திமுகவை வீழ்த்த அவங்களால் மட்டுமே முடியும்.. நமக்கு முக்கிய கடமை இருக்கு.. திமுக செயல்வீரர்கள் கூட்டத்தில் எம்பி கனிமொழி பேச்சு

Author: Babu Lakshmanan
12 December 2022, 5:52 pm
Quick Share

தூத்துக்குடி ; வருகின்ற பாராளுமன்ற தேர்தலில் திமுகவின் வெற்றி உறுதி செய்யப்பட்ட வெற்றி என்று திமுக செயல்வீரர்கள் கூட்டத்தில் கனிமொழி தெரிவித்துள்ளார்.

திமுகவின் திருச்செந்தூர் ஒன்றிய, நகர, பேரூர் கழக செயல்வீரர்கள் கூட்டம் திருச்செந்தூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இதில், திமுகவின் துணைப் பொதுச் செயலாளரும், தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினருமான கனிமொழி, தமிழக மீன்வளம் மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் உட்பட திமுகவின் திருச்செந்தூர் ஒன்றிய, நகர, பேரூர் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்தில் அமைச்சர் அனிதா ஆர் ராதாகிருஷ்ணன் பேசியதாவது ;- செயல் வீரர்கள் கூட்டத்தில் மது அருந்திவிட்டு வந்து பேசக்கூடாது கட்டுப்பாடுடன் இருக்க வேண்டும். தமிழகத்தில் இரண்டு மூன்றாக பிரிந்து போனவர்கள் மற்றும் டெல்லியில் உள்ளவர்கள் எல்லோரும் திமுகவை எந்த வகையிலாவது வீழ்த்தி விடலாம் என நினைத்து வருகிறார்கள். அந்த கனவு பலிக்காது. திமுகவை வீழ்த்த வேண்டும் என்று சொன்னால் கட்சிக்குள் இழுவரி ஏற்படுத்தி விட்டு தான் வீழ்த்த முடியும். வருகின்ற பாராளுமன்ற தேர்தலில் கட்டுக் கோட்பாக இருந்து தேர்தலில் வெற்றி பெற உழைக்க வேண்டும், என பேசினார்.

இதனை அடுத்து கனிமொழி எம்பி பேசியதாவது ;- வருகின்ற பாராளுமன்ற தேர்தலில் திமுகவின் வெற்றி உறுதி செய்யப்பட்ட வெற்றி. திமுகவை வீழ்த்த திமுகவை தவிர வேறு யாராலும் முடியாது. திமுகவை எதிர்த்து வெற்றி பெற யாராலும் முடியாது. நமக்குள்ளே கருத்து வேறுபாடுகள், பிரிவினைகள், பிரச்சனைகள், சச்சரவுகள் வந்துவிடக் கூடாது. அதனைப் புரிந்து கொண்டு தேர்தல் நாம் செயல்பட வேண்டும்.

நமது குடும்பத்திற்குள் ஆயிரம் பிரச்சனைகள் இருக்கும். ஆண், பெண் வித்தியாசம் வந்து விடக்கூடாது என்பதற்காக அனைவரையும் தன் உடன் பிறப்புகள் என்று அழைத்தவர் கருணாநிதி. தமிழ்நாட்டை பாதுகாப்பதற்காக உருவாக்கப்பட்ட இயக்கம் திமுக. திராவிட இயக்கம் என்று சொல்லிக் கொள்ளும் அதிமுக திராவிட இயக்கமாக இல்லை.

நமது வீட்டுப் பிள்ளைகள் படிக்கக் கூடாது கல்லூரிகளுக்கு செல்லக்கூடாது, மருத்துவராக கூடாது எல்லாவற்றிலும் நுழைவுத் தேர்வு கொண்டு வந்து நுழைத்திருக்கக்கூடிய பாஜகவுடன் அதிமுக கைகோர்த்துள்ளது. அதனால் தமிழ்நாட்டை காப்பாற்றக் கூடிய கடமை திமுகவில் உள்ள அனைவருக்கும் உள்ளது. தமிழ்நாட்டை காக்க நாம் அத்தனை பேரும் ஒற்றுமையாக நின்று தேர்தலை சந்திக்க வேண்டும். இயக்கத்தை பாதுகாக்க வேண்டும் என முதலமைச்சர் ஸ்டாலின் எதிர்பார்க்கிறார்.

நம்மளை எதிர்த்து விடலாம், வீழ்த்தி விடலாம் என்று எதிர்பார்த்துக் கொண்டிருப்பவர்கள். திமுக இந்துக்களுக்கு எதிரானவர்கள் என ஒவ்வொரு முறையும் பல பொய்களை சமூக வலைதளம் மற்றும் மேடை போட்டு சொல்லிக்கொண்டு வருகிறார்கள், என்று அவர் பேசினார்.

Views: - 312

0

0