கூட்டணி முறிவால் எந்த பிரச்சனை வந்தாலும் சந்திக்க தயார் : எடப்பாடி பழனிசாமி பேச்சு!!

Author: Udayachandran RadhaKrishnan
25 September 2023, 9:50 pm

கூட்டணி முறிவால் எந்த பிரச்சனை வந்தாலும் சந்திக்க தயார் : எடப்பாடி பழனிசாமி பேச்சு!!

பாஜகவுடனான கூட்டணி தொடர்பாக சென்னை அதிமுக தலைமையகத்தில் நடைபெற்ற பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் பாஜக கூட்டணியில் இருந்து விலகுவதாக அதிமுக ஒருமனதாக முடிவெடுத்தது.

இது தொடர்பாக எடுக்கப்பட்ட தீர்மானம் குறித்தும் அறிக்கை வெளியிட்டது. அதில் 2 கோடிக்கும் மேற்பட்ட தொண்டர்களின் எண்ணத்திற்கும், விருப்பத்திற்கும், உணர்வுகளுக்கும் மதிப்பளித்து, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் இன்று முதல், பாரதிய ஜனதா கட்சி கூட்டணியில் இருந்தும், தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்தும் விலகிக் கொள்கிறது என்று ஏகமனதாக தீர்மானிக்கப்படுகிறது.” என்று அதில் குறிப்பிடப்பட்டு இருந்தது.

இந்த நிலையில் இந்த கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி பேசியது என்ன என்ற தகவல் வெளியாகி உள்ளது. அதில் அவர், “பாஜக உடனான கூட்டணி முறிவு குறித்து சந்தேகப்பட வேண்டாம். பாஜகவுடன் அதிமுக மீண்டும் கூட்டணி வைத்துவிடுமோ என்ற சந்தேகமே வேண்டாம். மக்களுக்கு சந்தேகம் இருந்தால் கட்சியின் கருத்தை உறுதியாக எடுத்து செல்லுங்கள்.” என்று குறிப்பிட்டு உள்ளார்.

பாஜகவுடனான கூட்டணி முறிவால் எந்த பிரச்சினை வந்தாலும் சந்திக்க தயார் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது, பாஜகவுடன் இன்றைக்கு மட்டுமல்ல, இனி என்றைக்குமே கூட்டணி கிடையாது. நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக தலைமையில்தான் கூட்டணி. பாஜகவுடனான கூட்டணி முறிவால் எந்த பிரச்சினை வந்தாலும் சந்திக்க தயார்’ என்றார்.

  • chinmayi come back to tamil cinema after 6 years ஆஹா, இது செம கம்பேக்! சின்மயியை மீண்டும் தமிழ் சினிமாவிற்கு அழைத்து வந்த டி இமான்…