‘செந்தில் பாலாஜியை நீக்கியது நீக்கியது தான்’… ஆளுநரின் முடிவுக்கு எதிராக வழக்கு ; திமுகவுக்கு புது நெருக்கடி…!!

Author: Babu Lakshmanan
1 July 2023, 2:05 pm
Quick Share

அமைச்சர் செந்தில்பாலாஜி விவகாரத்தில் ஆளுநர் உத்தரவு நிறுத்தி வைத்ததற்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

சட்டவிரோத பணப்பரிவர்த்தனை புகாரில் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை கைது செய்துள்ளது. இதையடுத்து, நெஞ்சுவலி ஏற்பட்டு அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், அவருக்கு 2வது முறையாக நீதிமன்ற காவல் விதித்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதனிடையே, செந்தில் பாலாஜி பொறுப்பு வகித்து வந்த மின்சார துறை மற்றும் மதுவிலக்கு ஆயத்துறை ஆகிய துறைகளை அமைச்சர் தங்கம் தென்னரசுவுக்கும், அமைச்சர் முத்துசாமிக்கும் ஒதுக்கப்பட்டது. மேலும், ஆளுநரின் உத்தரவை மீறி, ஆளுநர் ஆர்என் ரவி, செந்தில் பாலாஜி இலாகா இல்லாத அமைச்சராக தொடர்வார் என தமிழக அரசு அறிவித்தது. இந்த விவகாரத்தில் ஆளுநருக்கும், முதலமைச்சர் ஸ்டாலினுக்கும் மோதல்போக்கு ஏற்பட்டது.

இந்த சூழலில், அமைச்சர் பதவியில் இருந்து செந்தில் பாலாஜியை டிஸ்மிஸ் செய்து உத்தரவை பிறப்பித்துள்ளார். இதற்கு முதலமைச்சர் ஸ்டாலின் உள்ளிட்டோர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து, செந்தில்பாலாஜியை அமைச்சர் பதவியில் இருந்து நீக்கி பிறப்பித்த உத்தரவை ஆளுநர் ஆர்.என்.ரவி தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக அறிவித்தார். இது தொடர்பாக தமிழக அரசுக்கு எழுதிய பதில் கடிதத்தில், செந்தில் பாலாஜியை அமைச்சர் பதவியில் இருந்து நீக்கிய உத்தரவு தொடர்பாக மத்திய அரசின் தலைமை வழக்கறிஞரிடமிருந்து உரிய சட்ட நடைமுறைகளை கேட்ட பின் முடிவு எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதைத் தொடர்ந்து, அமைச்சரை நியமிப்பது, நீக்குவது என எந்த முடிவை எடுப்பதற்கு, முதலமைச்சரான தனக்கு மட்டுமே உரிமை உள்ளதாக முதலமைச்சர் ஸ்டாலின் பதில் கடிதம் அனுப்பினார்.

இந்த நிலையில், அமைச்சர் செந்தில் பாலாஜி நீக்கும் உத்தரவை ஆளுநர் நிறுத்தி வைத்ததற்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. வழக்கறிஞர் எம்.எல்.ரவி தாக்கல் செய்த இந்த மனு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது. அரசியல் சாசனத்தின்படி எடுத்த முடிவை ஆளுநர் மறுபரிசீலனை செய்ய முடியாது என்றும், ஆளுநர் தனது முடிவு குறித்து ஆலோசனை பெற வேண்டிய அவசியமில்லை என்றும் மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Views: - 302

0

0