அண்ணாமலை ஓர் பொய் புழுகியா…? விஷயமே தெரியாமல் இப்படி பேசுறாரு… அமைச்சர் மனோ தங்கராஜ் காட்டம்!!

Author: Babu Lakshmanan
21 March 2024, 12:02 pm
Quick Share

திமுக தேர்தல் வாக்குறுதி பற்றி விமர்சனம் வைத்த பாஜக தலைவர் அண்ணாமலைக்கு அமைச்சர் மனோ தங்கராஜ் பதிலடி கொடுத்துள்ளார்.

தூத்துக்குடி நாடாளுமன்றத் தொகுதி தி.மு.க வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள கனிமொழி சென்னையில் இருந்து விமானம் மூலம் தூத்துக்குடி வருகை தந்தார். தூத்துக்குடி விமான நிலையம் வருகை தந்த அவருக்கு தூத்துக்குடி வடக்கு மாவட்ட தி. மு. க சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது.

தூத்துக்குடி வடக்கு மாவட்ட செயலாளரும், மீன்வளத்துறை அமைச்சருமான அனிதா ராதாகிருஷ்ணன் விமான நிலைய வாயிலில் மேள, தாளங்கள் முழங்க உற்சாக வரவேற்பு அளித்தார். இதில் தமிழக பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் கலந்து கொண்டார்.

பின்னர் விமான நிலையத்தில் பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் செய்தியாளர்களை சந்தித்த போது, திமுக சட்டமன்றத் தேர்தல் அறிக்கை மாதிரி நாடாளுமன்ற தேர்தல் அறிக்கையும் உள்ளதாக அண்ணாமலை கூறியது பற்றி செய்தியாளர்கள் எழுப்பினர்.

அதற்கு அவர் பதிலளித்ததாவது :- அண்ணாமலைக்கு சட்டமன்ற தேர்தல் என்றால் என்ன? பாராளுமன்ற தேர்தல் என்றால் என்னவென்று தெரியாது. சட்டமன்றத்திற்கும், பாராளுமன்றத்திற்கும் சென்றவர் அல்ல அவர், அந்த நடவடிக்கையை கவனித்தவரும் அல்ல, திமுகவின் தேர்தல் அறிக்கைகள் மிக முக்கியமான தேர்தல் அறிக்கை என்று சொல்லிக் கொண்டு இருக்கும், இந்நேரத்தில் 10 ஆண்டு காலம் கேஸ், பெட்ரோல் விலை, உயர்த்தி இந்திய நாட்டிலுள்ள மக்கள் அத்தனை பேரையும் இந்துக்களையும் வஞ்சித்தது மோடி அரசு.

தற்போது இந்தியா கூட்டணியில் பெட்ரோல் விலை நேர் பாதியாக குறைப்போம் என்று சொல்லி இருக்கின்றோம். கேஸ் விலை 500 ரூபாய்க்கு கொண்டு வர தேர்தல் அறிக்கையில் உள்ளது. இன்றைக்கு வழிப்பறி செய்யப்படுகின்ற இந்த டோல்கேட் கட்டணம் ரத்து செய்யப்படும். தமிழ்நாட்டில் இருப்பது போன்று உரிமைத் தொகை மகளிருக்கு வழங்கப்படும். இந்த அற்புதமான திட்டங்களை எல்லாம் பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்குறுதியாக அளித்துள்ளோம். இது கூட தெரியாமல் ஒருவர் கட்சி நடத்துகிறாரா? இல்லை எப்போதுமே பேசவேண்டும் என்பதற்காக பொய்யை புழுகி விட்டுக் கொண்டிருக்கிறார்களா? என்பதே எங்களுடைய கேள்வி.

கடந்த முறை கொடுத்த தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்று அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார். அது பற்றி செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு? எடப்பாடி பழனிசாமி பாவம், சர்வாதிகாரிகளுக்காக ஓடிக்கொண்டிருக்கிறார். அவருக்கு யார் பிரதமர் வேட்பாளர் என்று பல்வேறு கன்ஃபியூஷன், எடப்பாடி பழனிசாமி அரசு பத்தாண்டு காலத்தில் எவ்வளவு தவறுகளை இழைத்தார்கள். திமுக அரசு மக்கள் மத்தியில் பலமாக ஊடுருவியுள்ளது. சட்டமன்ற தேர்தல் வாக்குறுதிகளை முதல்வர் நிறைவேற்றி வருகிறார். 75% மேல் வாக்குறுதி நிறைவேற்றி விட்டோம். இன்னும் சில திட்டங்கள் பணிகள் நடைபெற்று கொண்டிருக்கிறது.

தமிழ்நாட்டில் சில கட்சிகள் வெற்றி வாய்ப்பு வேட்பாளர்களுக்கு தடுமாறிக் கொண்டிருக்கின்ற நேரத்தில் திமுக வெற்றி வேட்பாளர் வெற்றி கூட்டணி அமைத்து தலைவர் பிரச்சாரத்தை ஆரம்பித்து இருக்கின்றார். இது மகத்தான கூட்டணியாக 40 என்ற மந்திரத்தை நிதர்சனத்தில் உருவாக்கும் என்ற ஒரு தேர்தலாக தான், இந்த தேர்தல் 100 சதவீதம் இருக்கும், என்றார்.

Views: - 104

0

0