குரூப் 4 தேர்வில் முறைகேடு..? இளைஞர்களின் கடின உழைப்பை வீணாக்காதீங்க.. தமிழக அரசுக்கு அண்ணாமலை விடுத்த கோரிக்கை..!!

Author: Babu Lakshmanan
27 March 2023, 4:53 pm
Quick Share

டிஎன்பிஎஸ்சி தேர்வில் மிகப்பெரிய முறைகேடு நடந்திருப்பது உறுதி செய்யப்பட்டால், மீண்டும் மறுதேர்வு நடத்த தமிழக அரசு முன்வர வேண்டும் என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.

டிஎன்பிஎஸ்சி எனப்படும் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் சார்பில் 2022ஆம் ஆண்டு நவம்பர் மாதம் நடைபெற்ற நில அளவர் மற்றும் வரைவாளர் தேர்வில், சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் அமைக்கப்பட்ட தேர்வு மையத்தில் தேர்வு எழுதியவர்களில் 700 பேருக்கு மேல் தேர்ச்சி பெற்றுள்ளனர். ஒரு தேர்வு மையத்தில் இத்தனை பேர் தேர்ச்சி பெற்றிருப்பது முறைகேடுகள் நடத்திருக்கலாம் என்ற சந்தேகத்தைக் கிளப்பியுள்ளது. தமிழக அரசியல் கட்சி தலைவர்களும் இது தொடர்பாக கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.

இதன் ஒருபகுதியாக, டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு முறைகேடு குறித்து சட்டசபையில் எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தார். அப்போது, டிஎன்பிஎஸ்சி தேர்வில் மிகப்பெரிய ஊழல், தவறு நடந்துள்ளதாகவும், டிஎன்பிஎஸ்சி தேர்வு முறைகேடுகள் குறித்து தமிழ்நாடு அரசு உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும், எனக் கேட்டுக் கொண்டார்.

இந்த நிலையில், குரூப் 4 தேர்வில் மிகப்பெரிய முறைகேடு நடந்திருப்பது உறுதி செய்யப்பட்டால், மீண்டும் மறுதேர்வு நடத்த தமிழக அரசு முன்வர வேண்டும் என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், “தமிழ்நாடு அரசுப் பணித் தேர்வாணையம் நடத்திய குரூப் 4 தேர்வு முடிவுகளில் பெரும் முறைகேடுகள் நடந்திருப்பதாகக் குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது. ஒரே பயிற்சி மையத்திலிருந்து 2000 பேர் தேர்ச்சி பெற்றுள்ளதாக வந்த தகவல் பல ஆயிரம் இளைஞர்களின் கடின உழைப்பை வீணாக்கியிருக்கிறது.

ஏற்கனவே நில அளவர் தேர்வில், காரைக்குடி மையத்திலிருந்து 700 பேர் வெற்றி பெற்ற நிகழ்வின் பின்னணியில் விசாரணை நடத்தவிருப்பதாக ஆணையம் தெரிவித்த நிலையில், தேர்வு நடந்து எட்டு மாத கால காத்திருப்புக்குப் பிறகு வெளிவந்துள்ள குரூப் 4 தேர்வு முடிவுகளிலும் முறைகேடுகள் என்பது அரசுப் பணிக்காக அயராது உழைத்த தமிழக இளைஞர்களை அவமதிப்பது போலாகும்.

உடனடியாக, தமிழக அரசு தீவிர விசாரணை நடத்தி, தேர்வு முடிவுகளில் முறைகேடுகள் நடந்திருந்தால், மறு தேர்வு நடத்த முன்வர வேண்டும் என்றும், அரசுப் பணிக்காகக் காத்திருக்கும் பல்லாயிரம் இளைஞர்களுக்கான வாய்ப்பினை உறுதி செய்ய வேண்டும் என்றும் தமிழக பாஜக சார்பாக வலியுறுத்துகிறேன்,” எனக் குறிப்பிட்டுள்ளார்.

Views: - 315

0

0