உண்மையான ஆம்பளையே ஆளுநர் தான்… கருணாநிதி வழக்கிலேயே எல்லாம் பாத்தாச்சு ; கவர்னர் ஆர்என் ரவிக்கு ஹெச்.ராஜா பாராட்டு…!!

Author: Babu Lakshmanan
30 June 2023, 9:09 am
Quick Share

இலாகா இல்லாத அமைச்சர் செந்தில் பாலாஜி விவகாரத்தில் ஆளுநர் ஆர்என் ரவியின் செயல்பாடுகளுக்கு பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா வரவேற்பும், பாராட்டும் தெரிவித்துள்ளார்.

சட்டவிரோத பணப்பரிவர்த்தனை புகாரில் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை கைது செய்துள்ளது. இதையடுத்து, நெஞ்சுவலி ஏற்பட்டு அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், அவருக்கு 2வது முறையாக நீதிமன்ற காவல் விதித்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதனிடையே, செந்தில் பாலாஜி பொறுப்பு வகித்து வந்த மின்சார துறை மற்றும் மதுவிலக்கு ஆயத்துறை ஆகிய துறைகளை அமைச்சர் தங்கம் தென்னரசுவுக்கும், அமைச்சர் முத்துசாமிக்கும் ஒதுக்கீடு செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்கு ஒப்புதல் அளித்த ஆளுநர் ஆர்என் ரவி, செந்தில் பாலாஜி இலாகா இல்லாத அமைச்சராக தொடர்வார் என தமிழக அரசு முன்மொழிந்ததை ஏற்கவில்லை.

ஆனால், ஆளுநரின் நிராகரிப்பையும் மீறி, தமிழக அரசு செந்தில் பாலாஜி இலாக்கா இல்லாத அமைச்சராக தொடர்வார் என அரசாணை வெளியிட்டது. இதையடுத்து, தமிழக அரசு துறைகளுக்கான அதிகாரப்பூர்வ இணையதளத்தில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. அதில், செந்தில் பாலாஜியை அமைச்சர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அவரது புகைப்படமும் அதில் இடம்பெற்றுள்ளது. ஆனால் அவருக்கு அளிக்கப்பட்டு இருந்த இலாகாக்களின் பெயர்கள் மட்டும் நீக்கப்பட்டுள்ளன.

இலாகா இல்லாத அமைச்சராக செந்தில்பாலாஜி தொடர்வதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் அதிமுக சார்பில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

இதனிடையே, அமைச்சர் பதவியில் இருந்து செந்தில் பாலாஜியை டிஸ்மிஸ் செய்வதாக ஆளுநர் ஆர்என் ரவி முதலமைச்சர் ஸ்டாலினுக்கு கடிதம் எழுதியுள்ளார். ஆளுநரின் இந்த அறிவிப்பால் கொதித்தெழுந்த முதலமைச்சர் ஸ்டாலின், அமைச்சர் செந்தில் பாலாஜியை டிஸ்மிஸ் செய்ய ஆளுநருக்கு அதிகாரம் இல்லை என்றும், இதனை சட்டரீதியாக எதிர்கொள்வோம் எனக் கூறினார். அதேபோல, காங்கிரஸ், ஆம்ஆத்மி உள்ளிட்ட கட்சியினரும் ஆளுநரின் செயலை கடுமையாக விமர்சித்தனர். இதனிடையே, செந்தில்பாலாஜியை அமைச்சர் பதவியில் இருந்து நீக்கி பிறப்பித்த உத்தரவை நிறுத்தி வைப்பதாக ஆளுநர் ஆர்.என்.ரவி முதலமைச்சர் ஸ்டாலினுக்கு மீண்டும் கடிதம் எழுதியுள்ளார்.

இதனிடையே, அமைச்சர் செந்தில் பாலாஜி பதவி நீக்கம் விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் ஸ்டாலின் மூத்த அமைச்சர்கள், சட்டவல்லுனர்களுடன் இன்று ஆலோசனை நடத்த உள்ளார். இந்த சூழலில், அமைச்சர் ஒருவரை நீக்க ஆளுநருக்கு அதிகாரம் இருக்கா..? இல்லையா..? என்பது குறித்து கேள்வியும், விவாதமும் அனைவரிடத்திலும் எழுந்துள்ளது.

கடந்த ஜுன் 17ம் தேதி பாஜக பிரமுகர் ஹெச்.ராஜா ஆளுநருக்கு ஆதரவாக டுவிட் ஒன்றை போட்டுள்ளார். அதில், ‘கவர்னருக்கு ஒரு அமைச்சரை பதவி நீக்கம் செய்யவும் அதிகாரம் உள்ளது என்று உச்சநீதிமன்றம் 5 மெம்பர் பென்ச் கூறியுள்ளது. அரசியல்சட்ட ஞானம் இல்லாதவர்கள் என்ன வேண்டுமானாலும் பேசலாம்,” எனக் கூறி முதலமைச்சர் ஸ்டாலினை டேக் செய்திருந்தார்.

இந்த நிலையில், அந்த டுவிட்டர் பதிவை குறிப்பிட்டு, மீண்டும் ஹெச்.ராஜா விடுத்துள்ள பதிவில், “ஆளுநர் தனி அமைச்சரை டிஸ்மிஸ் செய்ய முடியும் என்று ஏற்கனவே திரு. மு.கருணாநிதி வழக்கில் உச்சநீதிமன்றம் கூறியுள்ளது. ஆண்மையும் ஆளுமையும் உள்ள ஆளுநர் தமிழக அரசியலை தூய்மை படுத்த எடுத்துள்ள நடவடிக்கை பாராட்டுக்குரியது,” எனக் குறிப்பிட்டுள்ளார்.

Views: - 315

0

0