ஆளுநர் பேச்சை எல்லாம் கேட்க முடியாது.. செந்தில் பாலாஜி விவகாரத்தில் CM ஸ்டாலின் கறார் ; தடபுடலாக அறிவிப்பு வெளியீடு..!!

Author: Babu Lakshmanan
17 June 2023, 8:50 am

சென்னை ; செந்தில் பாலாஜி விவகாரத்தில் ஆளுநர் ஆர்என் ரவியின் எதிர்ப்பை மீறி பரபரப்பான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறையினர் கைது செய்துள்ளனர். திடீர் நெஞ்சுவலி காரணமாக காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் அவரை ஜுன் 23ம் தேதி வரை காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கத்துறைக்கு சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

இதனிடையே, செந்தில் பாலாஜி வகித்து வந்த இலாகாக்களை அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, முத்துசாமியிடம் பகிர்ந்தளிக்க முதலமைச்சர் ஸ்டாலின் முடிவு செய்தார். இது தொடர்பாக ஆளுநர் ஆர்என் ரவிக்கு நேற்று கடிதம் அனுப்பினார். அதில், மின்சாரத் துறையை அமைச்சர் தங்கம் தென்னரசுக்கும், மது விலக்கு ஆயத்தீர்வை துறையை அமைச்சர் முத்துசாமிக்கும் கூடுதலாக அளிப்பதாக பரிந்துரையில் குறிப்பிட்டிருந்தார்.

அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு உடல்நிலை சரியில்லாததால் இலாகா இல்லாத அமைச்சராக தொடருவார் என்றும் அதில் குறிப்பிட்டிருந்தார்.

இதனைப் பெற்ற ஆளுநர் ஆர்என் ரவி, துறைகளை வேறு அமைச்சர்களுக்கு பகிரிந்தளிக்க ஒப்புதல் அளித்தாலும், கிரிமினல் குற்ற நடவடிக்கையில் கைது செய்யப்பட்டுள்ள செந்தில் பாலாஜியை, இலாகா இல்லாத அமைச்சராக நீடிப்பது தொடர்பான பரிந்துரையை ஏற்க மறுத்துவிட்டார்.

ஆனால், ஆளுநரின் எதிர்ப்பையும் மீறி தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில், இலாகா இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜி தொடருவார் என தெரிவித்துள்ளது. இதன்மூலம், தமிழக அரசு – ஆளுநர் இடையிலான மோதல் போக்கு தொடர்ந்து கொண்டே இருக்கிறது.

  • yogi babu explains about not attended gajaana audio release function பொய் பொய்யா பேசாதீங்க- தரக்குறைவாக பேசிய தயாரிப்பாளருக்கு யோகி பாபு பதிலடி!