திமுகவை நம்பி 35 லட்சம் பேர் கடனாளிகள் ஆனதுதான் மிச்சம்… முதலமைச்சர் ஸ்டாலின் அரசின் ஓராண்டு ஆட்சி குறித்து ஓபிஎஸ் வேதனை…!!!

Author: Babu Lakshmanan
7 May 2022, 11:06 am
Quick Share

திமுக ஆட்சிப் பொறுப்பேற்று ஓராண்டு நிறைவடைந்த நிலையில், இது குறித்து அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கருத்து தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :- 2021ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்ற பேரவைக்கான பொதுத் தேர்தலில் திமுகவின் பொய்யான போலியான நிறைவேற்ற முடியாத சாத்தியமற்ற வாக்குறுதிகளை நம்பி மக்கள் வாக்களித்து அதன் விளைவாக தமிழ்நாட்டில் திமுக ஆட்சி துரதிஷ்டவசமாக அமைந்துவிட்டது. இதன் காரணமாக கடந்த ஓராண்டில் பொதுமக்கள் இன்பங்களை மறந்து துன்பங்களை மட்டுமே அனுபவித்து வருகின்றனர்.

மக்கள் எந்த வாக்குறுதிகளை நம்பி திமுகவிற்கு வாக்களித்தார்களோ அந்த வாக்குறுதிகள் எதுவும் நிறைவேற்றப்படவில்லை. உதாரணமாக திமுகவின் முக்கியமான வாக்குறுதிகளில் ஒன்று நீட் தேர்வு ரத்து, நீட் தேர்வை ரத்து செய்ய கழக அரசு அமைந்ததும் முதல் சட்டப்பேரவை கூட்டத் தொடரிலேயே சட்டம் இயற்றப்படும் என்று திமுகவின் தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது. ஒரே கையெழுத்தில் நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என மேடைக்கு மேடை தேர்தல் பிரச்சாரத்தின் போது திமுக தலைவர்களால் பேசப்பட்டது. ஆனால் திமுக ஆட்சி அமைந்து ஓராண்டு ஆகியும் நீட் தேர்வு ரத்து செய்யப்படவில்லை. திமுக ஆட்சி பொறுப்பேற்று ஓராண்டு முடிந்துள்ள நிலையில் இதற்கான சட்ட முன்வடிவு மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டிருக்கிறது.

இதற்கு மேதகு இந்திய குடியரசுத் தலைவர் அவர்கள் ஒப்புதல் அளித்த பிறகு தான் மேற்படி சட்ட முன்வடிவு சட்டமாகும் என்ற நிலையில் ஒரே கையெழுத்தில் நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என்று இல்லாத அதிகாரத்தை இருப்பதுபோல மக்களிடம் தேர்தல் பிரச்சாரத்தின்போது கூறியது, வாக்களித்த மக்களை வஞ்சிக்கும் செயலாகும். திமுக ஆட்சிக்கு வந்த பிறகு கடந்த ஓராண்டில் பலர் நீட் தேர்வு காரணமாக உயிரிழந்திருக்கிறார்கள். நீட் தேர்வுக்கு மூல காரணமாக இருந்துவிட்டு இன்று நீட் தேர்வை ரத்து செய்ய போகிறோம் என்று கூறுவது தும்பை விட்டு வாலைப் பிடிக்கும் செயல்,

மற்றொரு முக்கியமான வாக்குறுதி நகை கடன் ரத்து, திமுக அரசு அமைந்ததும் கூட்டுறவு வங்கிகளில் பெறப்பட்ட 5 சவரன் உட்பட்ட நகைக் கடன்கள் ரத்து செய்யப்படும் என அதிமுகவின் தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இது ஒருபுறம் என்றால் நகைக்கடன் வாங்காதவர்கள் எல்லாம் வாங்கிக் கொள்ளுங்கள் தளபதி தான் ஆட்சிக்கு வரப்போகிறார் எல்லா கடனையும் தள்ளுபடி செய்து விடுவார் என்ற பிரச்சாரம் வேறு மறுபுறம். ஆனால் ஆட்சிக்கு வந்தவுடன் பல்வேறு நிபந்தனைகளை விதித்து கிட்டத்தட்ட 75 விழுக்காடு பயணிகளின் நகை கடன்களை தள்ளுபடி செய்ய முடியாது என அரசு அறிவித்தது. திமுகவின் இந்த வாக்குறுதியை நம்பி கிட்டத்தட்ட 35 லட்சம் பேர் கடனாளிகளாக ஆக்கியது தான் மிச்சம், எனக் குறிப்பிட்டுள்ளார்.

Views: - 820

0

0