திமுக தான் புத்திசாலி-னு நினைக்க வேண்டாம்… எல்லாத்தையும் பாத்துகிட்டு தான் இருக்கோம் : உச்சநீதிமன்றம் சுளீர்..!!

Author: Babu Lakshmanan
23 August 2022, 3:19 pm
Quick Share

இலவச திட்டங்கள் குறித்த வழக்கில் திமுக குறித்து சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி பரபரப்பான கருத்தை தெரிவித்துள்ளார்.

இலவச திட்டங்களை முறைப்படுத்தக்கோரி அஸ்வினி குமார் உள்ளிட்ட 4 பேர் உச்சநீதிமன்றத்தில் பொதுநல மனுவை தாக்கல் செய்தனர். இந்த மனுக்கள், தலைமை நீதிபதி என்.வி. ரமணா தலைமையிலான அமர்வு விசாரித்து வருகிறது. இந்த வழக்கு விசாரணையின் போது, இலவச திட்டங்கள் நாட்டின் பொருளாதாரத்தை திவால் நிலைக்கு இட்டுச்செல்லும் என மனுதாரர்கள் தரப்பிலும், மத்திய அரசின் தரப்பிலும் வாதிடப்பட்டது.

அப்போது தலைமை நீதிபதி, தேர்தலின் போது இலவச வாக்குறுதிகளை அளிக்கவேண்டாம் என கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் எப்படி உத்தரவிட முடியும் என்ற கேள்வியை முன்வைத்தார். மேலும், இலவசங்களுக்கும், நலத்திட்டங்களுக்கும் வித்தியாசம் என்ன…? என்று கேள்வி எழுப்பப்பட்டது.

இது குறித்து மத்திய அரசு கூறும்போது, போலியான இலவச அறிவிப்புகள் பொருளாதாரத்தை சீரழிக்கின்றன என்று தெரிவித்தது. அப்போது திமுக தரப்பில் மூத்த வழக்கறிஞர் வில்சன் வாதிடும்போது, கடும் கோபம் அடைந்த தலைமை நீதிபதி, இந்த விவகாரம் தொடர்பாக தலைமை நீதிபதி என்ற முறையில் என்னால் எதுவும் கூற முடியவில்லை என்றும், ஆனால் உங்கள் கட்சி நடந்துகொண்ட விதம் மற்றும் உங்கள் அமைச்சர் பேசும் விதத்தை நாங்கள் கண்டும் காணாதது போல் இருக்கிறோம் என்று நினைக்க வேண்டாம் என்றும், அனைத்தையும் கவனித்துக்கொண்டே இருப்பதாகக் கூறினார்.

உங்கள் கட்சி மட்டும்தான் அறிவாளித்தனமாக செயல்படுகிறது என நினைக்கவேண்டாம் என்றும் அவர் காட்டமாக தெரிவித்தார்.

இலவசங்கள் தொடர்பான வழக்கில், ஆளும் கட்சியை சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி தனது வாய்மொழி கருத்துக்களால் விமர்சித்து இருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Views: - 425

0

0