புறம்போக்கு நிலங்கள் ஆக்கிரமிப்பு..? சொகுசு பங்களா கட்டும் பிரகாஷ் ராஜ் ; குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் குமுறல்..!!

Author: Babu Lakshmanan
22 August 2023, 1:12 pm
Quick Share

கொடைக்கானலில் நடிகர் பிரகாஷ்ராஜ் மற்றும் நடிகர் பாபி சிம்ஹா சட்டத்திற்கு விரோதமாக பணிகளை மேற்கொண்டு வருவதாக விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் புகார் எழுப்பப்பட்டுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு வருவாய் கோட்டாட்சியர் ராஜா தலைமை வகித்தார். நடைபெற்ற கூட்டத்தில் வருவாய் துறை, வனத்துறை, தோட்டக்கலை துறை, போக்குவரத்து துறை, காவல் துறை என பல்வேறு துறை சார்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர். மேல்மலை மற்றும் கீழ் மலை கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் விவசாயிகள் தங்களது பகுதிகளில் நிலவும் பிரச்சனைகள் குறித்து எடுத்துரைத்தனர். தொடர்ந்து மலைப்பகுதிகளில் வனவிலங்குகளால் விவசாய நிலங்கள் தொடர்ந்து சேதம் அடைந்து வருவதாகவும் குற்றம் சாட்டினர். மேல்மலை மலை கிராமங்களில் காட்டுப் பன்றிகளின் அட்டகாசம் செய்தும் கீழ் மலை கிராமத்தில் காட்டு யானை சேதப்படுத்தி வருவதாக தெரித்தனர் . இதனால் விவசாயம் மேற்கொள்ள முடியாமல் விவசாயிகள் நஷ்டம் அடைந்து வருவதாகவும் விவசாயிகள் வேதனை தெரிவித்தனர்.

தொடர்ந்து நடைபெற்ற கூட்டத்தில் பேத்துப்பாறை பகுதி ஊர் தலைவர் மகேந்திரன் பேசுகையில், வில்பட்டி பஞ்சாயத்துக்கு உட்பட்ட பகுதியில் அரசின் விதிமுறைகளை மீறி நடிகர் பாபி சிம்ஹா மூன்று மாடி கட்டிடம் கட்டி வருவதாகவும், மலை கிராம விவசாயிகள் பயன்படுத்தும் சாலையை ஆக்கிரமிப்பு செய்து அப்பகுதியில் செல்லும் விவசாயிகளை ஒருமையில் பேசுவதாகவும் குற்றம் சாட்டினர்.

இதேபோல் பிரபல நடிகரான பிரகாஷ்ராஜ் அரசு அனுமதியை மீறி ஜேசிபி இயந்திரங்கள் கொண்டு சாலை அமைத்து வருவதாகவும் குற்றம் சாட்டப்பட்டது.

பேத்துப்பாறையில் 15 ஆண்டுகளாக சாலை வசதி இல்லாததால், சாலை அமைக்கக் கோரி கடந்த மே 1-ந் தேதி நடந்த கிராம சபை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றியதாகவும், அதன்பின்னர் தான் அந்தப் பகுதியில் சாலை அமைக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தனர்.

ஆனால், இந்த சாலை அமைக்க பிரகாஷ் ராஜ் பணம் கொடுத்ததாக கூறுவதாகவும், எனவே, இதில் முறைகேடு நடப்பது தெரிவதாகவும், அனுமதியின்றி தான் இதையெல்லாம் செய்து வருகிறார்கள், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அந்த கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

இப்படி கொடைக்கானலில் பிரகாஷ் ராஜ் மற்றும் பாபி சிம்ஹா இருவரும் சட்ட விரோதமாக சொகுசு பங்களா கட்டி வருவது இந்த விவசாயிகள் கூட்டத்தின் மூலம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இந்த விவகாரத்தில் அப்பகுதி விவசாயிகள் விடாப்பிடியாக இருப்பதால், இரு நடிகர்களுக்கும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

Views: - 396

0

0