தமிழகத்தில் ஆரியம் – திராவிடம் என்பது கிடையாது ; ஒரு அரசியல் கட்சித் தலைவரின் பிறந்த நாளுக்கு இப்படி செய்ய முடியுமா..? ஆளுநர் காட்டம்!

Author: Babu Lakshmanan
23 October 2023, 4:47 pm
Quick Share

திருச்சி ; நாட்டின் விடுதலைக்காக பாடுபட்ட சுதந்திரப் போராட்ட தியாகிகளை மக்கள் நினைவில் இருந்து அகற்றுவதற்கு மாநில அரசு முயற்சிப்பதாக ஆளுநர் ஆர்.என்.ரவி குற்றம்சாட்டியுள்ளார்.

இந்தியாவின் சுதந்திரத்திற்காக போராடி தங்களது இன்னுயிரை நீத்த, மாமன்னர்களான மருது சகோதரர்களின் நினைவு நாள் நிகழ்ச்சி, இன்று திருச்சியில் நடைபெற்றது. திருச்சி ராம்ஜிநகரில் உள்ள போட்டி தேர்வுகளுக்கான தனியார் பயிற்சி மையம் (NR IAS ACADEMY) மற்றும் ஜம்புத்தீவுப் பிரகடன ஒருங்கிணைப்புக் குழுவினர் இணைந்து ஏற்பாடு செய்திருந்த விழாவில், தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

பயிற்சி மைய இயக்குனர் விஜயாலயன் வரவேற்றார். கற்பக சுந்தர பாண்டியன் ஐஏஎஸ் உட்பட பலர் பங்கேற்றனர்.நிகழ்வில், மருது சகோதரர்களின் உருவப்படத்திற்கு மலர்கள் தூவி மரியாதை செலுத்திய ஆளுநர் ஆர்.என்.ரவி, 1000க்கும் மேற்பட்ட மாணவர்கள் மத்தியில் பேசியதாவது: நாட்டின் விடுதலைக்கான போராட்டம் முதல் முதலில் தொடங்கிய இடம் ஸ்ரீரங்கம் கோயில். நாட்டில் விடுதலைக்காக பாடுபட்டவர்கள் அவர்களது தியாகங்கள் அடுத்த தலைமுறைக்கு நினைவுபடுத்தக்கூடிய பணியில் ஒரு சிலர் ஈடுபட்டு வருகிறார்கள்.

நான் ஆளுநராக பதவியேற்றவுடன தமிழக அரசிடம் நாட்டின் விடுதலைக்காக பாடுபட்டவர்களின் பெயர் பட்டியலை கேட்டிருந்தேன். 40 பேர்களை மட்டும் தான் அவர்கள் எனக்கு தந்தார்கள். நான் பின்னர் எனது சொந்த முயற்சியில் தேடியபோது, 7,000 சுதந்திரப் போராட்ட வீரர்கள், தமிழ்நாட்டில் நாட்டின் விடுதலைக்காக போராடி இருப்பது தெரிய வந்தது.

கடந்த, 2012ம் ஆண்டு சிவகங்கையில் நடந்த ஒரு சிறிய கலவரத்தை தொடர்ந்து, இன்று வரை அக்டோபர் 23ம் தேதி முதல், 31ம் தேதி வரை, அங்கு மக்கள் இயல்பாக நடமாடுவதற்கு தடை உத்தரவை மாநில அரசு பிறப்பித்துள்ளது. சிவகங்கை பிரகடனம் குறித்த மருது சகோதரர்களின் தியாகம் மக்களால் கொண்டாடப்படக்கூடாது என்று தமிழக அரசு நினைக்கிறது.

ஒரு அரசியல் கட்சித் தலைவரின் நினைவு தினம்; பிறந்த தினம் என்றால் இப்படி இவர்களால் தடைபோட முடியுமா? நாட்டின் விடுதலைக்காக பாடுபட்ட சுதந்திரப் போராட்ட தியாகிகளை மக்கள் நினைவில் இருந்து அகற்றுவதற்கு மாநில அரசு முயற்சிக்கிறது. அதன் ஒரு பகுதியாக, தியாகிகள் பற்றி பள்ளிப் பாடப் புத்தகங்களில் இருந்த பாடங்களை நீக்க மாநில அரசு முயற்சிக்கிறது. சுதந்திரப் போராட்ட தியாகிகள் எந்த சமூகத்தில் இருந்து வந்தார்கள் என்பதிலிருந்து, அவர்களை சாதித் தலைவர்களாக அடையாளப்படுத்தி, மக்களை ஒன்றுபடவிடாமல் தடுக்கிறார்கள்.

பசும்பொன் முத்துராமலிங்க தேவர் சுதந்திர போராட்ட வீரர் மற்றும் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் உடன் இணைந்து சுதந்திரத்திற்காக பாடுபட்டவர். ஆனால், அவரை ஜாதிக் கட்சி தலைவர் போல அடையாளப்படுத்துகிறார்கள். தற்போது, தமிழக பள்ளிகளில் கூட மாணவர்கள் தங்களது ஜாதி அடையாளத்தை வெளிப்படுத்தும் வகையில் கயிறுகள் அணிந்து வருவது வேதனை அளிக்கிறது. இந்திய சுதந்திர தினத்தை கருப்பு நாளாக கடைப்பிடித்தவர்களை எல்லாம், இங்கு பெரிய தலைவர்களாக கொண்டாடுகிறார்கள்.

தற்போதும் லண்டன் அருங்காட்சியகத்திற்கு சென்று படித்தால் ஆங்கிலேயர்களுக்கு யாரெல்லாம் ஏஜெண்டுகளாக இருந்தார்கள் என்பதை நாம் தெரிந்து கொள்ள முடியும். ஆங்கிலேயர்கள் அனைத்தையும் ஆவணப்படுத்தி பாதுகாத்து வைத்திருக்கிறார்கள். அதனை மக்கள் தெரிந்து கொண்டால், சுதந்திரத்திற்காக பாடுபட்டவர்கள் யார்? இன்று நம்மை ஆள்பவர்கள் யார்? என்பது தெரியும்.

கடந்த ஆண்டு அக்டோபர் இரண்டாம் தேதி காந்தி ஜெயந்தியின் போது புகைப்பட கண்காட்சி நடத்தினார்கள். அதில், காந்தியடிகள் தமிழ்நாட்டிற்கு, 18 முறை வந்ததை நினைவுபடுத்தும் வகையிலான புகைப்படங்கள் இடம் பெற்றிருந்தன. அதில் திராவிட இயக்க கருத்தியலை கொண்ட ஒருவர் கூட இல்லை. எனவே அந்தப் புகைப்பட கண்காட்சியை இந்த முறை அவர்கள் நடத்தவில்லை.

மகாத்மா காந்தி, பகத்சிங், வல்லபாய் பட்டேல், சுபாஷ் சந்திரபோஸ் உள்ளிட்டோர் தமிழ்நாட்டில் பிறந்திருந்தால், அவர்களையும் சாதிச் சங்க தலைவர்களாக மாற்றி இருப்பார்கள். லண்டனில் பள்ளிப் படிப்பை பாதியில் விட்ட, 17வயது சிறுவன் ராபர்ட் கால்டுவெல் தான் திராவிடம் என்றும் பிரித்துக் கூறியவர். அவரைத்தான் திராவிட கருத்தியலின் தந்தை என்று இவர்கள் போற்றுகிறார்கள். இந்தியாவை பிரித்தாளும் கொள்கைக்காகவே கால்டுவெல் போன்றவர்களை இந்தியாவிற்கு அனுப்பி வைக்கப்பட்டார்கள்.

தமிழகம் புண்ணிய பூமி; சித்தர்கள், முனிவர்கள் வாழ்ந்த பூமி. இங்கு ஆரியம்- திராவிடம் என்பது கிடையாது. கல்லூரியில் ஒரு பேராசிரியர் வேலைக்காக ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்டோர் திராவிடம் என்ற தலைப்பில் ஆராய்ச்சி படிப்பை மேற்கொண்டு இருக்கிறார்கள். அதன் மூலம் அவர்கள் வேலையும் பெற்றிருக்கிறார்கள்.

அறிவில் சிறந்த அவர்கள், மருது சகோதரர்கள் போன்ற போற்றதலுக்குரிய யாரையும் தங்களது ஆராய்ச்சி படிப்பிற்கு தலைப்பாக எடுத்துக் கொள்ளவில்லை. ஆனால், சமூகத்தின் அடிமட்டத்தில் உள்ள சிலர்தான் மருது சகோதரர்கள் போன்ற தியாகத் தலைவர்களை உலகத்திற்கு அடையாளம் காட்டியிருக்கிறார்கள், என கூறினார்.

Views: - 373

0

0