கோபாலபுர இல்லத்தில் அமைச்சர் உதயநிதி.. ஆரத்தி எடுத்து திலகமிட்டு வரவேற்ற குடும்பத்தினர் ; நெட்டிசன்கள் கடும் விமர்சனம்!!

Author: Babu Lakshmanan
14 December 2022, 2:39 pm
Quick Share

சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் இன்று காலை 9.30 மணியளவில் உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக பதவியேற்றுக் கொண்டார். ஆளுநர் ஆர்.என்.ரவி உதயநிதி ஸ்டாலினுக்கு அமைச்சராக பதவி பிரமாணமும், ரகசிய காப்பும் செய்து வைத்தார்.
அமைச்சராக பதவியேற்ற அவருக்கு அமைச்சரவையில் இளைஞர் நலன், விளையாட்டுத்துறை இலாகா ஒதுக்கீடு செய்யப்பட்டது.

அமைச்சராக பதவியேற்றுக் கொண்ட உதயநிதி ஸ்டாலினுக்கு முதலமைச்சர் ஸ்டாலின், அமைச்சர்கள், குடும்பத்தினர் மற்றும் பிரபலங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

இதனிடையே, அமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்ட உதயநிதி ஸ்டாலின், மெரினாவில் உள்ள மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நினைவிடத்திற்கு சென்று மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். பின்னர், தலைமை செயலகத்தில் தனக்கென ஒதுக்கப்பட்ட அலுவலகத்திற்கு சென்றார். அங்கு அமைச்சர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

பின்னர், அவரது இருக்கையில் அமர்ந்த உதயநிதி ஸ்டாலின், முதலமைச்சர் கோப்பைக்கான கபாடி போட்டியை நடத்துவது மற்றும் விளையாட்டு வீரர்களுக்கான ஊக்கத்தொகையை ரூ.6,000 ஆக உயர்த்துவது உள்ளிட்ட கோப்புகளில் முதல் கையெழுத்திட்டார்.

இதைத் தொடர்ந்து, கருணாநிதி வாழ்ந்த கோபாலபுரம் இல்லத்திற்கு கட்சியினர் புடைசூழ சென்ற உதயநிதி ஸ்டாலினுக்கு பிரமாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டது. அங்கு அவருக்கு ஆரத்தி எடுத்து, நெற்றியில் திலகமிட்டு குடும்பத்தினர் வரவேற்றனர்.

ஏற்கனவே, பகுத்தறிவு பற்றி பேசும் திமுகவினர், சுபமுகூர்த்த நாளில், நல்ல நேரம் பார்த்து உதயநிதி ஸ்டாலினின் பதவியேற்பு விழாவை வைத்துள்ளதாக கடுமையான விமர்சனங்கள் வைக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், ஆரத்தி எடுத்து வரவேற்பு அளிக்கப்பட்ட சம்பவம், ஊருக்கு ஒரு நியாயம், உங்களுக்கு ஒரு நியாயமா..? என்று மேலும் விமர்சனங்களை எழச் செய்துள்ளது.

Views: - 328

0

0