2 நிமிடம் தாமதம்… குரூப் 2 தேர்வர்களுக்கு அனுமதி மறுப்பு… கனவை இழந்து சோகத்துடன் திரும்பிய நிகழ்வு..!!

Author: Babu Lakshmanan
21 May 2022, 11:43 am
Quick Share

குரூப் 2 போட்டித் தேர்வு எழுத 2 நிமிடங்கள் தாமதமாக வந்த தேர்வர்களை, அதிகாரிகள் திருப்பி அனுப்பி வைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு 2, 2ஏ பதவிகளுக்கான முதல் நிலைத் தேர்வு மாநிலம் முழுவதும் நடைபெறுகிறது. கரூர் மாவட்டத்தில் 59 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. கரூர் கோட்டம், குளித்தலை கோட்டம் என 2 கோட்டங்களாக பிரிக்கப்பட்டு 17,111 பேர் போட்டித் தேர்வுகளை எழுதுகின்றனர்.

துணை ஆட்சியர் நிலையில் 8 பறக்கும் படைகளும், பாதுகாப்பிற்காக ஒவ்வொரு மையத்திலும் போலீசார் நிறுத்தப்பட்டுள்ளனர். வீடியோ கேமராக்கள் மூலம் வீடியோ பதிவு செய்யப்பட்டு வருகிறது. இதில் 880 அலுவலர்கள், பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.

கரூர் மாநகராட்சிக்கு சொந்தமான மாநகராட்சி மேல்நிலைப் பள்ளியில் தேர்வு மையம் அமைக்கப்பட்டுள்ளது. காலை 8.30 மணி முதல் தேர்வு எழுத வந்தவர்கள் தங்கள் அறையை தேடிச் சென்று தனது இருக்கையில் அமர்ந்து தேர்வு எழுத தயாராகினர். அவர்களுக்கு வினாத் தாள்கள் பிரிக்கப்பட்டு 9 மணிக்கு வினாத்தாள்கள் வழங்கி தேர்வு எழுத தயாராகினர்.

அதில் ஒரு சிலர் காலை 9.02 மணிக்கு பள்ளிக்கு வந்த அவர்கள் தேர்வு எழுத அனுமதி கேட்டனர். தேர்வு துவங்கி விட்டதால் அனுமதிக்க முடியாது எனக் கூறி தேர்வர்களை, அதிகாரிகள் திருப்பி அனுப்பினர். நுழைவு வாயில் மூடப்பட்டும் தேர்வெழுத வந்தவர்கள் அனுமதி மறுக்கப்பட்டதால் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.

மேலும் மாநகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் கணவருடன் தேர்வு எழுத வந்த மனைவியை கால தாமதம் என்று கூறியதோடு, 9.02க்கு வந்ததால் உள்ளே தேர்வு எழுத அனுமதி இல்லாததால் கணவர் கடும் வாக்கு வாதத்தில் ஈடுபட்டார். இதனால் அப்பகுதியில் சுமார் 10 நிமிடம் பரபரப்பு ஏற்பட்டது

Views: - 727

0

0