இதெல்லாம் ஏமாத்து வேலை… உங்க பேச்சுக்கு மக்கள் மயங்க மாட்டாங்க : அமித்ஷாவுக்கு திருமாவளவன் பதில்!!

Author: Udayachandran RadhaKrishnan
12 June 2023, 9:24 am
Thiruma - Updatenews360
Quick Share

சென்னை அடுத்த கோவிலம்பாக்கத்தில் உள்ள திருமண மண்டபத்தில் நடந்த தென்சென்னை மக்களவை தொகுதி பாஜக நிர்வாகிகள் உடனான ஆலோசனை கூட்டம் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில் நடைபெற்றது.

அப்போது நிர்வாகிகளின் மத்தியில் பேசிய அமித் ஷா, சென்னை விமான நிலையத்தை விட்டு நான் வெளியேறியபோது மின் தடை ஏற்பட்டது. இந்த இருளை கண்டு அச்சப்பட தேவையில்லை. தமிழகம் இருளில் இருப்பதை இந்த மின் தடை காட்டுகிறது. தமிழகத்துக்கு பாஜக வெளிச்சத்தை கொடுக்கும்.

மக்களவை தேர்தலில் தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி 25 தொகுதிகளில் வெற்றிபெற வேண்டும் என்று இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வரும் தேர்தலில் பாஜக 300 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெறும். மோடி மீண்டும் பிரதமர் ஆவார்.

தமிழகத்தில் முதல்வர் ஆகவேண்டும் என்று மட்டும் நினைக்காமல், தமிழகத்தில் இருந்து ஒருவர் இந்த நாட்டின் பிரதமராக வரவேண்டும் என நினைக்க வேண்டும். ஏழை குடும்பத்தில் பிறந்த ஒருவரை பிரதமராக்க வேண்டும். இதை பாஜகவால்தான் செய்ய முடியும்.

இதற்கு அனைவரும் உறுதி ஏற்க வேண்டும். கடந்த காலத்தில் தமிழகத்தில் இருந்து 2 பேருக்கு பிரதமர் ஆகும் வாய்ப்பு இருந்தும் நடக்கவில்லை. இதற்கு திமுக தான் காரணம் என மத்திய உள்துறை அமித்ஷா குற்றம்சாட்டியிருந்தார்.

இந்நிலையில், திருவள்ளூரில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த தொல்.திருமாவளவன், தமிழ்நாட்டில் இருந்து ஒரு பிரதமரை உருவாக்குவோம் என அமித்ஷா பேசியிருப்பது மக்களை ஏமாற்றுவதற்கான செயல்.

உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் பேச்சுக்கு தமிழர்கள் மயங்க மாட்டார்கள். கர்நாடகாவில் பிரதமர் 5 இடங்களில் பரப்புரை செய்தும் பாஜகவால் ஆட்சியை கைப்பற்ற முடியவில்லை.

தமிழக வாக்காளர்கள் பக்குவம் அடைந்தவர்கள். நாடாளுமன்ற தேர்தலை திமுக கூட்டணியில்தான் விடுதலை சிறுத்தைகள் கட்சி சந்திக்கும் என திருமாவளவன் திட்டவட்டமாக கூறியுள்ளார்.

Views: - 252

0

0