இப்போ சொல்லுங்க.. சமூகநீதி குறித்து பேச திமுகவுக்கு தகுதி இருக்கா..? கொஞ்சம் மகாராஷ்டிராவை பாருங்க… ராமதாஸ் கொந்தளிப்பு

Author: Babu Lakshmanan
20 February 2024, 2:11 pm
Quick Share

சமூகநீதி குறித்து பேச தகுதியே இல்லை என்று திமுகவுக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.

கடந்த அதிமுக ஆட்சியின் போது பாமகவின் கோரிக்கையை ஏற்று, சட்டசபையில் வன்னியர்களுக்கான 10.5 சதவீத இடஒதுக்கீட்டை அப்போதைய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கொண்டு வந்தார். ஆனால், இந்த இடஒதுக்கீட்டுக்கு எதிராக வழக்கு தொடரப்பட்ட நிலையில், திமுக அரசு இதனை ரத்து செய்தது.

இதை எதிர்த்து செய்யப்பட்ட மேல்முறையீட்டு வழக்கில், வன்னியர்களுக்கான 10.50% இடஒதுக்கீட்டை வழங்க உச்சநீதிமன்றம் அனுமதியளித்தது. நீதிமன்றம் உத்தரவிட்ட பிறகும், இந்த இடஒதுக்கீட்டை கொண்டு வர தமிழக அரசு தயங்கி வருகிறது.

இந்த நிலையில், உச்சநீதிமன்றத்தால் ரத்து செய்யப்பட்ட மராத்தா இட ஒதுக்கீட்டை மகாராஷ்டிரா அரசு மீண்டும் கொண்டு வருவதை பாராட்டிய பாமக நிறுவனர் ராமதாஸ், நீதிமன்றம் அனுமதியளித்து திமுக அரசு, வன்னியர்களுக்கான இடஒதுக்கீட்டை அமல்படுத்தவில்லை என்று குற்றம்சாட்டியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள X தளப்பதிவில் கூறியிருப்பதாவது :- சமூக நீதி : இங்கில்லை…. அங்கே! உழைக்கும் மக்களுக்கு 10% இட ஒதுக்கீடு. தமிழ்நாட்டில் இல்லை, மராட்டியத்தில்.

உச்சநீதிமன்றத்தால் ரத்து செய்யப்பட்ட மராத்தா இட ஒதுக்கீட்டை மாநில பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தின் பரிந்துரையுடன் மீண்டும் கொண்டு வருகிறது மராட்டிய அரசு. அதற்காக அம்மாநில சட்டப்பேரவையின் சிறப்புக் கூட்டம் இன்று கூட்டப்பட்டு, இட ஒதுக்கீட்டு சட்டம் நிறைவேற்றப்படுகிறது. இது தான் சமூகநீதி

ஆனால், உச்சநீதிமன்றமே வழங்க வலியுறுத்தியும் வன்னியர் 10.50% இட ஒதுக்கீட்டை வழங்க மறுக்கிறது தமிழக அரசு; கடமையை செய்யத் தவறுகிறது பிற்படுத்தப்பட்டோர் ஆணையம். இப்போது சொல்லுங்கள்….
இங்குள்ளவர்களுக்கு சமூகநீதி குறித்து பேச தகுதி உள்ளதா?, எனத் தெரிவித்தார்.

Views: - 265

0

0