சென்னை மாநகராட்சி உதவி பொறியாளர் மீது தாக்குதல்: திருவொற்றியூர் திமுக எம்எல்ஏவின் கட்சி பதவி பறிப்பு…துரைமுருகன் அறிவிப்பு..!!

Author: Rajesh
28 January 2022, 11:21 am
Quick Share

திருவொற்றியூர் எம்எல்ஏ கே.பி.சங்கர் கட்சி கட்டுப்பாட்டை மீறி வருவதால் திருவொற்றியூர் திமுக மேற்கு பகுதிச் செயலாளர் பொறுப்பிலிருந்து விடுவிக்கப்படுவதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.

திமுகவின் மீனவர் அணி செயலாளராக இருந்து வந்தார் கே.பி.பி. சாமி. 2006-2011ல் தமிழக மீன்வளத்துறை அமைச்சராகவும் கே.பி.பி. சாமி பணியாற்றினார். இதனையடுத்து, உடல்நலக்குறைவால் கே.பி.பி.சாமி உயிரிழந்தார்.

பின்னர், நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் கே.பி.பி. சாமியின் சகோதரரான கே.பி.சங்கருக்கு முதல்முறையாக திருவொற்றியூர் சட்டமன்ற தொகுதியில் சீமானை எதிர்த்து போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டது. கடும் போட்டிகளுக்கு இடையே பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் சீமானை வீழ்த்தி கே.பி.சங்கர் வெற்றி பெற்றார்.

இதனையடுத்து, அப்பகுதியில் தொடர்ந்து ரவுடிசம், மற்றும் கட்டப்பஞ்சாயத்து செய்து வந்ததாக தொடர் புகார்கள் எழுந்தது. இவரது செயல்பாடுகள் கட்சியினர் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியது.

இந்த புகார்கள் தலைமைக்கு கொண்டு செல்லப்பட்டது. மேலும், திமுக எம்.பி. கனிமொழியின் தீவிர ஆதரவாளராக கே.பி.சங்கர் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. உள்ளாட்சி தேர்தலில் கனிமொழி ஆதரவாளர்களுக்கும், தனக்கு சாதகமானவர்களுக்கு வாய்ப்பு வழங்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகின.
இந்நிலையில், திமுக எம்எல்ஏ கே.பி.சங்கர் கட்சி சென்னை மாநகராட்சி உதவி பொறியாளரை தாக்கியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதனையடுத்து, அவர்மீது திமுக கட்சி ஒழுங்கு நடவடிக்கை எடுத்துள்ளது.

இதுதொடர்பாக திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், திருவொற்றியூர் சட்டமன்ற உறுப்பினர் கே.பி. சங்கர் கட்சியின் கட்டுப்பாட்டை மீறியதால் திருவொற்றியூர் மேற்குப் பகுதிக் கழகச் செயலாளர் பொறுப்பிலிருந்து விடுவிக்கப்படுவதாக தெரிவித்துள்ளார். அவரது பதவி பறிப்பு ஆதரவாளர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Views: - 1520

0

0