அவரது கோபத்திற்கு ரசிகன் நான்… விஜயகாந்திடம் எப்பவும் நியாயம் இருக்கும் ; கமல்ஹாசன் நேரில் அஞ்சலி

Author: Babu Lakshmanan
29 December 2023, 1:20 pm
Quick Share

விஜயகாந்த் தமது நியாயமான கோபத்தால் பொதுவாழ்க்கைக்கு வந்தவர் என நம்புகிறேன் என்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

கடந்த சில வருடங்களாகவே உடல்நலம் குன்றி இருந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த், நேற்று முன்தினம் மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கொரோனா தொற்று உறுதியான நிலையில், அவர் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இதையடுத்து, கோயம்பேட்டில் உள்ள தேமுதிக அலுவலகத்தில் தொண்டர்கள் மற்றும் மக்களின் அஞ்சலிக்காக நேற்று மதியம் அவரது உடல் வைக்கப்பட்டது. இரவு முழுவதும் விடிய விடிய விஜயகாந்தின் உடலுக்கு திரையுலக பிரபலங்கள், அரசியல் தலைவர்கள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் என சாரைசாரையாக படையெடுத்து வந்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

பின்னர், பொதுமக்கள் அஞ்சலி செலுத்துவதற்கு வசதியாக இன்று அதிகாலை தீவுத்திடலில் விஜயகாந்தின் உடல் கொண்டு செல்லப்பட்டது. பொதுமக்கள் நீண்ட வரிசையில் நின்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர். விஜயகாந்தின் உடலுக்கு நடிகர்கள் ரஜினி, ரமேஷ் கண்ணா, எம்எஸ் பாஸ்கர், சுந்தர்.சி, பாக்கியராஜ், சாந்தனு மற்றும் நடிகை குஷ்பூ, நளினி உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.

இந்த நிலையில், விஜயகாந்தின் உடலுக்கு நடிகரும், மக்கள் நீதி மய்யம் தலைவருமான கமல்ஹாசன் நேரில் அஞ்சலி செலுத்தினார். அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறி விட்டு அங்கிருந்து புறப்பட்டு சென்றார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது :- எளிமை, அன்பு, உழைப்பு, பெருந்தன்மை ஆகிய அனைத்தும் ஒருங்கே அமைந்தவர் விஜயகாந்த். விஜயகாந்தின் கோபத்தில் நியாயம் இருக்கும். அவரது கோபத்திற்கு ரசிகன் நான்.

தமது நியாயமான கோபத்தால் பொதுவாழ்க்கைக்கு வந்தவர் என நம்புகிறேன். எந்த அளவுக்கு பணிவு கொண்டவரோ, அதே அளவுக்கு கோபம் கொண்டவர், எனக் கூறினார்.

Views: - 218

0

0