ஒரு போதும் அஞ்சமாட்டோம்…. என் உயிர் இருக்கும் வரை நா.த.க.வை அழிக்க முடியாது ; சீமான் ஆவேசம்…!!

Author: Babu Lakshmanan
7 February 2024, 4:03 pm

நான் உயிருடன் இருக்கும் வரை நாம் தமிழர் கட்சி இருக்கும் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

நாம் தமிழர் கட்சியின் நிர்வாகியான சாட்டை துரைமுருகன், தென்காசி மதிவாணன், கோவை முருகன் உட்பட கட்சி நிர்வாகிகள் ஆதரவாளர்கள் வீடுகளில் கடந்த இரண்டாம் தேதி தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இதை எதிர்த்து நாம் தமிழர் கட்சி நீதிமன்றத்தின் வழக்கு தொடர்ந்த நிலையில், கடந்த 2022 ஆம் ஆண்டு சேலம் மாவட்டம் ஓமலூரில் பதிவு செய்யப்பட்ட வழக்கு ஒன்றின் விசாரணைக்காக சோதனை நடைபெற்றதாகவும், என்ஐஏ விசாரணைக்கு ஒத்துழைத்தால், கைது நடவடிக்கை மேற்கொள்ளமாட்டோம் எனவும் நீதிமன்றத்தில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் விளக்கம் அளித்தனர்.

இந்த நிலையில், என்ஐஏ அனுப்பிய சம்மன் அடிப்படையில் சென்னை புரசைவாக்கத்தில் உள்ள என்ஐஏ அலுவலகத்தில் நாம் தமிழர் கட்சியின் நிர்வாகியான சாட்டை துரைமுருகன் தென்காசியை சேர்ந்த இசை மதிவாணன் மற்றும் கோவையைச் சேர்ந்த நாம் தமிழர் கட்சியின் நிர்வாகி முருகன் ஆகிய மூன்று பேர் விசாரணைக்காக ஆஜராகினர்.

நாளை இடும்பவனம் கார்த்திக், மற்றும் தென்னகம் விஷ்னு ஆகியோர் விசாரணைக்கு ஆஜராக மறு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

இந்த நிலையில், கடந்த 2017ம் ஆண்டு சேலம் நடந்த நாம் தமிழர் கட்சி பொதுக்கூட்டத்தில், இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் சேலம் நீதிமன்றத்தில் சீமான் ஆஜர் ஆனார். அப்போது, செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது :- ஆதாரம் இல்லாமல் நாம் தமிழர் நிர்வாகிகள் வீடுகளில் என்.ஐ.ஏ., சோதனை நடத்துகிறார்கள். என்.ஐ.ஏ., விசாரணைக்கு ஒரு போதும் அஞ்சமாட்டோம்.

நாம் தமிழர் கட்சியை யாராலும் உடைக்க முடியாது. நான் உயிருடன் இருக்கும் வரை நாம் தமிழர் கட்சி இருக்கும். சரத்பவாரின் கட்சி தேசியவாத காங்கிரஸ் என உலகத்துக்கு தெரியும். சரத்பவார் தான் நிறுவனத் தலைவர். திடீரென அஜித் பவார் கட்சி என்று அறிவிக்கிறார்கள், எனக் கூறினார்.

  • vijay is bjp c team explained by vanathi srinivasan விஜய் பாஜகவோட C team? தவெக குறித்து ஓபனாக போட்டுடைத்த பிரபலம்!