பரபரப்பான அரசியல் சூழலில் நாளை கூடுகிறது தமிழக சட்டப்பேரவை ; பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ஆளுநர் உரை நிகழ்த்த ஏற்பாடு…

Author: Babu Lakshmanan
11 February 2024, 11:17 am

பரபரப்பான அரசியல் சூழலில் தமிழக சட்டப்பேரவை கூட்டம் நாளை கூடுகிறது.

ஆண்டுதோறும் சட்டப்பேரவையின் முதல் கூட்டம் ஆளுநரின் உரையுடன் தொடங்குவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டுக்கான முதல் கூட்டம் ஆளுநர் ஆர்என் ரவியின் உரையுடன் நாளை காலை 10 மணிக்கு கூடுகிறது. இதற்காக சபாநாயகர் அப்பாவு கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆளுநர் ஆர்என் ரவியை நேரில் சந்தித்து அழைப்பு விடுத்தார்.

காலை 9.57 மணிக்கு சட்டப்பேரவை வளாகத்திற்கு வரும் ஆளுநரை, சபாநாயகர் அப்பாவு மற்றும் சட்டசபை செயலாளர் சீனிவாசன் ஆகியோர் பூங்கொத்து கொடுத்து வரவேற்பார்கள். பின்னர், சிவப்பு கம்பள வரவேற்புடன், போலீசார் அணிவகுப்பு மரியாதையும் அவருக்கு வழங்கப்படுகிறது.

தொடர்ந்து, ஆளுநர் உரை நிகழ்த்துவார். பின்னர், சபாநாயகர் அறையில் அலுவல் ஆய்வு குழு கூட்டம் நடைபெறும். அதில், அவையை எத்தனை நாட்களுக்கு நடத்துவது என்பது குறித்து விவாதித்து முடிவு எடுக்கப்படும். அடுத்த வாரம் 19ம் தேதி பட்ஜெட் கூட்டத் தொடர் தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில், முக்கிய அறிவிப்புகள் ஆளுநரின் உரையில் இடம்பெறுமா..? என்பது குறித்து தெரிய வில்லை.

நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், தற்போதுள்ள அரசியல் சூழலில் இந்தக் கூட்டத்தொடர் மிகவும் பரபரப்பானதாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

  • tourist family negative review from valaipechu team படம் வர்ரதுக்கு முன்னாடியே நெகட்டிவ் விமர்சனம்; டூரிஸ்ட் ஃபேமிலி குறித்து வாய்விட்ட பிரபலம்!