காங்கிரசுடன் சேர்ந்து வாக்கு வங்கி அரசியல் செய்யும் திமுக… விவசாயிகளுக்காக குரல் கொடுக்காதது வேதனை ; ஜிகே வாசன் குற்றச்சாட்டு..!!

Author: Babu Lakshmanan
24 April 2024, 2:44 pm
Quick Share

மேகதாது அணை கட்டினால் டெல்டா பகுதி பாலைவனம் ஆகிவிடும் என்றும், விவசாய பெருங்குடி மக்களுக்கு இது பயிர் பிரச்சனை மட்டுமல்ல, உயிர் பிரச்சனை என்று தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜிகே வாசன் தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடியில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி நிர்வாகியின் இல்ல நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே வாசன் சென்னையில் இருந்து விமானம் மூலம் தூத்துக்குடி வாகை குளம் விமான நிலையம் வருகை தந்தார்.

மேலும் படிக்க: பிரதமர் என்பதையே மறந்துட்டாரு மோடி… காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தவுடன் சும்மா விடமாட்டோம் ; செல்வப்பெருந்தகை சூளுரை!!

அப்போது அங்கு செய்தியாளர்களை சந்தித்து அவர் கூறியதாவது :- நாடாளுமன்ற தேர்தல் முதல் கட்டமாக இந்தியாவில் நடந்து முடிந்து, 7 கட்டங்களில் இரண்டாவது கட்டம் நடைபெற இருக்கிறது. இந்த சூழலில் இந்தியா முழுவதும் தேசிய ஜனநாயக கூட்டணி உடைய வெற்றி மிகப் பிரகாசமாக இருக்கிறது. குறிப்பாக, இந்தியா கூட்டணியை பொருத்தவரையில் முரண்பாடு உடைய மொத்த வடிவம் உருவம் என்று நாங்கள் கூறினோம். மாறாக நேற்றைய தினம் கேரள மாநிலத்தினுடைய முதல்வர் இந்தி கூட்டணியே அல்ல என்று உறுதிப்படுத்தி இருக்கின்றார். மேலும், தலைமை இல்லாத முரண்பாடான கூட்டணி நாட்டினுடைய பாதுகாப்பிற்கும், வளர்ச்சிக்கும், வாக்காளர்களுக்கும் ஒருபோதும் நம்பிக்கை அளிக்க முடியாது என்பதை இங்கு குறிப்பிட விரும்புகின்றேன்.

தமிழகத்தில் போதை பொருள் நடமாட்டம் அதிகரித்து கொண்டு இருப்பது கவலை அளிக்கின்றது. குறிப்பாக, ஒரு வாரத்தில் நான்கு மாவட்டங்களில் பல சம்பவங்கள் நடந்து இருப்பதை தொலைக்காட்சியிலும் பத்திரிக்கையிலும் பார்த்து வேதனையாக இருக்கின்றது. போதை பொருள் நடமாட்டத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும் அரசாக தமிழக அரசு செயல்பட தவறி இருக்கின்றது.. ஆக்கப்பூர்வமான பணியை முற்றுப்புள்ளி வைக்கின்ற பணியை செய்யவில்லை. அதன் காரணமாக சட்டம், ஒழுங்கு மேலும் தமிழகத்தில் சீர்கெட்டு கொண்டு இருக்கின்றது.. அரசு தயவு செய்து விழித்துக் கொள்ள வேண்டும்.

இளைஞர்கள் தவறான பாதைக்கு சென்று கொண்டிருக்கின்றார்கள். மீண்டும் பள்ளி, கல்லூரிகள் துவங்குவதற்கு முன் இதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். மேலும், இது அவர்களுடைய கடமை என்பது பெற்றோர்களுடைய கருத்தாக உள்ளது, மக்களுடைய எண்ணமாக இருக்கின்றது. பறவைகாய்ச்சல் தடுப்பதற்காக அனைத்து பணிகளையும் சுகாதாரத்துறை மேற்கொள்ள வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி சார்பில் கேட்டுக் கொள்ள விரும்புகின்றேன்.

மேகதாது அணை குறித்து சர்வ சாதாரணமாக அறிக்கையின் மூலம் கர்நாடக மாநிலத்தின் முதல்வரும், துணை முதல்வரும் வெளிப்படையாக பேசுவது மிகவும் வேதனைக்குரிய ஒன்றாகும். தமிழகத்தில் மேகதாது அணை கட்டினால் இங்கு டெல்டா பகுதியில் பாலைவனம் ஆகிவிடும் என்பதில் மாற்று கருத்து கிடையாது. விவசாய பெருங்குடி மக்களுக்கு இது பயிர் பிரச்சனை மட்டுமல்ல, உயிர் பிரச்சனை, திமுக ஆட்சியாளர்கள் எந்தவிதமான ஒரு ஆக்ரோஷமான பதிலையும் நம்முடைய விவசாய பெருங்குடி மக்களுக்காக ஒலிக்கவில்லை என்றால், நிச்சயமாக கூட்டணி அரசியல் வாக்கு வாங்கிக்காக வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பது மிகவும் வருத்தமான செய்தி. விவசாயிகள் பக்கம் ஆளுகின்ற ஆட்சியாளர்கள் இல்லை என்பதை எடுத்துக்காட்டாக அமைந்து இருக்கின்றது.

நாட்டு மக்களின் சொத்துக்களை ஆய்வு செய்வது என்பது தேர்தல் வாக்கு வங்கி அரசியலுக்காக காங்கிரஸ் சொல்வதாக மக்கள் கருதுகின்றார்கள். மத்தியில் பாஜக அரசும் சரி, பிரதமரும் சரி வேற்றுமையில் ஒற்றுமை காண்பது தான் இந்தியா என்ற உணர்வோடு இந்து, முஸ்லீம், கிறிஸ்தவர்கள் என்று பார்க்காமல் நாட்டை ஆண்டு கொண்டிருக்கின்றார்கள். மேலும் அனைவருக்கும் பொது நாட்டினுடைய ஒட்டுமொத்த வளர்ச்சி மற்றும் நாட்டினுடைய பாதுகாப்பு என்பதற்கு எடுத்துக்காட்டாக தங்களுடைய பணியை செய்து கொண்டிருக்கின்றார்கள். அம்பேத்கர் அரசியல் அமைப்புச் சட்டத்தின் பின்பற்றுவதை மத்திய அரசு குறிக்கோளாக வைத்திருக்கின்றது.

பேருந்தில் தானியங்கி கதவுகள் அமைக்க வேண்டும் மதுரை ஐகோர்ட் உத்தரவு கொடுத்து இருப்பது வரவேற்கத்தக்க ஒன்றாகும். விபத்துக்கள் குறையும். பாதுகாப்பான முறையில் மாணவர்களும் பொது மக்களும் பயணம் செய்வதற்கு ஏதுவாக இருக்கும் என்பது எனது கருத்து, மக்களுடைய எண்ணங்களுக்கு மாறாக வடலூரில் சத்தியநாத சேவை சர்வதேச மையம் என்ற பெயரில் கொண்டு வருவது ஏற்புடையது அல்ல, தொடர்ந்து ஆண்டாண்டு காலமாக அன்னதானம் செய்யும் பணி சிறப்பாக நடந்து கொண்டிருக்கிறது பக்தர்களுக்கு விருப்பமில்லாத பணியை மத்திய அரசு தொடரக்கூடாது என்பதை தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி கேட்டுக் கொள்கின்றது…

நான் அமைச்சராக இருந்தபோது தூத்துக்குடி துறைமுகத்திற்கு பல்வேறு நிலையில் உயர்த்தக்கூடிய திட்டங்கள் கொண்டு வந்தது உண்மைதான். பாஜக அரசு அதனை பெருமை சேர்க்கின்றது. ஒவ்வொரு துறையிலும் வளர்ச்சிக்கு உண்டான நேரம் இருக்கின்றது. பாஜக ஆட்சியில் தங்கு தடையின்றி ஒரு காலகெடுவில் திட்டங்கள் நிறைவேற்றுக்கிறது.

பொதுவாகவே தமிழகத்தை எடுத்துக் கொண்டால் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி வாய்ப்பு பல இடங்களில் அதிகரித்து கொண்டுள்ளது. மேலும் எங்களுடைய சதவீதம் எதிர்பார்ப்புக்கு மேல் தாண்டும் என்ற நம்பிக்கை உள்ளது. தூத்துக்குடி தொகுதியில் எதிர்மறை வாக்கு எங்களுடைய வெற்றிக்கு காரணமாக இருக்கும் என்பதை முழுமையாக நம்புகின்றேன். மேலும் மத்திய அரசினுடைய தொடர் திட்டங்களை அதற்கு உரிய சாதனைகள் அதற்குரிய பொருளாதார வளர்ச்சி நாட்டினுடைய பாதுகாப்பு இதைத்தான் வாக்காளர்கள் மையமாக வைத்து வாக்களித்து இருக்க வேண்டும் என்பது என்னுடைய கணிப்பு, ஒவ்வொரு வாக்கு சாவடிகளும் நூற்றுக்கணக்கானோருக்கு வாக்கு இல்லை. இது ஜனநாயகத்திற்கு ஒருபோதும் ஏற்புடையது அல்ல. தமிழகத்தின் தேர்தல் ஆணையம் இதற்கு பொறுப்பேற்க வேண்டும் என்பது எங்களுடைய எண்ணம், என்றார்..

Views: - 115

0

0

Leave a Reply