ஒரு நாள் மழைக்கே ஆட்டம் கண்ட தலைநகரம் : வெள்ளம் தேங்கியதால் மக்கள் கடும் அவதி… தமிழக அரசுக்கு கோரிக்கை!!

Author: Udayachandran RadhaKrishnan
29 September 2022, 8:36 am
Chennai Rain - Updatenews360
Quick Share

சென்னையில் நேற்று பெய்த ஒரு நாள் மழைக்கே, பிரதான சாலைகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடி தேங்கியது. போக்குவரத்து பாதிப்பால் மாநகரம் திணறியது. ஒரு நாள் மழைக்கே இந்த கதி என்றால், விரைவில் துவங்க உள்ள வடகிழக்கு பருவ மழைக்கு தப்புமா என்ற சந்தேகத்தை எழுப்பியுள்ளது.

சென்னையின் பல்வேறு பகுதிகளில், நேற்று பிற்பகல் மிதமானது முதல் கன மழை வரை பெய்தது. இதில், கோடம்பாக்கம் மண்டலம் அசோக் நகர் ஐந்தாவது அவென்யூ, 26வது தெருவில் சாலை முழுதும் தண்ணீர் தேங்கி குளம் போல் காட்சியளித்தது. தாழ்வான பகுதியில் உள்ள வீடுகளிலும் வெள்ளம் புகுந்தது.

இப்பகுதியில் 10 ஆண்டுகளுக்கு மேலாக, ஒவ்வொரு மழைக்காலத்திலும் வெள்ளம் தேங்கி வருவதாக மக்கள் வேதனைதெரிவித்தனர்.மழை காரணமாக, நேற்று மாலை அசோக் நகர் – வடபழநி 100 அடி சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

அதேபோல், அடையாறு மண்டலம் வேளச்சேரி, தரமணி, கிண்டி பகுதிகளிலும், சோழிங்கநல்லுார் மண்டலம் துரைப்பாக்கம், காரப்பாக்கம், செம்மஞ்சேரி பகுதிகளிலும் மழைநீர் தேங்கி பாதிப்பு ஏற்பட்டது. தேனாம்பேட்டை மண்டலம் திருவல்லிக்கேணி, மந்தைவெளி பகுதிகள் பாதிக்கப்பட்டன.

திருவொற்றியூரில், ஜோதி நகர், ராமநாதபுரம், சரஸ்வதி நகர், எர்ணாவூர் ஆதி திராவிட காலனி உள்ளிட்ட பகுதிகளில் வெள்ளம் தேங்கியது. மேலும் திருநின்றவூர் நகராட்சிக்கு உட்பட்ட கிருஷ்ணாபுரம் பகுதி, அண்ணா நகர் மண்டலம் சிட்கோ நகர் பகுதிகள் பாதிக்கப்பட்டன.

ராயபுரம் மண்டலத்தில், பிராட்வே, பிரகாசம் சாலை, கொடுங்கையூர் உள்ளிட்ட பல பகுதிகள் பாதிக்கப்பட்டன.வண்ணாரப்பேட்டை, வால்டாக்ஸ் சாலை பகுதிகளிலும் தண்ணீர் தேங்கி வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்தனர்.

Views: - 426

0

0