என தெரிவித்தார்.

Views: - 486

0

0