நள்ளிரவு 2 மணிக்கு ரயிலில் பாதியில் இறங்கிய அமைச்சர் மெய்யநாதன்… திடீரென ICU-வில் அனுமதி… மருத்துவமனையை சுற்றி பலத்த பாதுகாப்பு..!!

Author: Babu Lakshmanan
1 October 2022, 9:30 am
Quick Share

சென்னை நோக்கி சென்று கொண்டிருந்த அமைச்சர் மெய்யநாதன் திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

புதுக்கோட்டை, நாகப்பட்டினம் உள்ளிட்ட மாவட்டங்களில் நடந்த பல்வேறு நிகழ்ச்சிகளில் சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் சி.வீ.மெய்யநாதன் நேற்று கலந்து கொண்டார்.

இந்த நிகழ்ச்சிகளை முடித்துக் கொண்டு நேற்றிரவு ராமேஸ்வரத்தில் இருந்து சென்னை செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் அமைச்சர் மெய்யநாதன் சென்று கொண்டிருந்தார். அப்போது, அவருக்கு திடீரென ரத்த அழுத்தத்தால் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதனால், நள்ளிரவு 2 மணியளவில் சிதம்பரம் ரயில் நிலையத்தில் இறங்கிய அமைச்சர் மெய்யநாதன், கடலூரில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

அமைச்சர் மெய்யநாதன் அங்கு சிகிச்சை பெற்று வருவதை முன்னிட்டு அப்பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. அமைச்சர் மெய்யநாதனுக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்த பின்னர், தற்போது அவர் நலமுடன் இருப்பதாக மருத்துவமனை வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

தொடர்ந்து அவர் மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில் இருப்பதாகவும், உடல்நிலை சீரடைந்ததும் அவர் தனி காரில் மருத்துவர்களுடன் உதவியுடன் காரில் சென்னைக்கு பயணிப்பார் எனக் கூறப்படுகிறது.

Views: - 321

0

0