தமிழகத்தில் 44 காவல்துறை அதிகாரிகள் இடமாற்றம் : சட்டம் ஒழுங்கு பாதிப்பு எதிரொலி? தமிழக அரசு போட்ட ஸ்ட்ரிக்ட் ஆர்டர்!!

Author: Udayachandran RadhaKrishnan
5 June 2022, 7:13 pm

தமிழகத்தில் 44 காவல்துறை அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

தமிழக காவல்துறையில் 44 காவல் துறை அதிகாரிகள் இன்று இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அது தொடர்பாக உத்தரவை தமிழக உள்துறை செயலர் எஸ்.கே.பிரபாகர் பிறப்பித்துள்ளார்.

குறிப்பாக தாம்பரம் காவல் ஆணையராக இருந்த ரவி கடந்த 31ஆம் தேதியோடு ஓய்வு பெற்ற பிறகு யாரையும் பணி அமர்த்தாமல் இருந்தது. இந்நிலையில் ஏடிஜிபி அமல்ராஜை தாம்பரம் காவல் ஆணையராக நியமிக்கப்ட்டுள்ளார். மேலும் தமிழ்நாடு போலீஸ் அகாடமி இயக்குனர் பொறுப்பையும் கூடுதலாக கவனிக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

ஜூனியர் விகடன் குழுமம் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது, சிந்தாதிரிப்பேட்டையில் பாஜக நிர்வாகி கொலை செய்யப்பட்டது உள்ளிட்ட சம்பவங்களை சரியாக கையாளவில்லை என்ற குற்றச்சாட்டில் சிக்கிய ஐஜி கண்ணன் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டார்.

இந்நிலையில் கண்ணனை ஆயுதப் படை பிரிவு ஐஜியாக நியமித்து உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் வடக்கு மண்டல ஐஜி ஆக சென்னை மத்திய குற்றப்பிரிவு கூடுதல் ஆணையராக இருந்த தேன்மொழி பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். மத்திய மண்டல ஐஜியாக சந்தோஷ் குமார் நியமிக்கப்பட்டுள்ளார்.

கோவை காவல் ஆணையராக பாலகிருஷ்ணனும், நெல்லை காவல் ஆணையராக அவினாஷ் குமாரும் நியமிக்கப்பட்டுள்ளனர். சென்னை மத்திய குற்றப்பிரிவு கூடுதல் ஆணையராக மகேஸ்வரி பணியமர்த்தப்பட்டுள்ளார்.

முக்கியமாக 8 ஐபிஎஸ் அதிகாரிகள் மாற்றப்பட்டுள்ள நிலையில் மேலும் 36 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அந்த அடிப்படையில் சென்னை கீழ்ப்பாக்கம், வண்ணாரப்பேட்டை அண்ணாநகர் ஆகிய மாவட்டங்களில் உள்ள துணை ஆணையர்கள் மாற்றப்பட்டுள்ளனர்.

மேலும் சென்னையில் சைபர் கிரைம் புகார்கள் அதிகமாக வருவதை அடுத்து அதற்காக மத்திய குற்றப்பிரிவில் தனியாக துணை ஆணையர் பதவி உருவாக்கப்பட்டது. அந்த துணை ஆணையர் பதவியில் தேஷ்முக் சேகர் சஞ்சய் ஐபிஎஸ் அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளார்.

இதேபோன்று திருச்சி மாநகரத்தின் தலைமை இடத்திற்கு புதிதாக துணை ஆணையர் பதவி உருவாக்கப்பட்டு சுரேஷ் குமார் என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் வெளிநாடு வாழ் இந்தியர்கள் பிரிவு ஒன்று புதிதாக உருவாக்கப்பட்டு அதற்கு எஸ்பியாக சண்முகப்பிரியா ஐபிஎஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.

கரூர், மதுரை, திண்டுக்கல், திருவாரூர், ராமநாதபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களிலும் எஸ்பிக்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

  • enforcement department raid on allu aravind house பண மோசடி புகார்! அல்லு அர்ஜூனின் தந்தை வீட்டில் அமலாக்கத்துறை தீடீர் சோதனை?