தமிழகத்துக்கு கிடைத்த மிகப்பெரிய வாய்ப்பு… திமுக அமைச்சரால் பறிபோனது : அண்ணாமலை பகிரங்க குற்றச்சாட்டு!!

Author: Udayachandran RadhaKrishnan
8 October 2023, 10:43 am
df Updatenews360
Quick Share

தமிழகத்துக்கு கிடைத்த மிகப்பெரிய வாய்ப்பு… திமுக அமைச்சரால் பறிபோனது : அண்ணாமலை பகிரங்க குற்றச்சாட்டு!!

தமிழக பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் அண்ணாமலை தனது ட்விட்டர் எக்ஸ் தளத்தில், குலசேகரப்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் அமைக்கப்பட உள்ளது குறித்து பதிவிட்டுள்ளார்.

அதில், “பிரதமர் நரேந்திர மோடி குலசேகரப்பட்டினத்தில் இஸ்ரோவின் 2வது ராக்கெட் ஏவுதளத்துக்கு ஒப்புதல் அளித்துள்ளார். முதல் ராக்கெட் தளத்தையும் தமிழ்நாடு பெற்றிருக்க வேண்டும். ஆனால் திமுக முன்னாள் அமைச்சர் மதியழகனின் தவறான அணுகுமுறையால் அந்த வாய்ப்பு தவறிவிட்டது” எனக் கூறியுள்ளார்.

மேலும், “குலசேகரப்பட்டினம் ஏவுதளத்தின் வெளிப்புறச் சுற்றளவு தற்போது அறிவிக்கப்பட்டு, அது நிறுவப்பட்டதும், தமிழ்நாட்டில் உள்ள தூத்துக்குடி மாவட்டம் விண்வெளித் தொழில்களுக்கான மையமாக மாறும் என்று நாங்கள் நம்புகிறோம்” எனவும் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

ராக்கெட் ஏவுதளம் தமிழ்நாட்டில் நிறுவப்படுவதற்கு பிரதமரை பாராட்டியுள்ள அண்ணாமலை, அன்றைய திமுக அமைச்சர் மதியழகன் பற்றி விமர்சித்து திமுகவையும் சீண்டியுள்ளார்.

“1967 – 68 திமுக ஆட்சிக் காலத்தில் தமிழ்நாட்டிற்கு வந்திருக்க வேண்டிய ராக்கெட் ஏவுதளம், தற்போது பாரதப் பிரதமர் மோடி ஆட்சியில் வரவிருக்கிறது. ஆந்திர மாநிலம், ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள விண்வெளி ஏவுதளம், தமிழ்நாட்டிற்கு வந்திருக்க வேண்டும். மத்திய அரசிடம் இதை வலியுறுத்தி பெற, அன்றைய முதல்வர் அண்ணாதுரை, விஞ்ஞானி சதீஷ் தவானுடன் சந்தித்து பேச ஏற்பாடானது. ஆனால், முதல்வர் செல்லாமல் அன்றைய அமைச்சர் மதியழகனை அனுப்பினார்.

சதீஷ் தவான் பல மணி நேரம் காத்திருந்தார். மதியழகன் தள்ளாடிய நிலையில் வந்தார். சந்திப்புக்கு பின் வெளிய வந்த சதீஷ் தவான், இதற்கு மேல் தமிழ்நாடு வேண்டாம்; ஸ்ரீஹரிகோட்டாவில் விண்வெளி ஏவுதளம் அமைப்போம் என்று அறிவித்தார். இது தான் திமுகவின் வரலாறு. இந்த சம்பவம் பற்றி, புகழ்பெற்ற விஞ்ஞானி நம்பி நாராயணன், தன் சுயசரிதையான, ‘ரெடி டு பையர்’ என்ற புத்தகத்தில் எழுதியுள்ளார்.

அன்றிலிருந்து இன்று வரை, திமுகவின் ஊழலும், தேச விரோதப் போக்கும், மாறவே இல்லை. இப்போது 50 ஆண்டுகளுக்கு பின், இஸ்ரோ தமிழகம் நோக்கி வந்துள்ளது. புதிய ராக்கெட் ஏவுதளத்திற்கான நிலங்களை, குலசேகரப்பட்டினத்தில் கையகப்படுத்தும் பணி நடந்து வருகிறது. இப்போதும் திமுக ஆட்சி. இது, 1967 இல்லை என்பதை திமுக உணர்ந்து, இஸ்ரோவுக்கு ஒத்துழைப்பு தரவேண்டும்” என ஏற்கனவே ஒருமுறை அண்ணாமலை பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Views: - 277

0

0